Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, May 15, 2014

பெண்கள்/மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா?

பெண்கள் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்று சில விவாதங்கள் வருவதுண்டு. இணையத்திலும் இத்தகைய விவாதங்களைப் பார்க்கலாம். இப்படி விவாதிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாகவும் நகரவாசிகளாவும் இருப்பார்கள். 

கீழ்தட்டுமக்களில் வசிக்குமிடம் கிராமமாகட்டும் நகரமாகட்டும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். 

ஆதலால் இவ்விவாதத்தை மேம்போக்காக பெண்கள் என்று எடுத்துக் கொள்ளாமல், மேல்தட்டு பெண்கள் என்று சொல்லலாம். அவர்களைப் பற்றியே இக்கருத்துகள். இப்பெண்கள் வேலைக்குப் போகவேண்டிய காரணங்கள் என்று பார்த்தால்: ஒன்று பெண்ணின் விருப்பம், இரண்டு அவர்களின் குடும்ப சூழ்நிலை (விருப்பு வெறுப்புகளைத் தாண்டி வேறுவழியில்லாமல் செல்வது), மூன்று மற்றவரின் தலையீடு (அதாவது மற்றவரின் கட்டாயப்படுத்தல்). இவற்றில் மூன்றாவது பிரிவில் ஆண்களின் விருப்புவெறுப்புகள் (தலையீடுகள்) வருகின்றன.

தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் என எவ்வளவோ பெண் சொந்தங்கள் இருப்பினும், மனைவியை வேலைக்கு அனுப்புவது பற்றியே சிலர் தனித்தலைப்புடன் விவாதிக்கிறார்கள். மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்பதைப் பற்றி பேசும் பெரும்பாலான ஆண்களுக்கு உளவியல்ரீதியான ஒரு காரணத்தை நான் அவதானித்திருக்கிறேன். முதலாமவர்கள் மனைவி வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத தாயின் பிள்ளைகளாக இருப்பார்கள். இவர்களின் இளம்வயது வாழ்க்கை தாயின் கையால் நல்ல சாப்பாடு, தாயின் அரவணைப்பு என்று இருந்திருக்கும். இரண்டாமர்கள் மனைவி வேலைக்குப் போகத் தேவையில்லை என்று நினைப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகும் தாயின் பிள்ளைகள். இவர்களது இளம்வயது ஓட்டல் சாப்பாடு, தாயுடன் அதிக நேரம் செலவிட முடியாமை, சொந்தங்கள் வீட்டில் வளர்வது என்று இருந்திருக்கும்.

நான் பிறந்தபின், என் அம்மா வேலைக்குப் போகும்போது என் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு செல்வார். என் பாட்டி இறந்த பிறகு, எனது பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தனியாகவே இருக்க வேண்டிவரும். பூட்டிய வீட்டிற்குள் காலை முதல் மாலை வரை நானும் அண்ணனும் தனியாக இருப்போம். சில சமயம் நான் மட்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோரை உடைய குழந்தைகள் பலர்  சிறு- பெரு நகரங்களில் பெரும்பாலும் இன்றும் இப்படித்தான் தனியாக பூட்டிய வீடுகளில் இருக்கிறார்கள் (இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளை விட்டுச்செல்ல சில தாதிமார்கள் பெருநகரங்களில் இருப்பினும், அவர்களின் பராமரிப்பு என்ன? பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் அதற்காகும் செலவு என்ன? என்ற பல கேள்விகள் உள்ளன). மாலை வேலை முடிந்துவரும் என்னுடைய அம்மாவிற்கு வீட்டுவேலைகள் செய்யவே சரியாக இருக்கும். என் தந்தை வேலை முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் வருவார். அவர் வருவதற்குள் சமைத்தும் வைக்க வேண்டும்.  இப்படி பெண்கள் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பல பிரச்சனைகள் உண்டு. "உனக்கு வரவளயாவது வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு தராம பார்த்துக்க" என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. என்னுடைய அம்மா கூட குடும்ப சூழ்நிலை (கடன்) காரணமாகவே விருப்பமில்லாமலும் உடற்நிலையை பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய்கொண்டிருந்தார். கணவன், குழந்தைகள், வேலை என்று வாழ்ந்து, வேளைக்கு உணவருந்தாமல், தன்னையே தானே வருத்திகொள்ளும் ஒரு சராசரி இந்தியத்தாயாகவே வாழ்ந்தார்.

என் நண்பன் ஒருவன் ஒரிசாவில் நல்ல மத்திய அரசுப் பணியில் இருக்கிறான். அவன் திருமணம் செய்த பெண் ஆயுற்வேதம் படித்திருந்தாள். திருமணம் செய்து அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் "நீ வேலைக்குப் போ" என்று வற்புறுத்த ஆரம்பித்துவிட்டான். அப்பெண்ணுக்கு உடனடியாக போக விருப்பமில்லை. "இப்ப தானே வந்திருக்காங்க! வைத்தியம் பார்க்க மொழி தெரியனும், ஒடியா தெரிஞ்சிக்கட்டும். இடம் வேற புதுசு. வேற ஆட்கள். பயமா இருக்கும். ரெண்டு மூணு வருஷமாவது போகட்டும்" என்றேன் நான். "நீங்க எந்தக்காலத்தில் இருக்கிங்க. பொண்ணுங்க படிச்சா வேலைக்கு போகனும், வீட்டுக்குள்ளே அடங்கி இருக்கக்கூடாது" (என் மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம்? :) ) அப்படி இப்படி என்று லெக்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டான். குடும்பப் பிரச்சனை, வீட்டுக்கடன், பணவரவு என்று எதாவது உண்மையைச் சொன்னால் சரி, ஆனால் அதை விடுத்து இப்படி "முற்போக்கு" முகமூடி எதற்கு என்று தெரியவில்லை. சரி உன் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அவனுடைய தாயும் வேலைக்குப் போகாத பெண்மணி தான்.

