Thursday, May 15, 2014

பெண்கள்/மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா?

பெண்கள் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்று சில விவாதங்கள் வருவதுண்டு. இணையத்திலும் இத்தகைய விவாதங்களைப் பார்க்கலாம். இப்படி விவாதிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாகவும் நகரவாசிகளாவும் இருப்பார்கள். 

கீழ்தட்டுமக்களில் வசிக்குமிடம் கிராமமாகட்டும் நகரமாகட்டும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். 

ஆதலால் இவ்விவாதத்தை மேம்போக்காக பெண்கள் என்று எடுத்துக் கொள்ளாமல், மேல்தட்டு பெண்கள் என்று சொல்லலாம். அவர்களைப் பற்றியே இக்கருத்துகள். இப்பெண்கள் வேலைக்குப் போகவேண்டிய காரணங்கள் என்று பார்த்தால்: ஒன்று பெண்ணின் விருப்பம், இரண்டு அவர்களின் குடும்ப சூழ்நிலை (விருப்பு வெறுப்புகளைத் தாண்டி வேறுவழியில்லாமல் செல்வது), மூன்று மற்றவரின் தலையீடு (அதாவது மற்றவரின் கட்டாயப்படுத்தல்). இவற்றில் மூன்றாவது பிரிவில் ஆண்களின் விருப்புவெறுப்புகள் (தலையீடுகள்) வருகின்றன.

தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் என எவ்வளவோ பெண் சொந்தங்கள் இருப்பினும், மனைவியை வேலைக்கு அனுப்புவது பற்றியே சிலர் தனித்தலைப்புடன் விவாதிக்கிறார்கள். மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்பதைப் பற்றி பேசும் பெரும்பாலான ஆண்களுக்கு உளவியல்ரீதியான ஒரு காரணத்தை நான் அவதானித்திருக்கிறேன். முதலாமவர்கள் மனைவி வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத தாயின் பிள்ளைகளாக இருப்பார்கள். இவர்களின் இளம்வயது வாழ்க்கை தாயின் கையால் நல்ல சாப்பாடு, தாயின் அரவணைப்பு என்று இருந்திருக்கும். இரண்டாமர்கள் மனைவி வேலைக்குப் போகத் தேவையில்லை என்று நினைப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகும் தாயின் பிள்ளைகள். இவர்களது இளம்வயது ஓட்டல் சாப்பாடு, தாயுடன் அதிக நேரம் செலவிட முடியாமை, சொந்தங்கள் வீட்டில் வளர்வது என்று இருந்திருக்கும்.

நான் பிறந்தபின், என் அம்மா வேலைக்குப் போகும்போது என் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு செல்வார். என் பாட்டி இறந்த பிறகு, எனது பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தனியாகவே இருக்க வேண்டிவரும். பூட்டிய வீட்டிற்குள் காலை முதல் மாலை வரை நானும் அண்ணனும் தனியாக இருப்போம். சில சமயம் நான் மட்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோரை உடைய குழந்தைகள் பலர்  சிறு- பெரு நகரங்களில் பெரும்பாலும் இன்றும் இப்படித்தான் தனியாக பூட்டிய வீடுகளில் இருக்கிறார்கள் (இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளை விட்டுச்செல்ல சில தாதிமார்கள் பெருநகரங்களில் இருப்பினும், அவர்களின் பராமரிப்பு என்ன? பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் அதற்காகும் செலவு என்ன? என்ற பல கேள்விகள் உள்ளன). மாலை வேலை முடிந்துவரும் என்னுடைய அம்மாவிற்கு வீட்டுவேலைகள் செய்யவே சரியாக இருக்கும். என் தந்தை வேலை முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் வருவார். அவர் வருவதற்குள் சமைத்தும் வைக்க வேண்டும்.  இப்படி பெண்கள் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பல பிரச்சனைகள் உண்டு. "உனக்கு வரவளயாவது வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு தராம பார்த்துக்க" என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. என்னுடைய அம்மா கூட குடும்ப சூழ்நிலை (கடன்) காரணமாகவே விருப்பமில்லாமலும் உடற்நிலையை பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய்கொண்டிருந்தார். கணவன், குழந்தைகள், வேலை என்று வாழ்ந்து, வேளைக்கு உணவருந்தாமல், தன்னையே தானே வருத்திகொள்ளும் ஒரு சராசரி இந்தியத்தாயாகவே வாழ்ந்தார்.

