Sunday, July 08, 2007

பிறந்தநாள் காணும் உடன்பிறப்பிற்கு வாழ்த்துக்கள்!!

பிறந்தநாள் காணும் பாசக்கார குடும்ப உறுப்பினர் மற்றும்் என்னுடைய உடன்பிறப்பு 'கவிதாயினி காயத்ரி'க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Friday, July 06, 2007

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா?

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா? நான் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது, எங்க ரூம்மேட் ஒருத்தன். கார்த்தினு பேரு.தினமும் மூணு வேளை சாப்பிடுரானோ இல்லயோ, மேக்கப் போட்டுப்பான். பொண்ணுகளோட கடலை ரொம்ப வறுப்பான். இதைப்பார்த்தா எங்க வயறு சும்மா இருக்குமா கும்மிட்டி அடுப்பு மாதிரி எரிய ஆரம்பிச்சது. அவனை பல்ப் ஆக்க சமயம் பார்த்துட்டு இருந்தோம். வழக்கம் போல அன்னைக்கு இரவு 8:00 மணிக்கு மேக்கப் போட்டுட்டு இருந்தான். நான் "டேய் கார்த்தி மீசை உனக்கு ஏண்டா சரியா வளரல" என்று வாய கிளரினேன். "தெரியல மச்சான்! அது எப்பவும் அப்படித்தான் இருக்கு!" என்றான் கார்த்தி. இதைகேட்ட நம்ம பசங்க நான் போட்ட கோட்டுல ரோடு போட ஆரம்பிச்சாணுங்க."அசிங்கம்டா! ஒரு ஆம்பளைன்னா மீசை நல்லா இருக்கணும்!" என்று சொல்லி அவனை உசுப்பேத்தினானுங்க. அந்த அப்பாவி கார்த்தி என்ன செய்தா மீசை நல்லா வளரும்னு இந்த மடப்பசங்களையே ஐடியா கேட்டான். இவனுங்க குஷி ஆகிட்டானுங்க. "மஞ்சள் தடவினா மீசை நல்லா வரும். மீசை மழிச்சிட்டு தடவினா இன்னும் நல்லா வரும்" என்று கூட்டாளி ஒருத்தன் சொன்னான். "பாருடா நம்ம சீனியோட மீசைய கம்பிகட்டு போல, எல்லாம் மங்சளோட மகிமை" என்று இன்னொருத்தன் கொளுத்தி போட்டான். இவனுங்க அள்ளி விட்டத எல்லாம் அந்த லூசும் நம்பிட்டு இருந்தான். நிலைமை புரியாம "சரி நான் இப்பவே மீசைய மழிச்சிக்கிரேன்" என்று சொல்லிட்டு போய், மீசைய எடுத்துட்டான். மீசையில்லாத அந்த திருமுகத்த பார்த்த சிரிப்பு தாங்கம நான் வெளியே ஓடிட்டேன். கோபுரம் பூசுமஞ்சள் வாங்கி வந்து கொஞ்சம் தடவிட்டு படுத்துட்டான். எங்களுக்கு சிரிப்பு ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் ( எங்க இவனுக்கு சுத்தமா மீசை வரம போயிடுமோ என்று).

மறுநாள் காலை மஞ்சள் போட்டது, முகத்தை கழுவின பிறகும் நல்லா தெரிஞ்சது. காலேஜ்க்கு போனான். இன்னைக்கு சாயுங்காலம் கொலை விழ்ப்போகுதுனு நெனச்சேன். சாயுங்காலம் எல்லாரும் அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். யாரோடும் பேசம இருந்தான். ஒருத்தன் ஆரம்பிச்சான் "என்ன மாமு! நம்ம கார்த்திக்கு மீசை வந்துடுமா?". சும்மா இருந்த சன்கை ஊதி கெடுத்த மாதிரி, கார்த்தி எழுந்து வந்து எல்லாரையும் சபிக்க ஆரம்பிச்சான். பொரம்போக்கு, நீங்க உறுப்படுவிங்கலா,... இப்படி அவனுக்கு தெரிந்த வார்த்தைல அர்ச்சனை செய்தான். எப்படியோ யாரையும் அடிக்கல. அப்ப 'என்னம்மா கண்ணு' படத்தில் வடிவேலு மஞ்சள் பூசினதால மீசை இல்லாம சுத்துவார். அந்த படத்தில் அவரோட பேரு "டெலக்ஸ் பாண்டியன்". இந்த பேர எங்க கார்த்திக்கு வச்சிட்டோம். பொண்ணுகளோட பேசிட்டு இருந்தா, டெலக்ஸ்்னு கூப்பிட்டா போதும், சும்மா கன்னுகுட்டி போல துள்ளி ஓடிவருவான். அப்படி ஒரு பாசம் அவனுக்கு எங்க மேல. இல்லாட்டி நாங்க பக்கத்தில் விலாவரியா சொல்லி மானத்தை வாங்குவோம். இது தான் சதாரண கார்த்தி டெலக்ஸ் பாண்டியன் ஆன கதை.