இப்படி சொல்வதால், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்று யாராவது சொல்லலாம். ஆனால் இது தான் எதார்த்தம். நான் முடிவாக சொல்வது: முதலில் வேலைக்குப் போகலாமா வேண்டாமா முடிவெடுக்க வேண்டியவள் சம்பந்தப்பட்ட பெண், இரண்டாவது ஆணோ பெண்ணோ, அவர்கள் வேலைக்குப் போவது அவரவர் விருப்பம், குடும்பச் சூழ்நிலை பொருத்தது. இதையெல்லாம் பொதுப்புத்தியில் பார்க்க இயலாது. வேலைக்குப் போனால் பெண்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று பார்த்தால் (போக்குவரத்து, சமுதாயம், உடல்நலம், மாதவிடாய், பாலியல் தொல்லைகள், மன உளைச்சல்) அதற்கு தனியாக ஒரு பத்து பதிவாவது எழுதவேண்டும். வேலைக்குப் போகும் மனைவியரை ஊக்குவிக்கும் அல்லது விரும்பும் ஆண்கள் வெறுமனே வாயால் வடைசுடுவதை விடுத்து, அவர்களுக்கு சமையல், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலைகளில் கூடமாட உதவியாக இருக்கலாம். மனைவியருக்கு வேலை அலைச்சல், உடல்-மன உளைச்சல் ஏற்படும் காலங்களில் உதவியாக அல்லது குறைந்தபட்சம் ஆறுதலாகவாவது இருக்க வேண்டும். அதைவிடுத்து எல்லா வேலைகளையும் பெண்கள் மேல் சுமத்திவிட்டு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், "பாவம் சார்! உங்க சம்சாரம்".

=========================================================================

Saturday, April 13, 2013

கடவுள் வணிகப் பொருளாகிப்போன காலத்தில்

ஆலயடி விநாயகர் தலபுராணம்

என்னுடைய சொந்தக்கார பையன் ஒருத்தன். மகேஷ் என்று பெயர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடையவில்லை. வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஒரு பெட்டிக்கடை வைத்தான். கடை வாடகை கொடுக்கும் அள்விற்குக் கூட லாபம் இல்லை. கடை நடத்த முடியாமல் மூடிவிட்டான். அவனின் வீட்டுக்குப் அருகாமையில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம் இருந்தது. ஊரின் சில பகுதிகளின் குப்பை பெரும்பாலும் இங்கு தான் கொட்டப்படும். பிள்ளையார் சதுர்த்தி வந்தால், சிறுவர் போவோர் வருவோரிடம் காசு சேர்த்து இந்தக் குப்பை கொட்டப்படும் இடத்தின் பக்கத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் களிமண் பிள்ளையார் வைத்துக் கொண்டாடுவார்கள். மகேஷுக்கு வேலைவெட்டி இல்லாததால், அவர்களுடன் சேர்ந்து காசு சேர்ப்பதிலும் பிள்ளையார்சிலை வாங்கி வைப்பதிலும் மும்முரமாக இருந்தான். இம்முறை நிறைய பணம் சேர்ந்திருந்தது. வெறுமனே பிள்ளையார் மட்டும் வைக்காமல், ஒரு ஓலைக்கொட்டகைப் போட்டார்கள். அந்த இடம் ஒரு புறம்போக்கு இடம் என்பதால், பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் ஓலைக்கொட்டகை பிரிக்கப்படவில்லை. நம்ம பையனும் ஓலைக் கொட்டகையை கோயில் ரேஞ்சுக்கு பெருக்கி சுத்தம் செய்துவிடுவான். களிமண் பிள்ளையாருக்கு பூபோட்டு எதாவது பக்திப்பாட்டு பாடிடுவான். ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பகுதியில் உள்ள அவனது சொந்தங்கள் ஓலைக்கொட்டகை உள்ள இடத்தில் ஒரு கல் பிள்ளையார்சிலையும் கோயிலும் கட்டுவதென ஏகமனதாக முடிவெடுத்தனர். முதலில் ஒரு சிறுகோயில் கட்டி சின்ன பிள்ளையாரும் வைக்கப்பட்டது. அன்றுமுதல் மகேஷே கோயிலுக்கு அர்ச்சகர்.

விநாயகர் ஸ்துதி, பிள்ளையார் அகவல் என நான்கைந்து புத்தகங்கள் வாங்கி படிக்கத் துவங்கிவிட்டான். சில ஆண்டுகளில் சமூக ட்ரெண்டுக்கு ஏற்றபடி கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. அனுமன், ஐயப்பன், நவகிரகங்கள், வைக்கப்பட்டன. நம்மாளும் சலிக்காமல் பூணூல் ஒன்று வாங்கிப் போட்டுக்கொண்டு, முழுநேர பிசினஸில் இறங்கிவிட்டார்.  ஸ்பெஷல் அர்ச்சனை, ஆண்டுப்பிறப்பு, பிரதோஷம் (பிள்ளையார் கோயிலில்?!), நன்கொடை என பிஸினஸில் பிரமாதமான முன்னேற்றம். தற்போது கோயிலில் புதிதாக அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகேஷும் தகட்டில் சக்கரம் எழுதுவது, குறி சொல்வது என புது பிராஞ்ச் திறந்து பிஸினஸை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஒருமுறை மகேஷோட அம்மா சொன்னாங்க "பிள்ளையாரா இங்க வந்து இருக்கணும்னு விரும்பி இருக்காரு. அதனாலதான் கோவில் வந்தது". நானும் வாய் சும்மா இல்லாமல் "குப்பைத்தொட்டி பக்கத்தில் இருக்க அவருகென்ன அப்படி ஒருஆசை" என்றுகேட்டுவிட்டேன். பார்த்தார்களே ஒரு பார்வை, நான் ஓடிவிட்டேன். மகன் சம்பாதிக்கும் பெருமிதம் அவங்களுக்கு.

கடவுள் வணிகப்பொருளாகிப் போன காலத்தில், பக்தர்களே வாடிக்கையாளர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பழைய தமிழ்ப்படங்களில் வரும் கிளப் டான்சர்கள், வில்லன்கள்   கிருத்துவர்களாக, முஸ்லீம்களாகக் காட்டுவது ஏன்?

