Sunday, October 14, 2012

கொசுவத்தி சுத்தலாம் வாங்க


அன்று என்னுடைய குழந்தை பிறந்து மூன்று நாள் ஆகி இருந்தது. குழந்தை கொஞ்சம் எடை குறைவு என்று இன்டென்ஸிவ்கேரில் வைத்திருந்தார்கள். ஒருவழியாக மதியம் குழந்தையை கொடுத்துவிட்டார்கள். குழந்தையை பார்த்துக் கொண்டு எனக்கும் என் மனைவிக்கும் பொழுதுபோவதே தெரியவில்லை. இரவு ஏழு மணியாகிவிட்டது. மருத்துவமனையில் எங்களுடைய அறையின் நுழைவாயிலின் அருகே குளியலறை இருக்கிறது. என்னுடைய மனைவி சிறுநீர் கழிக்க வேண்டும் என எழுந்து போனாள். ஆனால் அவள் எங்கள் அறையிலுள்ள குளியலறையைத் தாண்டி வெளியே சென்றாள். நானும் பின்னால் சென்று பார்த்தேன். அவள் பக்கத்து அறையின் கதவின் அருகே சென்றாள். நான் ஓடிச் சென்று ஏன் அங்கே செல்கிறாய் எனக் கேட்க, மறந்து அங்கே சென்றுவிட்டேன் எனச் சொல்லி எங்களின் அறைக்குத் திரும்பிவிட்டாள். இவளுக்கு என்ன ஆனது என என்னால் யூகிக்க முடியவில்லை. நடந்ததை நர்ஸிடம் கூறினேன். அவர் பிரச்சனை ஒன்றும் இல்லை, முதல்குழந்தை பெற்றிருக்கிறாள் அப்படித்தான் இருக்கும் சரியாகிவிடும் எனக் கூறி நகர்ந்தார். இரவு எட்டு மணியாகி இருந்தது. என் மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன்.

வீட்டிடிற்கு போகும் வழியில் மனதிற்குள் எதோ குழப்பம். என் மொபைலில் காசில்லை. அருகிலிருந்த பூத்தில் இருந்து சில்லரை போட்டு தொலைபேசினேன். என் மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருப்பதாக சொன்னாள், நானும் தொந்தரவு செய்ய வேண்டாமென, பிறகு பேசுவதாகக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டேன். வீட்டிற்கு வந்த்தும் மறுபடியும் என் மனைவிக்கு தொலைபேசினேன். இம்முறை அவள் வேறொரு அறையில் இருப்பதாகவும் என்னுடைய மச்சான் வந்து அறை மாற்ற உதவி செய்ததாகவும் கூறினாள். மறுபடியும் எனக்குள் எதோ ஒரு குழப்பம். உடனே என்னுடைய மச்சானுக்கு தொலைபேசினேன். அவன் மருத்துவமனைக்கு போகவில்லை என்றான். திரும்பவும் என் மனைவிக்கு. இம்முறை எனக்கு மிகுந்த கோபம். அவள் எங்கிருக்கிறாள் என கேட்டேன். அதற்கு அவள் „என்னை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டார்கள். அது மனநல மருத்துவமனை. நானும் குழந்தையும் அங்கு தான் இருக்கிறோம்“ என்றாள். அந்த மருத்துவமனையின் முகவரியை கேட்டு எழுதிக்கொண்டேன்.  வீட்டைவிட்டு கிளம்பினேன்.

இரவு 12:30 மணி ஜனவரி மாதம் சரியான குளிர். இரவு அந்த மருத்துவமனை செல்ல இரண்டு பேருந்து மாறவேண்டி இருந்தது. கடைசியாக என் மனைவி குறிப்பிட்ட முகவரி உள்ள தெருவிற்கு வந்துவிட்டேன். ஆனால் இரண்டாம் எண் உள்ள வீட்டில் மருத்துவமனை இல்லை. ஒரு கடை உள்ளது, அதுவும் பூட்டியுள்ளது. கடைகளும், வளாகங்களும் நிறைந்த தெரு என்பதால் இரவில் யாரும் இல்லை. அத்தெருவின் நடுவில் ஒரு பூத் இருந்தது. அங்கு சென்று அவளுக்கு தொலைபேசினேன். இப்போது வீட்டு எண் 2 இல்லை 102 என்றாள். வெளியேவந்து நிற்பதாகவும் சொன்னாள். ஆனால் அவ்வெண் உள்ள வீட்டிலும் மருத்துவமனை இல்லை. இவள் மற்றும் குழந்தையின் நிலையை எண்ணி எனக்கு சுத்தமாக பொறுமை போய்விட்டது. மறுபடியும் தொலைபேசினேன். மறுபடியும் சொன்னதையே சொல்கிறாள். நிசப்தமாக தெருவில் பைத்தியம் பிடித்த்து போல நான் மட்டும் பூத்தில் நின்று கத்திக் கொண்டு இருக்கிறேன். பிறகு அழுது கொண்டே, எங்கிருக்கிறாய் எனக் கேட்கிறேன். „நான் உன் முன்னாடி தானே நிற்கிறேன். உனக்கு கன் தெரியவில்லையா?“ என்றாள். சிரிக்கிறாள். தொடர்ந்து என்னுடைய பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். என்னிடம் இருந்த சில்லரைகள் முழுவதும் தீர்ந்துவிட்டன. எனக்கு என்ன செய்யவதென்று தெரியவில்லை. கிட்டதட்ட மூன்று மணி ஆகிவிட்டு இருந்தது. அப்போது எதிரே ஒரு டாக்ஸி வந்தது. அதில் ஏறிக்கொண்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்.