பி.கு.: இதை பார்த்து அன்பர்கள் யாரும்் மீசை எடுத்து மஞ்சள் தடவி சாருக், சல்மான் ஆக முயற்சி செய்யாதீங்க. டெலக்ஸ்க்கு மீசையெல்லாம் வந்தது, வரம போகல. இதை தெரிஞ்சி தான் இந்த விளையாட்டுல நாங்க இறங்கினோம்.

Thursday, July 05, 2007

திரையுலக வித்தகர் அகிரோகுரோசவா


ஜப்பானிய இயக்குனர் அகிரோகுரோசவா திரையுலகில் மறக்கமுடியாத மந்திரம்.உலகத்திரையுலகிற்கு புதியபிம்பத்தைக் கொடுத்தவர். 'எண்டெர்டெயின்மெண்ட் வீக்லி' வரிசைப்படுத்திய தலைசிறந்த 50 இயக்குனர்களில் இருந்த ஒரேயொரு ஆசிய இயக்குனர். அதில் 6வது இடம் இவர். இவர் இந்தியாவின் சத்யஜித்ரேவின் ரசிகரும் கூட. ஐம்பதுகளில் இவர் இயக்கிய படங்கள் விதைத்துச் சென்ற புதுமை ஏராளம். இவர் இயக்கிய ரோஷமொன் படத்தின் அடினாதம் சிவாஜி நடித்து வெளிவந்த அந்தநாள் முதல் விருமாண்டி என்கிற சண்டியர் வரை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திரைப்பட தொழில்நுட்பத்தில் உலகை உலுக்கிக்கொண்டு இருந்த மேற்குலகை திகைக்க வைத்தவர்.

1954-ல் வெளியான செவன்சாமுராய் ஹாலிவுட்டில் மெக்னிபிசந்த் செவன் என தயாரிக்கப்பட்டு பெரும்வெற்றி பெற்றது. பாலிவுட்டின் சோலே,சைனாகேட் கூட இதனுடைய தழுவல் தான். 1961-ல் இவர் இயக்கிய யொஜிம்போ, ஹாலிவுட்டில் செர்ஜியோலியோன் இயக்கத்தில் பிஸ்ட் புல்லாப் டாலர்ஸ் என்ற லத்தின் அமெரிக்க படமாக வெளியானது. கிலிண்ட் ஈஸ்ட்வுட் இப்படத்தில் நடித்து தான் புகழின் உச்சத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிரோகுரோசவா சிறந்த ஓவியர். காட்சியமைப்பை தன் மனம் ஏற்கும் வரை விடாப்பிடியாக எடுப்பதால் ஊடகங்களால் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்பட்டார். செவன்சாமுராய் படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி அற்புதமான போர்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் கத்தியால் வெட்டும் காட்சிகளில் மாமிசங்கள் வெட்டப்பட்டு ஒலிப்பதிவு அமைக்கப்பட்டதாம்.

அகிரோகுரோசவாவின் படங்களில் மழைக்காட்சி இருக்கும். மேற்கத்திய திரையுலகின் மேதை ஜான் போர்டு அகிரோகுரோசவாவை சந்தித்தபோது "மழை உங்களுக்கு மிகவும் பிடிக்குமா?" என்று கேட்டார். "என்னுடைய படங்களை உண்மையில் அதிக கவனத்துடன் பார்க்கிறீர்" என்று பதிலளித்தார் அகிரோ.

அகிரோ நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் காட்சியமைப்பதில் வல்லவர். நடிகர்களுக்கான உடையை ஒருவாரத்திற்கு முன்பே கொடுத்து உடுத்தச் சொல்லி, அந்த பாத்திரத்துடன் ஒன்றச்செய்து விடுவார். 1700-ல் ஜப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவ கோட்பாட்டில் சாமுராய் மற்றும் வேளாளர்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும்படி கதைகளனாக அமைத்து வெகுவான படங்களை இயக்கினார்.

டெர்ஸு உஸலா என்ற திரைப்படம் வேற்றுமொழிக்கான ஆஸ்கார் விருதினை இவருக்கு 1975-ல் வாங்கித்தந்தது (இப்படம் ஜப்பானிய மொழியில் எடுக்கப்படவில்லை! ரஷிய மொழியில் எடுக்கப்பட்டதாகும்). ரேன்(1985) திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனராக ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். திரையுலகின் ஜாம்பவானாக வலம்வந்த இவர் 1998-ல மறைந்தார்.