கிளப் டான்ஸ் என்பது முதலில் இந்திப் படங்களில் வந்தன. பிறகு  தென்னிந்தியப் படங்களிலும் அதை ஈயடிச்சான் காப்பியடிக்க கிளப் டான்சர்களாக ரீட்டா, ஜூலி என பெண்கள் வருவார்கள். ஆனால் ஊர்த் திருவிழாவில் ஆடுபவர்கள் முத்தம்மாவாக முனியம்மாவாக இருப்பார்கள். இது ஒரு திரைப்பட ஸ்டீரியோடைப் அவ்வளவே. இந்திப்படங்களில் இவ்வாறு வரக்காரணம், 1950 - 60களிலும் அதற்கு முன்பும் பம்பாயில் கிளப் டான்சர்களாக  ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடைய நிறத்திற்காகவும், நுனிநாக்கு ஆங்கிலத்திற்காகவும், இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தன. இந்தி சினிமாவிலும் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்.

இதே அறுபதுகளில் பம்பாயில் மாபியா கும்பல், கள்ளக்கடத்தல் ஆப்கானிய குடியேறிகளால் நடத்தப்பட்டு வந்தது. இதற்கடுத்த கால கட்டங்களில் மாபியாகளில் கரிம்லாலா, ஆஜிமஸ்தான், வரதராஜன் முக்கியமானவர்களாக இருந்தார்கள். பிறகு தாவுத் இப்ராகீம். இதன் காரணமாக பல இந்திப் படங்களில் கடத்தல் வில்லன்கள் முஸ்லீமாக அல்லது தாராவியைச் சார்ந்த தமிழனாக  இருப்பதுண்டு. தென்னிந்தியன் என்று காட்ட வேண்டுமென்றால் நெற்றியில் விபூதி இருக்கும்.

…டான் படத்தில் வில்லன் ஒரு கிருத்துவன். அதன் ரீமேக்கான பில்லாவிலும் அப்படியே. ஆனால் பெயர் மட்டும் 1978ல் குழந்தை கற்பழிப்பு வழக்கில் பிரபலமாயிருந்த ஜஸ்பீர்சிங் என்கிற பில்லா. HAM படத்தில் வில்லன் கிருத்துவர். அதன் காப்பியான ரஜினி நடித்த பாட்சாவிலும் அதேதான், வில்லன் ஆண்டனியாக ரகுவரன் வருவார். இவற்றிலிருந்து ஒரு முரணான விடயம். "தீவார்" திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஆஜிமஸ்தான் (தமிழர்  தான்) என்ற மாபியா தலைவனின் இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் படத்தில் அமீதாப் ஒரு கடவுள் நம்பிக்கையற்ற இந்து. தமிழில் "தீ" என்ற பெயரில் ரீமேக் ஆன ரஜினி நடித்திருந்தார். திரைப்படங்களைப் பொருத்தவரை முஸ்லீம்கள், கிருத்துவர்கள் மட்டுமல்ல யாரைத் தான் ஒழுங்காக சித்தரித்துள்ளார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கரிமேடு கருவாயன் படத்தில் கவுண்டமணி - செந்தில் சேர்ந்து கலக்கும் ஒரு டப்பாங்குத்து. இசைஞானியின் இசையில். பாட்டோட துவக்கத்தில் ஒரு சின்ன எடிட்டிங் தவறு. கவுண்டமணி உறுமி இருக்கு என்பார் தமுக்கு காண்பிக்கப்படும். தமுக்கு என்பார், உறுமி காண்பிக்கப்படும்.

Monday, October 15, 2012

பெயரில் என்ன இருக்கா

முன்பு நொண்டி, முடவன், குருடன், செவிடன், ஊமை என்று குறிப்பிடப்பட்டவர்களை, ஊனமுற்றவர்கள் (physically handicapped, physically disabled) என குறிப்பிட்டோம், பிறகு அதுவே மாற்றுத்திறனாளிகள் (differently abled) என அழைக்கும் நிலையில் இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Euphemism என்பார்கள். தமிழில் இடக்கர் அடக்கல், மங்கலம், குழூவுக்குறி என மூன்றுவகையாகச் சொல்லப்படுகின்றன. நம்முடைய நாளிதழ்கள் பல விஷயங்களை அமெரிக்க ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்கிறார்கள். அதன் காரணமாக பல ஆங்கில Euphemistic சொற்கள் மொழிபெயர்ந்து தமிழில் உள்ளன. வன்புணர்வு, வல்லுறவு என்பதை பலர் கற்பழிப்பு (அதென்ன! கற்பழித்தல், இவர்கள் சொல்லும் கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் போகுமா, வற்புறுத்தியவனுக்கு கற்பு போகாதா?) என்கிறார்கள். இப்போது அதுவும் மாறி பாலியல் வன்முறை(வன்கொடுமை என்றாகிவிட்ட்து. முதலில் தாசி, தேவடியாள்(தேவரடியாள்), பிறகு விபச்சாரி, பிறகு விலைமாது, இப்போது பாலியல் தொழிலாளி. இப்போதெல்லாம் செய்திகளில் இறந்தார்கள், கொல்லப்பட்டார்கள் என்று வருவதில்லை, உயிர் இழந்தார்கள் என்று மங்கல சொல்லாக வருகிறது. வேலைநீக்கம் என்பதில்லை ஆட்குறைப்பு. ஏழை என்பதில்லை வாழ வசதியற்றோர். முன்பு முதியோர் எனக் குறிப்பிடப்பட்டவர், தற்போது மூத்தகுடிமகன். குள்ளமானவரை உயரம் குறைவானவர் என்றும், குண்டானவரை எடைகூடியவர் என்றும், ஒல்லியானவரை எடைகுறைந்தவர் என்றும் அழைக்கிறார்கள். பெண்களிடம் கிண்டல்கேலி செய்வது முதல் பொறுக்கித்தனம் செய்வதுவரை Eve teasing என்று பெயர். 

பல சமயம் இத்தகைய இடக்கர் அடக்கல் சொற்கள் பிரச்சனையை, உண்மையை  மறைக்கவே பயன்படுகின்றன. பெயரை மென்மையானதாக மாற்றுவதால் பாதிக்கப்பட்டவரின் பிரச்சனை தீர்வதிற்குப் பதில் மழுங்கடிக்கப் படுகிறது. உணர்வு முக்கியம் தான், ஆனால் அதைவிட முக்கியம் உரிமை. உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு உணர்வை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன். 

