Tuesday, August 12, 2008

சாரு நிவேதிதாவின் விமர்சனம் மற்றும் கொஞ்சம் தைமூர்

ew Page 1

குசேலன் படம் பார்த்தேன். பரவாயில்லை! 'கதபறயும்போள்' படம் போல இதுவும் மொக்கையாகத்தான் இருக்கிறது.பசுபதி மற்றும் ரஜினி தவிர யாரும் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. ரஜினியின் இமேஜை நம்பி மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு. இப்படத்தில் ரஜினியைக் குறை சொல்லும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஓவர் ஹைப் கொடுத்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது வாசு. சுமாராக படம் எடுத்துவிட்டு சிவாஜி, தசாவதாரம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறது அவர்களுக்கே ஓவரா படலயா?

இது ஒரு பக்கம் இருக்க. நம்ம சாரு சார், அவரோட தளத்தில் குசேலனை ஒரு பிடி பிடித்துள்ளார். ஆனாலும்,

"ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து? தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்." என்று எழுதி இருந்தார். ஆனால் "ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா?" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்...? அது அவருக்கே புரிந்த விடயம்.

சாரு சார் ஒரு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நூல் எழுதுவதாக சொல்லி இருந்தார். அவருக்கு கவுண்டமணியையே தெரியாதுனு சொல்லிட்டு தமிழ் சினிமாவை பற்றி எப்படி எழுத முடியும் என்று தெரியவில்லை. காமெடியையும் தமிழ் சினிமாவையும் எப்பவும் பிரிக்கமுடியாது. மற்றும் என்னைப் பொருத்தவரை காமெடியன்களுக்குத்தான் சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்புத் திறன் உண்டு. அந்த வகையில் கவுண்டரும் சளைத்தவர் அல்ல. காலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்?

***************

மம்மி படத்தில் வருவது போல ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன். 14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!

**************

Tuesday, August 05, 2008

எம்.ஆர்.ராதா, Zulu, மற்றும் குசேலன்

குசேலன் படத்தில் 25% தான் நான் வருகிறேன் என்று ரஜினி கூறிய பிறகும். பி.வாசு சொன்னத கேட்டு போய், பார்த்து, ஆப்பு வாங்கிவந்து தமிழ்மணத்தில் புலம்பும் அறிவுஜீவிகளே! நீங்கள் ஏமாந்து போனதுக்கு ரஜினியின் டவுசரை எதுக்கு கயட்டனும்!! எதோ போனதுக்கு நயந்தாராவை மீனாவை பார்த்தோமா! வந்தோமானு இருக்கணும்!!

************************

"தொழில்நுட்பத்திலயும் நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறி இருக்கு. ஆனால் சம்ஜெக்ட் தான் அட்வான்ஸ் ஆகல. போட்டி போட்டுகிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப்பார்க்கிறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது? இதுவாமுன்னேற்றம். ஒன்னு சொல்லுரேன் கேளுங்க. நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சி போனாத்தான் தமிழ்படவுலகம் உருப்படும். அப்பத்தான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதையா எடுக்க முன்வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களையே காட்டி ஜனங்களை ஏமாற்ற முடியும்" - இதைக் கூறியது நானில்லை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தவிகடனில் ராதா அவர்களுடைய பழைய பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். இதில் என்ன வியப்பென்றால், அன்று ராதா அவர்கள் கூறியது இன்று நம் தமிழ்த்திரையுலகிற்கு பொருந்துகிறது. ஆனால் ஒரு வேறுபாடு என்னவென்றால், ராதா கூறிய நாலைந்து பேர்... அப்போது முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் அவர்களைத்தான் குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போது நிலைமை இன்னும் மோசம். ரஜினி, கமல் கூட மாறுபட்ட கதையில் நடிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் நடிகர்களாக வலம் வரும் பெரும்பாலானவர்கள் அரைச்சமாவுக் கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். இயக்குனர்களில் கதைக்களம் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் நம்பிக்கையளிப்பது பாலா, சேரன், மிஷ்கின், அமீர். மேலும் புதுவரவுகளான வசந்தபாலன், கற்றதுதமிழ் ராம், சசிகுமார். இருப்பினும் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் போல புதுஇயக்குனர்களும் தமிழ்படவுலகை தன் வசப்படுத்தினால் ஒழிய கதைக்கும், களத்திற்கும் முக்கியத்துவம் ஏற்படாது.

மேலும் ஒழுங்கான தழுவல் படங்கள், குழந்தைகளுக்கான படங்கள், த்ரில்லர் படங்கள் குறைந்துவிட்டன என சொல்லுவதற்கில்லை..வருவதேயில்லை. சற்றுமுன் வந்து தமிழ்மணத்தில் ஏகத்துக்குக் கிழிக்கப்பட்ட குசேலன் போன்ற மொக்கைப்படங்களும், விஜய், ஜெயம்ரவி பாணி மசாலாப் படங்கள் தான், தழுவல் படங்களின் அடையாளங்களாக உள்ளன. 'மூடுபனி', 'ஜுலிகணபதி' போன்ற படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவலாக இருப்பினும், நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் திரைக்கதையை கௌதம்மேனன் அட்சரம் பிசகாமல் ஆங்கிலப்படத்திருந்து சுட்டுவிட்டு, மற்றவர் படங்களை (பொல்லாதவன்) குறை கூறிக்கொண்டு திரிகிறார். 'அஞ்சலி'க்குப் பிறகு ஒரு படம் கூட குழந்தைகளை மையமாகக் கொண்டு தமிழில் வரவேயில்லை.