என் நண்பன் ஒருவன் ஒரிசாவில் நல்ல மத்திய அரசுப் பணியில் இருக்கிறான். அவன் திருமணம் செய்த பெண் ஆயுற்வேதம் படித்திருந்தாள். திருமணம் செய்து அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் "நீ வேலைக்குப் போ" என்று வற்புறுத்த ஆரம்பித்துவிட்டான். அப்பெண்ணுக்கு உடனடியாக போக விருப்பமில்லை. "இப்ப தானே வந்திருக்காங்க! வைத்தியம் பார்க்க மொழி தெரியனும், ஒடியா தெரிஞ்சிக்கட்டும். இடம் வேற புதுசு. வேற ஆட்கள். பயமா இருக்கும். ரெண்டு மூணு வருஷமாவது போகட்டும்" என்றேன் நான். "நீங்க எந்தக்காலத்தில் இருக்கிங்க. பொண்ணுங்க படிச்சா வேலைக்கு போகனும், வீட்டுக்குள்ளே அடங்கி இருக்கக்கூடாது" (என் மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம்? :) ) அப்படி இப்படி என்று லெக்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டான். குடும்பப் பிரச்சனை, வீட்டுக்கடன், பணவரவு என்று எதாவது உண்மையைச் சொன்னால் சரி, ஆனால் அதை விடுத்து இப்படி "முற்போக்கு" முகமூடி எதற்கு என்று தெரியவில்லை. சரி உன் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அவனுடைய தாயும் வேலைக்குப் போகாத பெண்மணி தான்.

இப்படி சொல்வதால், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்று யாராவது சொல்லலாம். ஆனால் இது தான் எதார்த்தம். நான் முடிவாக சொல்வது: முதலில் வேலைக்குப் போகலாமா வேண்டாமா முடிவெடுக்க வேண்டியவள் சம்பந்தப்பட்ட பெண், இரண்டாவது ஆணோ பெண்ணோ, அவர்கள் வேலைக்குப் போவது அவரவர் விருப்பம், குடும்பச் சூழ்நிலை பொருத்தது. இதையெல்லாம் பொதுப்புத்தியில் பார்க்க இயலாது. வேலைக்குப் போனால் பெண்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று பார்த்தால் (போக்குவரத்து, சமுதாயம், உடல்நலம், மாதவிடாய், பாலியல் தொல்லைகள், மன உளைச்சல்) அதற்கு தனியாக ஒரு பத்து பதிவாவது எழுதவேண்டும். வேலைக்குப் போகும் மனைவியரை ஊக்குவிக்கும் அல்லது விரும்பும் ஆண்கள் வெறுமனே வாயால் வடைசுடுவதை விடுத்து, அவர்களுக்கு சமையல், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலைகளில் கூடமாட உதவியாக இருக்கலாம். மனைவியருக்கு வேலை அலைச்சல், உடல்-மன உளைச்சல் ஏற்படும் காலங்களில் உதவியாக அல்லது குறைந்தபட்சம் ஆறுதலாகவாவது இருக்க வேண்டும். அதைவிடுத்து எல்லா வேலைகளையும் பெண்கள் மேல் சுமத்திவிட்டு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், "பாவம் சார்! உங்க சம்சாரம்".

=========================================================================

தேர்வு முடிவு

செய்தி ஊடகங்கள் கேடுகெட்டுப் போய் கிடக்கின்றன என்பதற்கு தற்போது நடக்கும் சம்பவங்களே சாட்சி. போன வருடத்திலிருந்தே மாதாமாதம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலும் முடிந்துவிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வந்துவிட்டன. ஆனால் எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில், கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டன. போன தேர்தலில் சொன்னது போலவே, தற்போது எல்லா கருத்துக்கணிப்புகளும் பாஜக பெருமளவு வெற்றி பெரும் என்கின்றன. இதற்கும் ஒருபடி மேலே போய், யார்யார் பாஜக அமைச்சரவையில் உள்ளனர் என்று செய்தி ஊடகங்கள் விவாதிக்க துவங்கிவிட்டன. யாருடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க. ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____  வேணும்னு சொன்னானான்.