ஜாதிப் பெயர்களின் வழக்கொழிந்து தாழ்த்தப்பட்டவர்கள், தலித் என சொல்லப்பட்டு வருகிறது. தலித் என்றால் ஹிந்தியில் நசுக்கப்பட்டவர்கள் என்று பொருள். ஆனால் காந்தி நோகாமல் மென்மையாகஹரிஜன்’ (கடவுளின் மக்கள்) என்றார். பெயரை மாற்றினால் மட்டுமே பிரச்சனை தீர்ந்துவிடாது என அம்பேத்கார் இதனை கடுமையாக எதிர்த்தார். இருந்தபோதிலும், காங்கிரஸ்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களை குறிக்கத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்கள் வருகிறார்கள். காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக B.G.கேர் என்பவர் ஹரிஜன் என்ற வார்த்தை மிகவும் சிறப்பானது, நர்சி மேத்தா எழுதிய குஜராத்தி பாடலில் கூட வருகிறது என்றார். நர்சி மேத்தா ஒரு பிராமண வகுப்பைச் சார்ந்தவர். அவர் குறிப்பிட்ட ஹரிஜன் என்ற சொல், கோவிலில் நடனமாடும் தேவரடியாள்களுக்கு கோவிலில் பணிபுரியும் பிராமணர்களுக்கும் பிறந்த குழந்தைகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்டவை. “எப்படி காந்தி அவர்கள் ஹரிஜன் எனக்கூறலாம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ன தாசிகளுக்குப் பிறந்தவர்களா?” எனக் அம்பேத்கார் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கம்யுனிஸ பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஆயிரம் காலம் அடிமை என்றாயே, ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒன்ஸ்மோர் கொசுவத்தி
நான் பத்தாம் வகுப்புக்கு சென்ற முதல் நாள் முதல் பாடம் தமிழ். தமிழாசிரியர் பெயர் கங்காதரன், மிகவும் கோபம் மிக்கவர். எங்க சீனியர்கள் அவரைப் பற்றி எங்களுக்கு சொன்னது கங்காதரன் முன்னாடி சிரிக்காதே! சிரிச்சா தன்னைப் பார்த்துத்தான் நாம சிரிக்கிறோம் என நினைத்து வெளுத்துவிடுவார்“. வகுப்புக்கு வந்த தமிழாசிரியர் சிலப்பதிகாரம் பற்றி பேசத் துவங்கினார். அப்போது கோவலன் தன்னுடைய உடைமைகளை இழந்து கண்ணகியுடன் மதுரைக்குச் செல்லும்போது துணையாக வந்த பௌத்த பெண்துறவி பெயர் என்ன?“ எனக் கேட்டார். அப்பெண்துறவியின் பெயர் கௌந்தியடிகள். என்னுடைய அம்மா ஏற்கனவே சிலப்பதிகாரத்தை கதையாகச் சொல்லும்போது எனக்கு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அன்று எனக்கு எவ்வளவு யோசித்தும் நினைவில் வரவில்லை. என்னுடைய பக்கத்தில் இருந்த முருகன் (எங்க ஊரில் இருந்த முருகன் டாக்கீஸ் முதலாளியோட பையன்) தடாலடிய எழுந்து ஔவையார்என ஒரு போடு போட்டான். என்னையும் அறியாமல் களுக் என சிரித்துவிட்டேன். அவ்வளவுதான் கங்காதரன் கடுங்கோபதரனாக மாறி என் மண்டையில் நறுக் நறுக் என கொட்டி வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். பிறகு காலாண்டுத் தேர்வின் மதிப்பெண் வரும்வரை அவருக்கு நான் வேண்டாப்பிள்ளையாகவே இருந்தேன். 

முருகனைச் சொல்லி தவறில்லை. ஔவையார் திரைப்படத்தில் ஔவையாராவும், பூம்புகார் திரைப்படத்தில் கௌந்தியடிகளாகவும் நடித்தது கே.பி.சுந்தரம்பாள். அதனால் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். எப்படியோ ஔவையார் எனச் சொல்வதற்கு பதில் கே.பி சுந்தரம்பாள் எனச் சொல்லாமல் போனான்.

Saturday, September 29, 2012

ஆசிய சிவிங்கியும் ஒரு சூஃபிக்கதையும்



முன்பு ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். அப்படத்தில் 1910-களில் நடப்பதான கதை. அதில் ஆங்கிலத்தில் ‚சீத்தா (Cheetah)‘ எனப்படும் ஒரு வகைப்புலி காட்டப்படும். சாதாரணமாக சீத்தா வகைப்புலிகள் ஆப்பிரிக்காவில் தானே இருக்கும். எப்படி இந்தியாவில் காட்டுகிறார்கள்? என குழப்பம். இயக்குனரின் தவறாக இருக்கலாம் என விட்டுவிட்டேன். முன்பு இந்திய அரசர்கள் இதனை வேட்டைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் எனப் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்திருக்கப்படும் என நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது. இதன் பெயர் தமிழில் சிவிங்கிப்புலி. சீத்தா என்பது சம்ஸ்கிருதப் பெயர்.
 
ஒரு காலத்தில் சிவிங்கிப்புலிகள் இந்தியதுணைக்கண்டம் முழுக்க இருந்திருக்கிறது. தற்போது அரேபியா முதல் இந்தியா வரை வெறும் 70 – 100 சிவிங்கிப்புலிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஈரானில் மட்டுமே உள்ளன. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கின் பெயரால் பல சிவிங்கிப்புலிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. பிறகு சிவிங்கிப்புலிகளின் இருப்பிடங்களான எத்தனையோ புல்வெளிகள் மக்களின் வாழ்விடங்களாகவும், விளைச்சல் நிலமாகவும், மேய்ச்சல் நிலங்களாவும் மாற்றப்பட்டுவிட்டன. இந்தியாவில் முதன்முதலாக ஒரு விலங்கு செயற்கையாக முற்றிலும் அழிக்கப்பட்டதென்றால் அது சிவிங்கிப்புலியே. 1952ல் இவை முற்றிலும் இந்தியாவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மறுபடியும் ஆசியவகை சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டம் (Project Cheetah) இந்தியாவிற்கு உள்ளது. 2009ல் ஈரானிய அரசுடன் இது குறித்து பேச்சுவார்த்தையும் நடந்தேறியது. ஆனால் ஆசிய சிவிங்கிப்புலிஜோடிகள் அல்லது திசுக்களுக்கு (க்லோனிங் முறையில் உருவாக்க) பதிலாக ஈரான் ஆசிய சிங்கங்களை கேட்டுள்ளது. அவ்வாறு கொடுக்க இயலாது என இந்திய அரசு மறுத்துவிட்டது. வேறுவழியின்றி தென்னாப்பிரிக்காவிடமும் இந்திய அரசு சிவிங்கிப்புலிகளை கேட்டுள்ளது.