மருத்துவமனை வந்தடைந்ததும், வேகமாக ஓடிப்போய் என் மனைவியின் அறைக்குச் சென்று எட்டிப்பார்த்தேன். அவள் குழந்தையுடன் படுத்துக்கொண்டிருந்தாள். எனக்கு உயிர் வந்தது போல இருந்தது. அவள் தூங்காமல் இருந்தாள். போய் அவள் பக்கமாக அமர்ந்தேன். „என்னை ஏன் இப்படி அலையவிட்டாய்“ என்றேன். அதற்கு அவள் „நான் உன் முன்னாடி தான் நின்றிருந்தேன், நீ தான் கவனிக்கவில்லை“ என்றாள். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு அவளுடைய பிரச்சனை ஓரளவுக்கு புரிந்துவிட்டது. நான் அவளை தூங்கச் சொல்லிவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்று அமர்ந்தேன். காலை 9 மணி வரை நான் தூங்கவில்லை. குழந்தையுடனே அமர்ந்திருந்தேன். என் மனைவி பிறகு வந்தாள், நேற்று இரவு நடந்த நிகழ்ச்சி எதுவும் அவள் நினைவில் இல்லை. நான் நடந்தவற்றைக் கூறியதும் ஆச்சரியமாகக் கேட்டாள். குழந்தை இன்டன்ஸிவ்கேரில் இருந்ததால், குழந்தை பிறந்ததிலிருந்து மூன்று நாள் தொடர்ச்சியாக என் மனைவி தூங்கவில்லை. நான் விட்டிற்கு சென்ற பிறகு அவள் இரவில் தூங்குவதாக நினைத்திருந்தேன். தினமும் பலமுறை இன்டென்ஸிவ் வார்டுக்கு இரவுபகலாக போய்போய் வந்திருக்கிறாள். சிலசமயம் இரவில் குழந்தையின் அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். அதனால் ஏற்பட்ட ஒருவித மஅழத்ம் தான் அத்தனையும். குழந்தை பிறந்தும் பெண்குக்கு வும் போஸ்ட்பார்டம் டெப்ன். ஆனால் இவையாவும் நான் கூறிய பிறகே நர்ஸ்களுக்கு தெரிந்தது. அவளிடம் இருந்த மாற்றத்தை யாரும் உணரவில்லை. எப்படியோ ஒரு வழியாக தாயும் சேயும் நலமடைந்தது மிக்கமகிழ்ச்சி. உதவி கேட்கவும் ஆளில்லாமல் தனியாக நான் அன்றிரவு ஓடித்திரிந்தது வாழ்நாளில் மறக்கவியலாத சம்பவம்.

எனக்கு பிடித்த பாடல்கள்


பங்காளிகள் என்ற படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல். இந்தப் பாடலைக் கேட்டால் என் தந்தை ,என் குழந்தை இருவரும் ஒருசேர என் நினைவில் வந்துவிடுவார்கள். நானும் எங்கப்பாவுக்கு குழந்தை தானே.


சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவதாக அமைந்த பாடல். பாடுபவர் சி.எஸ். ஜெயராமன். நடிப்பவர் டி.கே. பகவதி. இவர்கள் இருவருக்காக நான் இப்பாடலை கேட்டதுண்டு. இப்பாடலின் இசை சோகத்தையும், கவலையையும் சொல்லும்.


'ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதி ஹை' என்ற படத்தில் முகேஷ் பாடிய பாடல். ராஜ்கபூர் நடித்துள்ளார். ஷைலேந்திராவின் பாடல் வரிகள் மிகவும் அருமை. தேசியகீதத்தின் தகுதி இப்பாடலுக்கு உள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது.

Friday, October 12, 2012

மொகலாய கிசுகிசு

மொகலாய மன்னர் அக்பருக்கு இரு சந்தேகங்கள் இருந்ததாம். ஒன்று கங்கை ஆறு எங்கிருந்து தோன்றுகிறது. இரண்டு குழந்தைகள் பேசும் மழலை மொழி என்ன மொழி. முதல் சந்தேகத்தின் விடையைக் காண ஒரு கூட்டம் அனுப்பப்பட்டது. சென்று வந்தவர்கள், „ஆற்றைத் தொடர்ந்து சென்றோம், பல காடுமேடுகளைக் கடந்தோம். முடிவில் ஒரு மலைமேல் பெரிய மரத்தாலான மாட்டின் தலை இருந்தது. ஆற்றுநீர் அதன் வாயில் இருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த மலையின் பின்னே சென்று பார்க்க முடியவில்லை“ எனச் சொன்னார்கள். அவர்களுக்கு மன்னர் கொஞ்சம் பொருளுதவி செய்து அனுப்பினார்.