அடுத்து, தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே மோடிக்கு இவர்களே பிரதமராக பதவிப் பிரமானம் செய்து வைத்துவிடுவார்கள் என நினைக்கிறேன். ஒன்றுக்கும் உதவாத இக்கருத்துக்கணிப்புகளை முதலில் ஒழிக்க வேண்டும். ஜோதிடம், குதிரை பந்தயத்தை விட கேவலமானது இது.

தமிழநாட்டில் 2009-ல் ஜெயலலிதா அதிக இடங்களில் வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைத்தேன். வெற்றி பெறவில்லை. 2011-ல் கருணாநிதி முதலமைச்சராக வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைத்தேன். வெற்றி பெறவில்லை. இப்போது ஜெயலலிதா வெற்றி பெறுவார் (பெற வேண்டும் என்றல்ல!) என நினைக்கிறேன். நாம் நினைப்பது எங்கே நடக்கிறது.

"நல்லவர் நினைப்பது ஒன்று தான் நடப்பதில்லை இத்தமிழ்நாட்டிலே". இதை அடியேன் சொல்லவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் சொல்லுவார்.

**********************************************************************************

இது போன்ற கோடைக்கால விடுமுறைகளில் என் அம்மாவிற்கு எழுத்துப்பணி, மாணவர் சேர்க்கை போன்ற வேலைகள் இருக்கும். அச்சமயங்களில்  நானும் என் அண்ணனும் பாட்டி வீட்டில் இருப்போம். அப்படி ஒருநாள். மதியநேரம் இரண்டு மனி இருக்கும். நான் மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் வழக்கம் போல, ஈயை அடித்து எறும்பு புற்றுக்குள் போட்டுக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம். திரும்பிப்பார்த்தால், வீட்டின் பின்புறம் இருந்த ஓலைக் கொட்டகை தரையோடு வீழ்ந்து கிடந்தது. என் பாட்டி உடனே ஓடிச்சென்று பார்த்தார். நானும் அவர் பின்னே ஓடினேன். அங்கே என் அண்ணன் கழுத்தில் மாட்டுக்குப் போடும் மூக்கணாங்கயிற்றுடன் விழுந்து கிடந்தான். என் பாட்டியின் ஓவென்ற அலறல் கேட்டவுடன், என் மாமாவும் சற்று நேரத்தில் வந்துவிட்டார். என் அண்ணனின் கழுத்தில் இறுகி இருந்த கயிற்றை கழற்றி வீசிவிட்டு, அவனை தூக்கிச் சென்று வெளியே போடப்பட்டு இருந்த கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்தார்.

என் அண்ணன் முகமெல்லாம் சிவந்து குளிர் காய்ச்சல் வந்ததுபோல் நடுங்கிக்கொண்டு ஒடுங்கி படுத்திருந்தான். அண்ணன் கழுத்தில் சிவப்பான கோடு போல் வீங்கி இருந்தது. என் பாட்டி, மாமா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள். நான் மட்டும் ஏன் அழுகிறேன் என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தேன். கொஞ்சம் விபூதியைக் கொண்டுவந்து அண்ணன் நெற்றியிலும் நெஞ்சிலும் பூசிவிட்டு "ஐயா முருகா! நாங்க என்ன பாவம் செஞ்சோம்" என்று சாமிப் படத்தைப் பார்த்து நெஞ்சில் அடித்து என் பாட்டி அழுது கொண்டிருந்தார். "என்ன ஆச்சி மாமா! அண்ணனுக்கு" என்று கேட்டேன். "தூக்குல தொங்க பாத்துகீராண்டா, கழி ஒடஞ்சி கூரை உய்ந்திடுச்சி, அதான் ஜொரம் வந்துட்டுகீது" என்று தழுதழுத்த குரலில் சொன்னார். மாலைவரை ஒரே சோகமயம். மாமவும் பாட்டியும் அண்ணன் பக்கத்திலேயே இருந்தார்கள்.