சில அதிக தகவல்களுக்கு தியோடர் பாஸ்கரன் தமிழில் எழுதிய கட்டுரை பார்க்கவும்.
****************************************************************************************
ஒரு ஊரில் ஒரு வணிகன் இருந்தானாம். ஒருநாள் அவன் வியாபாரம் எல்லாம் முடிச்சு ஒட்டகத்தில் ஊரு திரும்பிக்கொண்டு இருந்தான். வரும்வழியில் கடவுள் தொழுகைக்கு நேரமாகிவிட்டது. ஓரமாக ஒட்டகத்தை விட்டுவிட்டு, தொழுகை செய்ய ஆரம்பிச்சான். தொழுகைய முடிச்சி வந்து பார்த்தா ஒட்டகத்தை காணோம். இருட்டி வேற போச்சு. ஒட்டகத்தை தேடவும் வழியில்லை. ஒட்டகத்தில் தான் அவன் கொண்டுவந்த பணமும் இருக்கு. அவனுக்கு ஒரே கோபம். வானத்தைப் பார்த்து „கடவுளே! உன்னை தானே வணங்கிக் கொண்டிருந்தேன், இப்படி நீ செய்யலாமா? ஒட்டகம் ஓடி போச்சே! நான் என்ன செய்ய!“ எனக் கத்தி புலம்பிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியா ஒரு சூஃபி பெரியவர் வந்தராம். கடவுளிடம் புலம்பிக்கொண்டிருந்த வணிகனைப் பார்த்து „தம்பி! கடவுளை ஏன் திட்டுரே“ என்று கேட்டார். வணிகன் நடந்ததைச் சொன்னான். அதற்கு பெரியவர் „கடவுளைக் கும்பிடு! ஆனால் அதுக்கு முதல் ஒட்டகத்தை கட்ட வேண்டியது தானே!“ என்றார்.

Tuesday, February 09, 2010

காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love)




சில நாட்களுக்கு முன் காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love) என்றொரு ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்த ஆவணப்படம் இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியது. இவர்களுடைய மனக்குமுறல்கள், உண்மையான நிலைப்பாடுகள், கடவுள் மீதான பற்றுதல் என  அனைத்தையும் இந்த ஆவணப்படம் கண்முன் நிறுத்துகிறது. ஆவணப்படத்தில் நான் பார்த்தவற்றை சுருக்கமாக கீழே தருகிறேன்.

இரண்டு பெண் ஓரினக் காதலர்கள் குரான் வாசகங்களை படிப்பதாக ஆவணப்படம் தொடங்குகிறது.
தென்னாப்பொரிக்காவில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு முஸ்லீம் சகோதரர். ஓரினச் சேர்க்கை, மதம், குடும்பம் என  அவருடைய வாழ்க்கை போராட்டமாக இருப்பதாக விவரிக்கிறார். முக்கியமாக ஒரு இஸ்லாமிய மத அறிஞருடன் பேசும்போது குரானில் homosexual act அதாவது molestation  தான் பாவமாக கருதப்படுவதாகவும், homosexual relationship or love பற்றி எதுவும் கூறவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு அந்தப் பெரியவர் “இஸ்லாம் மட்டுமல்ல எந்த புனிதமான மதமும் ஓரினச் சேர்க்கையை அனுமதிப்பதில்லை.” என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.
எகிப்தில் ஓரினச்சேர்க்கைக்காக தண்டனை அனுபவித்துவிட்டு பிரான்ஸில் அகதியாக இருக்கும் ஒருவர். அவருடைய தண்டனை கொடுத்தவர்கள் மீதான கோபத்தையும், அனுபவித்த இன்னலையும் நம் முன்னே பதிவு செய்கிறார்.
தங்கள் காதலை இஸ்லாமிய சமூகம் எப்படி அங்கீகரிக்கும் என்றபடி பிரான்ஸில் இருக்கும் இரு பெண் ஓரினக் காதலர்கள். அதில் ஒருவர் பெண் ஓரினச் சேர்க்கைக்கு குரானில் என்ன தண்டனை என்று பார்க்கிறார். “The only punishment is Scolding the women, when there is no penetration” என்று அராபியில் படிக்கிறார்.
ஓரினச்சேர்க்கைக்காக 100 கசையடி வாங்கிய, இரானில் இருக்கும் அமீர். துருக்கியில் தன் காதலனோடு இருக்கிறார்.அவர்களுடைய குடும்ப நலனுக்காக முகம் படத்தில் காட்டப்படுவதில்லை.
துருக்கியில் இருக்கும் பெண் ஓரினக் காதலர்கள். (துருக்கியில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் எதுவுமில்லை.)
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் சுஃபி கவிஞன்,துறவி ஷா ஹுசைன், இந்துவான மதுலால் இருவருக்குமான காதல். அவர்களுடைய சமாதி, அங்கே ஹுசைனுடைய இறந்தநாளன்று கொண்டாடப்படும் விழா.
இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளரான இளைஞர் ஒருவர். அவருடைய தேடல்.பெண்வேடமிட்ட ஆண்களுடனான ஆட்டம். பின்னணி “மொஹலே ஆஸம்” படத்தில் வரும் பிரபலமான பாடல் “பியார் கியா தோ டர்னா க்யா”.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஓரினக் காதலர்கள் மீது மதங்களுக்கு அப்படி என்ன கடுப்போ தெரியாது. சொல்லி வைத்தது போல, எல்லா மதங்களும் இந்த விடயத்தை கடுமையாக எதிர்கின்றன. ஓரினக் காதலை ஆபிராகாமிய மதங்கள் முற்றிலுமாக எதிர்க்கின்றன. கடுமையான தண்டனைகள்  விதிகின்றன, விதிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் கடவுளே ஓரினக் காதலர்களாக இருந்தாலும், மதம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மனுதர்மத்திலும், அர்த்தசாத்திரத்திலும் இதற்கான தண்டனைகள் சொல்லப்பட்டுள்ளன. சில மதங்கள் இவற்றை ஒரு சமூகக்கூறாக கூட கருதவில்லை. விலங்குகளில் கூட ஓரினச்சேர்க்கை உண்டு. ஓரினச்சேர்க்கை பரிணாம கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டு. இதுவே தற்போதைய முற்போக்கான, விஞ்ஞான மதவாதிகள் எதிர்க்கக் காரணமாகவும் இருக்கும். இயற்கையாக ஏற்படும் விளைவுக்கு தனிப்பட்ட நபர் எப்படி காரணமாவார். அவரை தண்டிப்பது ஏன்? ஒதுக்குவது ஏன்? 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சில நாட்களுக்கு முன் கோவா படம் குறித்த விமர்சனப் பதிவில் நண்பர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விமர்சித்திருந்தார். ஓரினச்சேர்க்கை ஓர் அருவருக்கத்தக்க விடயமாக கூறியிருந்தார். “ஓரினச்சேர்க்கை என்பது தவறா?” என்று ஒரு நண்பர் பின்னூட்டமிட, பதிவிட்ட நண்பர் “ஓ! அவனா நீ?” என்று ஒரு பகடி செய்தார். இதில் பகடி செய்ய என்ன இருக்கிறது. ஓரினச்சேர்க்கையை ஆதரித்துப் பேசினால் அவனும்/அவளும் ஓரினச் சேர்க்கையாளராகத்தான் இருக்கவேண்டுமா? அப்படி இருந்தால் என்ன தவறு.