********************

நான் சமீபத்தில் பார்த்த மற்றொரு ஆங்கிலப்படம் "Zulu". ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் காலனிஆதிக்கம் செலுத்தியபோது, ஜுலு என்ற ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் ஏற்படும் போர் குறித்த உண்மைச் சம்பவம் தான் கதை. இதோ இப்படத்திற்கான youtube இணைப்பு. தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

Zulu Trailer



திகில் படவரிசையில் சாகாவரம் பெற்ற 'Rosemary's baby' படத்தையும், Sergio leone இயக்கத்தில் வெளிவந்த "A fistful of Dynamite" என்ற western genre படத்தையும் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது, அது பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொள்வோம்.

New Page 1

புரட்சி பற்றி 'A fistful of dynamite' படத்தில் வரும் ஒரு வசனம். பின்னணியில் Ennio morricone-ன் இசை தவழ்ந்து கொண்டிருக்கிறது.




***********************

Saturday, June 21, 2008

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை!!

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. சுருங்கச்சொன்னால், இப்படம் மைக்கெல் மதன காமராஜன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் ஒரு மணிநேரம் க்ளாசிக் பட ரசிகர்களை கவரும் விதமாகவும், அடுத்த இரண்டு மணிநேரம் அசல் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கிரேஸிமோகன் படமாக மாறிப்போகிறது. நிச்சயம் இந்தக் கலவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணம். பொழுது போக்கிற்கான நல்ல படம். ஒரு சராசரி தமிழனுக்கு என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்துவிடப் போகிறது. சில பாத்திரங்களுக்கு மேக்கப் சற்று உறுத்தல்தான். அப்பாத்திரங்களை கமலால் மேக்கப் இல்லாமலேயே வெகு அழகாக நடித்திருக்க முடியும். பத்து பாத்திரங்கள் நடிக்க வேண்டி, ஒரு திரைக்கதையை தயாரித்தார் கமல். ஆனால் திரைக்கதையின் பலம், பத்து வேடங்களை ஏன் கமலே நடித்தார், வேறு யாராவது நடித்திருக்கலாமோ? என்று யோசிக்க வைக்கிறது. இவ்வகையில் எழுத்தாளர் கமல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். படம் முழுக்க வரலாற்றுத் தகவல்களையும், விஞ்ஞானத் தகவல்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஏனோ நம் தமிழ்மண பதிவாளர்கள் சிலர், வழக்கம் போல... பில்லாவிற்கு விமர்சனம் எழுதியது போல இது சரியில்லை, அது சரியில்லை என்று எழுதியுள்ளார்கள். நெப்போலியன் தமிழ் சரியில்லை என்றொரு கருத்து. (ஆங்கிலம் பேசும் வெள்ளையரிடம் கட்டபொம்மன் பேசிய தமிழ்வசனங்களைப் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் இவர்கள்!!) நெப்போலியன் நன்றாகவே பேச முயற்சித்துள்ளார். நெப்போலியன் தவிர்த்து, சரத்குமார் நடித்திருக்கலாம். "என்றா பேசுரே!! கட்டிவச்சி, தொலை உரிச்சிபோடுவேன்!!" என்று பேசி இருப்பார். அல்லது கமலே ஒரு வேடமாக ஏற்று நடித்திருக்கலாம்.

உடல்மொழி விஷயங்களில் கமல் பின்னிப்பெடல் எடுக்கிறார். அப்படி வேடத்திற்கு வேடம் வேறுபாடு. உலகில் எந்தக் கலைஞனாலும் இவ்வளவு அழகாக உடல்மொழி, பேச்சு, செயல் வேறுபாடு காட்டி நடிக்க இயலாது. கமலின் கடினமான உழைப்பு கட்டாயம் தெரிகிறது.

அன்பேசிவம் போன்ற கிளாசிக் படத்திற்கு சென்று காமெடி சரியில்லை என்பவர்கள், வசூல்ராஜா படத்திற்கு சென்று நாயகன், மூன்றாம்பிறை கமலைத் தேடுபவர்கள் அனைவருக்கும் ஒரு செய்தி. ஹேராம், குணா, அன்பேசிவம் போன்ற படங்களை எடுத்ததன் மூலம் நட்டம் மட்டுமே சந்தித்த கமல், மேற்கண்ட படங்களையே எடுத்துக்கொண்டிருந்தால் பிச்சைதான் எடுக்க வேண்டிவரும். இப்படங்களுக்கு கமலுக்கு தேசியவிருதுகூட கிடைக்கவில்லை. மசாலா படங்களில் நடித்தாலும் கமலின் நடிப்பை மட்டுமே ரசிப்பவர்களில் நானும் ஒருவன். அவ்வகையில் பார்க்கக்கூடிய படம்.