சாயுங்காலம் ஆறு மணி ஆனது. என் மாமா சென்று அண்ணனைத் தொட்டுப் பார்த்துவிட்டு "அம்மா! ஜொரம் கொரஞ்சி கீது! நீ அவனுக்கு ஒரு முழுங்கு காப்பி போட்டுகுடு. நான் டாக்டர்கிட்ட கூட்னுபோரன்" என்றார். சிறிது நேரம் கழித்து, என் அண்ணன் எழுந்து கட்டிலில் அமர்ந்தான். என்ன நடந்திருக்கும் என்று அவன் யோசிப்பது அவனது பார்வையிலே புரிந்தது. பாட்டி காப்பி கொண்டுவந்தாள். காப்பி குடித்துக்கொண்டே எங்களைப் பார்த்தான். "என்னடா! கழுத்து வலிக்குதா!" என்றார் மாமா. "இல்ல மாமா" என்று அழத் துவங்கினான். மாமா அவனைக் கட்டியணைத்து சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். பாட்டியும் ஒரு ஓரத்தில் நின்றவாறு விம்மிக்கொண்டிருந்தார். "எல்லாம் சரியா போச்சி! அழக்கூடாது! எழ்ந்துகோ டாக்டர்கிட்ட போலாம்" என்று அண்ணனின் கையைப் பிடித்து எழுப்பினார் மாமா. மெதுவாக எழுந்து அவனும் மாமாவுடன் கிளம்பினான். சைக்கிளின் பின்னே அமர்த்திக் கொண்டு மாமா போவதைப் பார்த்துக் கொண்டு வாசற்படியில் நான் நின்றிருந்தேன். "பாடாலப்பான்! காலைல்லிருந்து இந்த கயித்த தேடிகினு இருந்தான். இதுக்குதான்னு தெரியாம போச்சி" என்று திட்டியவாறு, மூக்கணாங்கயிற்றை சீமை எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருந்தார் என் பாட்டி.

அண்ணன் பத்தாம் வகுப்பு பெயில் ஆனதற்காக தற்கொலை முயற்சித்தான் என்பது பிறகு தெரியவந்தது.

**********************************************************************************

நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். - இது தட்ஸ்தமிழில் வந்த செய்தி. அதில் மானுவல் என்ற அன்பர் ஒரு பின்னூட்டம் (நகைச்சுவை) இட்டிருந்தார். 

ஒரு அலுவலகத்தில் மூன்று நண்பர்கள் மதிய உணவு இடைவேளையின் போது சபதம் எடுத்துக் கொண்டார்களாம், "நாளையும் இதே சாப்பாடு என்றால் தற்கொலை செய்து கொள்வேன்".
மறுநாள் முதலாமவர் "அதே சாப்பாடுதான் கொடுத்துவிட்டு இருக்கிறாள்" என்று சொல்லி சபதத்தை நிறைவேற்ற தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற இருவரும் அதே போல கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதை கேள்வி பட்ட இருவர்களுடைய மனைவிமார்கள் அழுதுக்கொண்டே, "முன்பே தெரிந்திருந்தால் இதுபோல் நடக்காமல் பார்த்திருப்பேனே ".
மூன்றாவது நபருடைய மனைவி மட்டும் அழாமல் "அவருக்கு தேவையானதை அவரே சமைத்துக்கொள்வார் நான் என்ன செய்வது ".

**********************************************************************************

Friday, May 09, 2014

கொசுவத்தி பதிவுகள்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய வகுப்பில் 120 பேர் இருந்தோம். அத்தனை பேரும் தரையில் தான் அமருவோம். வாத்தியார் கூப்பிட்டால் எழுந்து வரவும் முடியாது. அவராலும் எல்லோரையும் தாண்டி வந்து அடிக்க இயலாது. தூங்கினால் கூட தெரியாது, அவ்வளவு கூட்டமாக இருக்கும். இவ்வளவு நலன்களைத்தாண்டி ஒரே பிரச்சனை, காற்று வசதி. ஒரு ஜன்னல் தான் இருக்கும். எவனாவது குசுவிட்டால் பக்கத்தில் இருப்பவர்கள் செத்தார்கள். துர்நாற்றம் சுத்தி சுத்தி அங்கேயே இருக்கும். சில சமயம் வாத்தியரே எழுந்து திட்டிக் கொண்டே வெளியே போய்விடுவார்.