Philadelphia படத்தில் tom hanks ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பார். முதலில் அவர் ஓரினச் சேர்க்கையாளர், எய்ட்ஸ் நோயாளார் என அறிந்து அவருக்காக வழக்காட மறுக்கும் வழக்குரைஞர், பின்பு மனம்மாறி வழக்காடுவார். அந்த வழக்குரைஞரையும் சிலர் ஓரினச்சேர்க்கையாளராக அணுகுவார்கள்.

Fire படத்தில் இரு பெண்கள் திருமண வாழ்வில் தோல்வியடைந்து ஓரினச்சேர்க்கைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு நம்மவர் மத்தியில் இருக்கும் மதிப்பு எப்படி என்று கேட்டுப்பாருங்கள். எதோ நீலப்படம் போல கூறுவார்கள். 

இதுதான் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் சாக்கடையாக மணக்கும் நம் சமுதாயத்தின் நிலைமை. எல்லோரும் இதில் நெளிபவர்களே. இதையெல்லாம் பார்த்தும் கேள்வி எழுப்பாமல் இருக்கும் நாமும் இந்தப் புழுக்களில் ஒன்றா என்பதில் அவமானப்படவேண்டும். இதில் எந்த மதத்தையும் நான் தனியாக குறிப்பிடவில்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும். பெற்றபிள்ளையின் காதலை ஆதரிக்கும் முற்போக்காளராகக் காட்டிக்கொண்டாலும், அடுத்தவன் பிள்ளை ஓரினச்சேர்கையில் காதலித்தால் முகம் சுளிப்பவர்களே! திருமாலும், சிவனும் சேர்ந்து ஹரிஹரனாகலாம், ஆனால் நம்மோடு இருக்கும், நடமாடும் உறவுகள் செய்தால் தவறா? இவர்களுடைய காதலைத் தடுக்க மதங்களுக்கும், மனிதர்களுக்கும் உரிமை யாரால் கொடுக்கப்பட்டது.

Wednesday, December 30, 2009

3 idiots and Some idiots of India

3 idiots திரைப்படம் தொடங்கிய நான்காவது நாளில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாம். அப்படி ஒரு வரவேற்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்.படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி (முன்னாபாய் MBBS-ன் இயக்குனர்). மேலும் இப்படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். Chetan bhagat எழுதிய Five point something கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், சிலக் கல்லூரிக் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. சரி இப்போது விடயத்துக்கு வருவோம். இந்தப் பதிவு படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்படத்தில் கதை தொட்டுச்செல்லும் இந்திய மாணவ சமுதாயம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள். 1.மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்துறையைத் தேர்ந்தெடுக்காமல், பெற்றோரின் விருப்பத்தின் பேரில் சுயவிருப்பமின்றி  பாடத்துறையை தேர்ந்தெடுப்பது, 2. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தங்கள், 3. இவ்வாறான மன அழுத்தங்களால் எற்படும் மாணவத் தற்கொலைகள்.

மருத்துவதுறை கிடைக்காத பெண்ணை வீட்டில் உள்ளோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை. இது என் நண்பன் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்குக் காரணம் என்ன? விருப்பமில்லாத பாடத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது, அப்படி படிக்கமுடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்தால் திட்டுவது. முடிவு தற்கொலை. இதுபோல ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் தேர்வுமுடிவுகள் வரும் மாதங்களில் வருவதுண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் “நீ டாக்டராக வேண்டும். இஞ்னியராக வேண்டும்” என்று பிள்ளையின் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொண்டு வருவார்கள். இப்படி இவர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை ஒருவேளை சரிந்துவிட்டால், மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தானாகவே தற்கொலைக்குத் தயாராகிறார்கள். போதிய படிப்பறிவோ, விழிப்புணர்ச்சியோ இல்லாத பெற்றோர்கள் எப்படியாவது பணத்தை செலவழித்து தன் பிள்ளையை ஒரு பொறியியல் பட்டப்படிப்பையோ, ஒரு மருத்துவப்பட்டப் படிப்பையோ படிக்க வைத்து விடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை. தொடர்வண்டியில் செல்லும் போது என்னிடம் ஒரு பெரியவர் சொன்னது “என்னோட மகளை என்னுடைய நாலு ஏக்கர் நிலத்தை அடகு வைத்து இஞ்னியரிங் படிப்புக்கு …….. காலேஜில் சேர்த்து இருக்கிறேன்.”. இன்றைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், மந்திரிகளாலும், பினாமிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் சரியான கல்வி, கட்டுமான வசதிகள் இல்லாவிடினும் மத்திய அங்கீகாரம் பெற்று மக்களை ஏமாற்றி பணத்தைக் கரந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்விகற்க போதிய வசதியற்றக் கல்லூரியைத் தான் பெரியவர் குறிப்பிட்டார். கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் வரும் சராசரி மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்களுக்கு என்ன பாடத்துறையைத் தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிராக்டிகலாக  தேர்ந்தெடுக்கவும் தெரியாது, தங்களுக்கு எது விருப்பப் பாடம் என்று விவரிக்கவும் தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடக்கும்போது அங்கு கவுன்சிலிங் வரும் சில மாணவர்கள் அவ்வழியே செல்லும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் என்ன பாடத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்பதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். போகிறபோக்கில் அவர்களும் எதாவது தோன்றுவதைச் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

