Thursday, May 15, 2014

தேர்வு முடிவு

செய்தி ஊடகங்கள் கேடுகெட்டுப் போய் கிடக்கின்றன என்பதற்கு தற்போது நடக்கும் சம்பவங்களே சாட்சி. போன வருடத்திலிருந்தே மாதாமாதம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலும் முடிந்துவிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வந்துவிட்டன. ஆனால் எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில், கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டன. போன தேர்தலில் சொன்னது போலவே, தற்போது எல்லா கருத்துக்கணிப்புகளும் பாஜக பெருமளவு வெற்றி பெரும் என்கின்றன. இதற்கும் ஒருபடி மேலே போய், யார்யார் பாஜக அமைச்சரவையில் உள்ளனர் என்று செய்தி ஊடகங்கள் விவாதிக்க துவங்கிவிட்டன. யாருடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க. ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____  வேணும்னு சொன்னானான்.

அடுத்து, தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே மோடிக்கு இவர்களே பிரதமராக பதவிப் பிரமானம் செய்து வைத்துவிடுவார்கள் என நினைக்கிறேன். ஒன்றுக்கும் உதவாத இக்கருத்துக்கணிப்புகளை முதலில் ஒழிக்க வேண்டும். ஜோதிடம், குதிரை பந்தயத்தை விட கேவலமானது இது.

தமிழநாட்டில் 2009-ல் ஜெயலலிதா அதிக இடங்களில் வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைத்தேன். வெற்றி பெறவில்லை. 2011-ல் கருணாநிதி முதலமைச்சராக வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைத்தேன். வெற்றி பெறவில்லை. இப்போது ஜெயலலிதா வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைக்கிறேன். நாம் நினைப்பது எங்கே நடக்கிறது.

"நல்லவர் நினைப்பது ஒன்று தான் நடப்பதில்லை இத்தமிழ்நாட்டிலே". இதை அடியேன் சொல்லவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் சொல்லுவார்.

**********************************************************************************

இது போன்ற கோடைக்கால விடுமுறைகளில் என் அம்மாவிற்கு எழுத்துப்பணி, மாணவர் சேர்க்கை போன்ற வேலைகள் இருக்கும். அச்சமயங்களில்  நானும் என் அண்ணனும் பாட்டி வீட்டில் இருப்போம். அப்படி ஒருநாள். மதியநேரம் இரண்டு மனி இருக்கும். நான் மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் வழக்கம் போல, ஈயை அடித்து எறும்பு புற்றுக்குள் போட்டுக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம். திரும்பிப்பார்த்தால், வீட்டின் பின்புறம் இருந்த ஓலைக் கொட்டகை தரையோடு வீழ்ந்து கிடந்தது. என் பாட்டி உடனே ஓடிச்சென்று பார்த்தார். நானும் அவர் பின்னே ஓடினேன். அங்கே என் அண்ணன் கழுத்தில் மாட்டுக்குப் போடும் மூக்கணாங்கயிற்றுடன் விழுந்து கிடந்தான். என் பாட்டியின் ஓவென்ற அலறல் கேட்டவுடன், என் மாமாவும் சற்று நேரத்தில் வந்துவிட்டார். என் அண்ணனின் கழுத்தில் இறுகி இருந்த கயிற்றை கழற்றி வீசிவிட்டு, அவனை தூக்கிச் சென்று வெளியே போடப்பட்டு இருந்த கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்தார்.

என் அண்ணன் முகமெல்லாம் சிவந்து குளிர் காய்ச்சல் வந்ததுபோல் நடுங்கிக்கொண்டு ஒடுங்கி படுத்திருந்தான். அண்ணன் கழுத்தில் சிவப்பான கோடு போல் வீங்கி இருந்தது. என் பாட்டி, மாமா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள். நான் மட்டும் ஏன் அழுகிறேன் என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தேன். கொஞ்சம் விபூதியைக் கொண்டுவந்து அண்ணன் நெற்றியிலும் நெஞ்சிலும் பூசிவிட்டு "ஐயா முருகா! நாங்க என்ன பாவம் செஞ்சோம்" என்று சாமிப் படத்தைப் பார்த்து நெஞ்சில் அடித்து என் பாட்டி அழுது கொண்டிருந்தார். "என்ன ஆச்சி மாமா! அண்ணனுக்கு" என்று கேட்டேன். "தூக்குல தொங்க பாத்துகீராண்டா, கழி ஒடஞ்சி கூரை உய்ந்திடுச்சி, அதான் ஜொரம் வந்துட்டுகீது" என்று தழுதழுத்த குரலில் சொன்னார். மாலைவரை ஒரே சோகமயம். மாமவும் பாட்டியும் அண்ணன் பக்கத்திலேயே இருந்தார்கள்.