ஓலைக் கூரை என்பதால் கனமழை பெய்தால், தரை முழுக்க ஈரமாகி ஒன்று-இரண்டு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். பிறகு ஓலைக் கூரையை சீமைஓடாக மாற்றினார்கள். கத்தி போய் வால் வந்த கதையாக, வெப்பம் தாங்க முடிவதில்லை. வெள்ளாவிகுள்ள தூக்கிப் போட்டது போல இருக்கும். ஒரு வழியாக, எல்லா மாணவர்களிடம் கட்டாயமாக பணம் வசூலித்து மின்விசிறியும், குழல்விளக்கும் பொருத்தினார்கள். 

ஆறிலிருந்து ஏழாம் வகுப்பிற்குச் செல்லும்போது, வகுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிதாக சேர்ந்த மாணவர்களோடு சேர்த்து 70 பேர் இருந்தோம். எங்கள் வகுப்பில் வெறும் ஆண்கள் மட்டுமே. எல்லோரும் பென்சில் (bench) அமர்ந்தோம். உயரம் பார்த்து தான் வகுப்பில் அனைவரும் அமரவைக்கப்பட்டார்கள். முன்னாடி அல்லது கடைசி பென்சில்  உட்கார்ந்தால் அடிக்கடி வாத்தியாரிடம் அடிவாங்க வேண்டுமென்பதால், எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி நடித்து நடு பென்சில் ஒரு இடம் பிடித்துவிட்டேன். ஒரு பென்சிற்கு 6 பேர். இக்கட்டாக இருக்கும். நெருக்கி நெருக்கி அமர்ந்திருப்போம்.

விதி யாரை விட்டது. வகுப்பை இரண்டாக பிரித்தும் நெரிசல் என்னை விட்டபாடில்லை. கிரிக்கெட் ஆடும்போது, படாத இடத்தில் டென்னிஸ் பந்துபட்டு எனக்கு வீங்கிவிட்டது. நானே நடக்க முடியாமல் நடந்து வந்து பொத்தினாற்போல அமர்ந்திருப்பேன். பென்சில் உள்ளவர்கள் அப்போதுதான் நெருக்கியடித்து இடித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நேரந்தான் தம்கட்டி இடிபடாமல் பார்ப்பது. அடிபட்ட விஷயத்தை சொல்லவும் முடியாது. சொன்னாலோ 'கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார்கள்'. இடியிலிருந்தும் தப்ப முடியாது. பேசாமல் எழுந்துபோய் தரையில் அமர்ந்துவிடுவேன்.

பள்ளி வகுப்புகளில் கிளாஸ் லீடர் என்றொரு பதவி உண்டு. கொஞ்சம் உயரமானவர்களைத் தான் கிளாஸ் லீடர்களாக நியமிப்பார்கள். கலை என்ற பெயரில் ஒரு பெண், உயரமாக இருப்பாள். நன்றாக படிப்பாள். லீடர் வேலை என்னவென்றால், சாக்பீஸ்-டஸ்டர் தினமும் கொண்டுபோய் கொண்டு வரவேண்டும். மாணவர்களிடம் பணம் சேகரித்து அனைவருக்கும் கட்டுரை நோட்டுப் புத்தகம், வெள்ளைத்தாட்கள் வாங்கி வந்து கொடுக்க வேண்டும் (இதில்  கடைக்காரரிடம் கொஞ்சம் கமிஷனும் கிடைக்கும்). வாத்தியார் இல்லாத சமயங்களில் பேசுவோர் பெயரை எழுதிவைக்க வேண்டும். அதை வாரம் ஒருமுறை வாத்தியார் பார்வையிடுவார். இதற்கென்று ஒரு நோட்டுப்புத்தகம் வேறு இருக்கும். நான் என் ஓட்டைவாயை வைத்துக் கொண்டு எப்போதும் சும்மா இருப்பதில்லை. பேசிக்கொண்டே இருப்பேன். தினமும் முதல் பெயராக என் பெயர் நோட்டுப்புத்தகத்தில் வந்துவிடும். நானும் இதெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை. பெயர் ஏற்கனவே எழுதிவிட்டாள் தானே என்று இன்னும் சத்தமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒருநாள் நோட்டு முருகேச வாத்தியாரிடம் போனது. கலையும் என்னைப் பற்றியும் என் பேச்சாற்றலை பற்றியும் விலாவாரியாக சொல்லிவிட்டாள். வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
வாத்தியார்: ஏன்டா! இப்படித்தான் வகுப்புல பேசிகிட்டே இருக்கியா!
நான்: இல்ல சார்! நான் ஒருமுறை தான் சார் பேசினேன்
கலை: இல்ல சார்! அவன் சொல்லச்சொல்ல பேசிட்ட இருந்தான் சார்!
நான்: இல்ல சார்! பொய் சார்!
வாத்தியார்: சரி! அடுத்தமுறை எத்தனை தடவை பேசுரானோ, அத்தனைமுறை அவன் பேரை எழுது.
கலை நோட்டை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.
முருகேச வாத்தியார் என் தந்தையின் பால்ய நண்பர் என்பதால், எப்போதும் என்னை அடித்ததில்லை. "அறிவுகெட்டவனே! உங்கப்பனும் இப்படித்தான்" என்று செல்லமாக திட்டி அனுப்பிவிடுவார்.