மன்னருடைய இரண்டாவது சந்தேகத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள் பேசும் மொழியைத்தான் ஆதிமனிதர்கள் (ஆதாம், ஏவாள்) பேசியிருக்க வேண்டும் என்பது மன்னரின் கருத்து.. அதை நிவர்த்தி செய்ய பல மொழி விர்ப்பன்னர்கள் ஒன்று கூட்டப்பட்டனர். அனைவரும் தங்களின் மொழியையே மழலை மொழியை ஒத்திருப்பதாக  கூறினார்கள். 12 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் தனியாக வளர்க்கப்பட்டார்கள். அவர்களை பல மொழி அறிஞர்கள்   கண்காணித்தார்கள். 12 ஆண்டுகள் கழித்து, யாரும் மழலை மொழிக்கும் மற்ற மொழிகளுக்கான தொடர்பை உறுதிபடுத்த முடியவில்லை. இந்த சம்பவம் நடந்திருக்குமா என நமக்குச் சந்தேகம் எழலாம். ஆனால் அக்கால மன்னர்கள் இது போல எதுவேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
அக்பர் காலத்தில் மது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஐரோப்பியர்களுக்கு மட்டும் அந்த விதி தளர்த்தப்பட்டது. மதுவகைகளை தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மன்னர் ஜஹாங்கீர் நன்றாக மது அருந்துவார் என்பது ஓரளவுக்கு மொகலாய வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். ஜஹாங்கீருக்கு ஐரோப்பிய கிருத்துவ நண்பர்கள் அதிகம். ஒருமுறை சில பாதிரியார்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்றிக்கறி பற்றிய பேச்சு வந்தது. பன்றிக்கறி சமையல் எப்படி இருக்கும் என ஜஹாங்கீர் கேட்க, பாதிரியார்கள் „மிருதுவாகவும், வாசமாகவும்“ இருக்கும் என்றார். உடனே ஜஹாங்கீருக்கு பன்றிக்கறி சமையல் சாப்பிட ஆவல் வந்துவிட்டது, தன் விருப்பத்தையும் அவர்களிடம் தெரிவித்தார். பாதிரியார் ஒருவர் வீட்டில் விருந்து தயாரானது. மன்னரும் விருந்திற்கு சென்றுவிட்டு வந்தார். மன்னருக்கு நெருக்கமான சில இஸ்லாமிய அறிஞர்களுக்கு மன்னரின் புதிய உணவுப் பழக்கம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருநாள் எப்படியும் இன்று கேட்டுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இஸ்லாமிய வழக்கப்படி பன்றிக்கறி உண்பது தவறு என்று எடுத்துச் சொன்னார்கள். உடனே ஜஹாங்கீருக்கு கோபம் வந்துவிட்டது. „சரி! பன்றிக்கறி சாப்பிட அனுமதிக்கும் மதம் ஒன்றைக் கூறுங்கள்“ என்றார் மன்னர். „கிருத்துவம்“ என பதில் வந்தது. „நானும் கிருத்துவத்திற்கு மாறலாம் என நினைக்கிறேன்“ என்று மன்னர் சொன்னதுதான்,  அதற்கு பிறகு யாரும்  ஜஹாங்கீரிடம் உணவைப் பற்றியும், மதுவைப்பற்றியும் வாய் திறப்பதில்லை.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கொசுவத்தி சுத்தலாம் வாங்க

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் தமிழாசிரியர் பெயர் சங்கரன். வகுப்பில் எப்பவும் சுத்த தமிழில் பேசுவார். எங்களையும் பேசச் சொல்லுவார். அப்போது இருந்த ஒரு வழக்கம் என்னவென்றால், ஆசிரியர்கள் டீ,காபி வாங்கிவரச் சொல்லும்போது பேனா கொடுத்து அனுப்புவார்கள். டீகிளாஸுக்கு பதிலாக பேனாவை கொடுத்துவிட்டு டீ,காபி வாங்கிவருவோம். திரும்ப கிளாஸ் கொண்டுபோய் கொடுக்கும்போது பேனாவை வாங்கிக் கொள்வோம். சங்கரன் ஐயா பேனாவை பிரகாசத்திடம் கொடுத்துகொட்டைவடிநீர்(coffee) வாங்கி வாஎன்றார். பேனாவை வாங்கிச் சென்ற பிரகாசம் சற்றுநேரம் கழித்து பேனாவைக் கொண்டுவந்து கொடுத்தான். சங்கரன் ஐயாவுக்கு ஒன்று விளங்கவில்லை. பிறகு தான் தெரிந்தது, பிரகாசம் கொட்டைவடிநீரைபேனாமைஎனப் புரிந்து கொண்டு பேனாவில் மை நிரப்பி வந்தது.