இந்தியாவின் கல்வித்தரமோ அதளபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.IIT, மற்றைய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. IITகளும் அதிகப்படுத்தப்படவுள்ளன. நல்ல விடயம் தான். ஆனால் அதற்கான infrastructure வசதிகள் தயாராக உள்ளனவா என்றால்? இல்லை. இப்படி கட்டுமான வசதியில்லாமல் மாணவர் சேர்க்கை மட்டும் அதிகரித்தால், கல்வித்தரம் குறையும், விடுதி மாட்டுக் கொட்டகை போல் இருக்கும். இப்போதே விடுதியில் ஒரு அறைக்கு 2 அல்லது 3 ஆட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது IIT எனும் இந்தியாவில் கார்போரேட் நிறுவனங்கள். இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் பொறியியல் மாணவர்கள் மலிவாக Microsoft,Google,Texas instruments,Cisco…. என பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் IIT மாணவர்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.

சரி ஒரு வழியாக மாணவன் தன்னுடைய விருப்பமான அல்லது விருப்பமற்ற பாடத்தையோ தேர்ந்தெடுத்துவிடுகிறான். அடுத்து அவன் சந்திக்கும் பிரச்சனைகள் அவனுடைய ஆசிரியர்கள் மூலமாக. இந்தியாவில் IITகள் தான் உயர்தர பொறியியல் கல்வியை வழங்குகிறது. அப்படி வழங்கிய கல்வியால் இந்தியாவிற்கும் இந்தியமக்களுக்கும் லாபம் வெகு குறைவே. இதற்கு பெரும்பாலானவர்கள் மாணவர்களைக் குறைகூறுவார்கள். ஏனென்றால் IIT-ல் படிக்கும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் இது தவறான கூற்று. வெளிநாட்டு நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது யார்? கல்வி நிறுவனமா அல்லது கார்பரேட் நிறுவனமா என்று எண்ணும் அளவிற்கு ப்ரோஜக்ட்களை வாங்கிக் குவித்துப் பணம் சம்பாதிப்பது யார்? கார்பரேட் நிறுவனம் கூட செய்த வேலைக்கு காசுகொடுக்கும் ஆனால் project work என்ற பெயரில் மாணவர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் ஓசியில் வேலை வாங்கவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் (research journals, conference papers) எழுதவும், அதிலும் தன் பெயரை முதன்மையாக போட்டுக்கொள்ளும் அளவிற்கு கசக்கிப் பிழிகிறார்கள். அப்படி மாணவர்கள் மேற்சொன்ன வேலைகள் செய்யவில்லையா? கிரேட்(மதிப்பெண்) குறைக்கப்படும். மாணவனின் CGPA பொருத்து பெரும்பாலும் ப்ரோஜக்ட் ஆசிரியர்கள் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஆசிரியரின் கீழ் பணிபுரியும் மாணவன் அவரின் விருப்பப்பாடத்தில் தான் ப்ரோஜக்ட் செய்ய வேண்டும். இது தான் பொதுவாக எழுதப்படாத விதி. நிலைமை இப்படி இருப்பின் மாணவனைப் பெரும்பாலும் புதிதாக சிந்திக்க விடமாட்டார்கள். இந்திய அரசாங்கம் வெளியிடும் ப்ரோஜக்ட்களை முடிக்க கல்விநிறுவனங்களுக்கு முதலிடம் தரப்படுகிறது. இவற்றைப் பெரும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் காசில்லாமல் வேலை வாங்கிக் கொண்டு நிறைய பணம் பார்க்கிறார்கள்.உதாரணமாக இந்திய அரசு நிறுவனத்திற்காக ஒரு சாப்ட்வேர் தயார்செய்ய 20 லட்சம் மதிப்பிலான ஒரு ப்ரொஜெக்ட் விளம்பரம் செய்யப்படுகிறது. கல்விநிறுவனத்திற்கு முதலிடம் என்ற வகையில் அந்த ப்ரோஜக்ட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு பேராசிரியர், தனக்குத் தொடர்புள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் (TCS, CTS…..) மூலமாக சில முக்கிய moduleகளை முடித்துக் கொண்டு, மற்றவற்றை தன் கீழ் ப்ரோஜெக்ட் செய்யும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்த வேலைக்கான பணம் போக மற்றவற்றை அவரே சுருட்டியும் விடுவார்.

IIT-ல் ஒரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு. முதல் வருடம் சரியாகப் படிக்காத Btech மாணவர்களை இரண்டாம் வருடம் performance சரியில்லை என்று அனுப்பியுள்ளார்கள். தரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று இந்த விடயம் கடந்த ஆண்டுகளில் நடந்தன. ஆனால் அதுபோல விதிமுறைகள் எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோல நீக்கப்பட்ட மாணவர்கள் வழக்குத் தொடர, IIT வழக்குத் தொடர்ந்த மாணவர்களை மறுபடியும் சேர்த்துக் கொண்டது. முன்பு இந்த விதிமுறையால் பாதிக்கப்பட்ட மாணவகள் கதி என்னவென்று தெரியவில்லை.

IIT-ல் கடந்த நான்கு ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் google-ல் IIT suicide என்று தேடிப்பாருங்கள்.

இந்தியாவில், 2006-ல் மட்டும் சுமார் 5897 மாணவர்கள் தேர்வுபளு காரணமாக (16 மாணவர்கள் /ஒரு நாள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் அதிகாரப்பூர்வமான தகவல். அப்படியாயின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை. தற்போது இதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம். இவற்றிற்கு காரணம், காதல் தோல்வி, தேர்வினால் மன அழுத்தம் என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதையும் தாண்டி பெற்றோரின் புரிந்துகொள்ளாத மனப்பக்குவம், ஆசிரியர்களின் சுயநலம், வருங்காலத் தூண்களை துரும்புகளாக மதிக்கும் அரசு என பல முக்கிய காரணிகள் உள்ளன. மாணவர்கள் படிப்பிலும், வாழ்க்கையிலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களிடம் ஒரு நண்பனைப் போல பழகி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தகுந்தவர்கள் (பிரச்சனைக்கேற்றவாறு) மூலம் கவுன்சிலிங் தேவை. அதை விடுத்து ஜோதிடரிடமும், சாமியாரிடமும் சென்று “என் மகனுக்கு எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று விசாரிப்பது”, மூடத்தனம் மட்டுமல்ல, பிள்ளைகளின் வேதனைக்கேற்ற மருந்தாக அமையாது. கீழ்தட்டு மக்களுக்கு மனநல மருத்துவம்,கவுன்சிலிங் எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் அணுக முடியாதவை தான். நம்முடைய சகபதிவாளர்கள் தம்மை இப்படி ஒரு உதவிகேட்டு வருபவர்களை கைவிடாமல் சரியான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கூறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது சம்பந்தப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும், மாணவனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டுமேயன்றி நாம் இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மேலும் இந்திய மக்கள் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனைப் போல் நடந்து கொள்ளுங்கள்.


Don't try to fix the students, fix ourselves first. The good teacher makes the poor student good and the good student superior. When our students fail, we, as teachers, too, have failed.
- Marva Collins

Tuesday, December 15, 2009

Change in democracy



    Always the change is misunderstood in democracy.

தெலுங்கனாவை தனிமானிலமாக காங்கிரஸ் அரசு அறிவித்தபின் ஆந்திராவில் பெரும் அமளியை உருவாக்கியுள்ளது.

    It is a false choice.

தெலுங்கானாவை தனியாக பிரிப்பதால் சந்திரசேகரராவுடன் கூட்டணி அமைத்து தெலுங்கனாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஆந்திராவில் இருந்து எதோ தெலுங்கனா பிரிந்தால் பொதுவுடைமை ஆட்சியா மலரப்போகிறது. அப்போதும் இதே காங்கிரஸ் கும்பல் தான் திருடப்போகிறது. சினிமாவையே ஜாதிரீதியாக ஆந்திராவில் பார்க்க ஒரு பெரிய கூட்டம் உண்டு. இந்த விடயத்தில் எப்படியோ? திருப்பதி நாமகாரருக்குத் தான் வெளிச்சம்.

    We're not perfect, but we do have democracy - Hugo Chavez


**************


காரல்மார்க்ஸின் ஆதர்ச நாயகன் ஸ்பார்சகஸ் (Spartacus).கி.மு-வில் மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்த ரோமாபுரிக்கு ஒரு ஆச்சரியக்குறியாக வந்தவர் தான் ஸ்பாடகஸ். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளை வீரர்களாக்கி கட்டுக்கோப்பான ரோமாபுரிப் படையையே கதிகலங்கடித்தவர். நான்கு அகெடமி விருதுகளை வென்ற Spartacus 1960-ல் வெளிவந்த திரைப்படம். வரலாற்றுப்படங்களில் முக்கியமான படம். Kirk douglas (Basic instincts புகழ் Michaeldouglas -ன் தந்தை) அற்புதமாக நடித்து இருப்பார். ஒரு கூடுதல் தகவல். இந்தப் படத்தில் வரும் ஒரு சிறைச்சாலை காட்சியை அப்படியே விருமாண்டியில் கமல் சுட்டு இருந்தார்.


****************

Friday, October 31, 2008

மார்க்ஸ் சாதனையும் டாஸ்மாக் சாதனையும்




#1 மார்க்ஸ் சாதனை:
தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதர சிக்கலுக்குப் பிறகு மறுபடியும் மார்க்சிசம், சோசியலிஸம், கம்புனிஸம் பற்றிய பொதுவான பார்வை மாறியுள்ளது போலும். தேடல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஜெர்மனியில், கார்ல்-டைட்ஸ் வெர்லாஃக் பதிப்பகம் 1500-க்கும் மேற்பட்ட கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூலின் பிரதிகளை விற்றுள்ளது. "1867-ல் எழுதப்பட்ட மூலதனம், ஆண்டிற்கு பொதுவாக விற்பனை இரண்டு இலக்கம் தாண்டுவதே அரிதாக இருக்கும்போது, தற்போது விற்பனை அதிகரித்துள்ளது", என்று அதன் பதிப்பாளர் கூறுகிறார்.

#2 டாஸ்மாக் சாதனை:
தமிழகம் முழுவதும் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளில் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'"ல் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும் எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. எதோ திரையில் விஜயகாந்த் வசனம் பேசுவது போல, ஒரே புள்ளியல் விவரமாக தினமலரில் வந்துள்ளது. அரசுக்கு வருமானம் அதிகமானாலும், இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கீழ்தட்டு மக்கள்தான். மற்ற மாநிலங்களை விட தற்போது, தமிழகத்தில் குடிப்போர் எண்ணிக்கை பெறுமளவில் அதிகரித்துவிட்டது. குடிப்பழக்கம் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் கூட பரவாயில்லை, அப்படி இருப்பதில்லையே. இது பெருமளவில் தனிமனிதர்களின் பொருளாதாரச் சிக்கலை அதிகரிக்கும், அதன் தொடர்ச்சியாக சமுதாய சிக்கல்கள் உருவாகலாம். தெரியாமலா வள்ளுவர் கள்ளுண்மை அதிகாரத்தை, தனிமனித ஒழுக்கமாக கருதி அறத்துப்பாலில் வைக்காமல், பொருட்பாலில் வைத்தார்.
என்ன நடக்கிறது, எங்கே போகிறது தமிழகம். மக்களைப் போதையில் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த கலைஞர் என்ன கலிகுலாவா? குறளோவியம் படைத்த கலைஞருக்கு இது தெரியாதா என்ன?
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.