மறுநாள்....
நான் வழக்கம்போல வாத்தியார் இல்லாத நேரம் தொனத் தொனவென பேசிக் கொண்டே இருந்தேன். இரண்டு நாள் இப்படியே போனது. மூன்றாவது நாள், நானும் என் பேச்சை துவங்கி இருந்தேன். சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் படத்தைப் பார்த்து எங்க தமிழ்வாத்தியார் பேசினால் எப்படி இருக்கும் என்று அவரைபோல பக்கத்தில் மாணவர்களிடம் செய்து காட்டிக் கொண்டிருந்தேன்.

கலை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் வந்தவுடன் என் சேட்டை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டேன். வந்தவள் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு "இரண்டு நாளாக உன்னுடைய பெயரை ராமஜெயம் எழுதுவது போல தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன், உன் பேச்சை நிறுத்தவே மாட்டியா" சொன்னாள். எனக்கு அவள் சொன்னதில் என்ன தோணியதோ அடக்கமுடியாத சிரிப்பு. அவளும் சிரித்தவாறே போய்விட்டாள். அதன்பிறகு அவள் என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அசட்டுதனமாக எதாவது செய்துகொண்டு இருப்பேன். நண்பன் லோகேஷ் மட்டும் நக்கலாக கேட்பான் "ஏண்டா! அந்தப் பொண்ணு உயரம் என்ன. உன் உயரம் என்ன. உனக்கெல்லாம் இது தேவையா!".

முன்பே சொன்னது போல, ஏழாவதில் என்னை வேறு வகுப்பில் போட்டுவிட்டார்கள். பிறகு கலையிடம் நான் பேசியதே இல்லை, வெறும் சிரிப்போடு மட்டுமே எங்கள் நட்புணர்வு இருந்தது. சில வருடங்கள் கழிந்தது. பத்தாவது தேர்வு முடிந்து ப்ளஸ் ஒன் சேர்வதற்கான விண்ணப்பத்துடன் பள்ளி அலுவலகத்தின் முன் நின்றிருந்தேன். மற்ற மாணவ- மாணவியர்களும் நின்றிருந்தார்கள். மாணவிகள் எல்லோரும் ஒவ்வொருவராக விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு போகிறார்கள். எனக்கு கலையும் கணக்கு குருப் எடுத்து என்னோடு ஒரே வகுப்பில் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கலை மட்டும் கண்ணில் தென்படவில்லை. யோசித்து யோசித்து, தயங்கியவாறு தனலட்சுமியிடம் கேட்டேன் "கலை வரவில்லையா? வேறெதாவது பள்ளியில் சேரப்போகிறாளா?" என்று. "கலைக்கு திருமணமாகி பெங்களூர் போய்விட்டாள்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,

அப்போது புரியவில்லை நான் ஏன் அதிர்ச்சி ஆனேன் என்று. பிறகு புரிந்தது...

என்னமோ இது இன்பாங்களே! அதான்... அதான்பா...சே! அந்த...இது! ....ஆங்! இன்-பேக்-சிச்சுவேஷன்.