சாயுங்காலம் ஆறு மணி ஆனது. என் மாமா சென்று அண்ணனைத் தொட்டுப் பார்த்துவிட்டு "அம்மா! ஜொரம் கொரஞ்சி கீது! நீ அவனுக்கு ஒரு முழுங்கு காப்பி போட்டுகுடு. நான் டாக்டர்கிட்ட கூட்னுபோரன்" என்றார். சிறிது நேரம் கழித்து, என் அண்ணன் எழுந்து கட்டிலில் அமர்ந்தான். என்ன நடந்திருக்கும் என்று அவன் யோசிப்பது அவனது பார்வையிலே புரிந்தது. பாட்டி காப்பி கொண்டுவந்தாள். காப்பி குடித்துக்கொண்டே எங்களைப் பார்த்தான். "என்னடா! கழுத்து வலிக்குதா!" என்றார் மாமா. "இல்ல மாமா" என்று அழத் துவங்கினான். மாமா அவனைக் கட்டியணைத்து சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். பாட்டியும் ஒரு ஓரத்தில் நின்றவாறு விம்மிக்கொண்டிருந்தார். "எல்லாம் சரியா போச்சி! அழக்கூடாது! எழ்ந்துகோ டாக்டர்கிட்ட போலாம்" என்று அண்ணனின் கையைப் பிடித்து எழுப்பினார் மாமா. மெதுவாக எழுந்து அவனும் மாமாவுடன் கிளம்பினான். சைக்கிளின் பின்னே அமர்த்திக் கொண்டு மாமா போவதைப் பார்த்துக் கொண்டு வாசற்படியில் நான் நின்றிருந்தேன். "பாடாலப்பான்! காலைல்லிருந்து இந்த கயித்த தேடிகினு இருந்தான். இதுக்குதான்னு தெரியாம போச்சி" என்று திட்டியவாறு, மூக்கணாங்கயிற்றை சீமை எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருந்தார் என் பாட்டி.

அண்ணன் பத்தாம் வகுப்பு பெயில் ஆனதற்காக தற்கொலை முயற்சித்தான் என்பது பிறகு தெரியவந்தது.

**********************************************************************************

நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். - இது தட்ஸ்தமிழில் வந்த செய்தி. அதில் மானுவல் என்ற அன்பர் ஒரு பின்னூட்டம் (நகைச்சுவை) இட்டிருந்தார். 

ஒரு அலுவலகத்தில் மூன்று நண்பர்கள் மதிய உணவு இடைவேளையின் போது சபதம் எடுத்துக் கொண்டார்களாம், "நாளையும் இதே சாப்பாடு என்றால் தற்கொலை செய்து கொள்வேன்".
மறுநாள் முதலாமவர் "அதே சாப்பாடுதான் கொடுத்துவிட்டு இருக்கிறாள்" என்று சொல்லி சபதத்தை நிறைவேற்ற தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற இருவரும் அதே போல கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதை கேள்வி பட்ட இருவர்களுடைய மனைவிமார்கள் அழுதுக்கொண்டே, "முன்பே தெரிந்திருந்தால் இதுபோல் நடக்காமல் பார்த்திருப்பேனே ".
மூன்றாவது நபருடைய மனைவி மட்டும் அழாமல் "அவருக்கு தேவையானதை அவரே சமைத்துக்கொள்வார் நான் என்ன செய்வது ".

**********************************************************************************

6 comments:

  1. தற்கொலை முயற்சி... ஏங்க இப்படி...?

    ReplyDelete
    Replies
    1. கசப்பான அனுபவம் தான் :(

      Delete
  2. மூன்றாம் பகுதியில் உள்ள ஜோக் முன்னரே படித்திருக்கிறேன்.

    தோல்வியைத் தாங்காது முடிவைத் தேடும் புத்தி பெரியவர்களுக்குக் கூட...

    இவர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.

    ReplyDelete
    Replies
    1. //இவர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.//

      தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தர்கொலைக்குக் காரணம் இதுவாக இருக்க வாய்ப்பில்லை. :)

      Delete
  3. குபி,

    //ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____ வேணும்னு சொன்னானான்//

    அந்த டேஷ் என்னய்யா? இப்படிலாம் சஸ்பெண்ஸ் வச்சா ,மண்டையில நம நமனு அரிக்குமே அவ்வ்!

    தேர்தல் கருத்துக்கணிப்பு நான் ஒன்னு வச்சிருக்கேன் , நாளை காலைக்குள் சொல்லிடுறேன் அவ்வ்!

    # உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே அப்படியா ?

    #//தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தர்கொலைக்குக் காரணம் இதுவாக இருக்க வாய்ப்பில்லை. :)//

    அதே தான் , இப்படி சொன்னா கட்சில இருந்து கவனிப்பாங்கனு , செத்தப்பிறகு சொல்லிடுறாங்க.

    ReplyDelete
    Replies
    1. //# உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே அப்படியா ?//

      நாலு தடவை கோட் அடிச்சி, நான் பத்தாங் கிளாஸ் வருவதற்கு முன் பாஸ் ஆகிட்டார். :)

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய