Friday, October 12, 2012

மொகலாய கிசுகிசு

மொகலாய மன்னர் அக்பருக்கு இரு சந்தேகங்கள் இருந்ததாம். ஒன்று கங்கை ஆறு எங்கிருந்து தோன்றுகிறது. இரண்டு குழந்தைகள் பேசும் மழலை மொழி என்ன மொழி. முதல் சந்தேகத்தின் விடையைக் காண ஒரு கூட்டம் அனுப்பப்பட்டது. சென்று வந்தவர்கள், „ஆற்றைத் தொடர்ந்து சென்றோம், பல காடுமேடுகளைக் கடந்தோம். முடிவில் ஒரு மலைமேல் பெரிய மரத்தாலான மாட்டின் தலை இருந்தது. ஆற்றுநீர் அதன் வாயில் இருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த மலையின் பின்னே சென்று பார்க்க முடியவில்லை“ எனச் சொன்னார்கள். அவர்களுக்கு மன்னர் கொஞ்சம் பொருளுதவி செய்து அனுப்பினார்.

மன்னருடைய இரண்டாவது சந்தேகத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள் பேசும் மொழியைத்தான் ஆதிமனிதர்கள் (ஆதாம், ஏவாள்) பேசியிருக்க வேண்டும் என்பது மன்னரின் கருத்து.. அதை நிவர்த்தி செய்ய பல மொழி விர்ப்பன்னர்கள் ஒன்று கூட்டப்பட்டனர். அனைவரும் தங்களின் மொழியையே மழலை மொழியை ஒத்திருப்பதாக  கூறினார்கள். 12 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் தனியாக வளர்க்கப்பட்டார்கள். அவர்களை பல மொழி அறிஞர்கள்   கண்காணித்தார்கள். 12 ஆண்டுகள் கழித்து, யாரும் மழலை மொழிக்கும் மற்ற மொழிகளுக்கான தொடர்பை உறுதிபடுத்த முடியவில்லை. இந்த சம்பவம் நடந்திருக்குமா என நமக்குச் சந்தேகம் எழலாம். ஆனால் அக்கால மன்னர்கள் இது போல எதுவேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
அக்பர் காலத்தில் மது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஐரோப்பியர்களுக்கு மட்டும் அந்த விதி தளர்த்தப்பட்டது. மதுவகைகளை தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மன்னர் ஜஹாங்கீர் நன்றாக மது அருந்துவார் என்பது ஓரளவுக்கு மொகலாய வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். ஜஹாங்கீருக்கு ஐரோப்பிய கிருத்துவ நண்பர்கள் அதிகம். ஒருமுறை சில பாதிரியார்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்றிக்கறி பற்றிய பேச்சு வந்தது. பன்றிக்கறி சமையல் எப்படி இருக்கும் என ஜஹாங்கீர் கேட்க, பாதிரியார்கள் „மிருதுவாகவும், வாசமாகவும்“ இருக்கும் என்றார். உடனே ஜஹாங்கீருக்கு பன்றிக்கறி சமையல் சாப்பிட ஆவல் வந்துவிட்டது, தன் விருப்பத்தையும் அவர்களிடம் தெரிவித்தார். பாதிரியார் ஒருவர் வீட்டில் விருந்து தயாரானது. மன்னரும் விருந்திற்கு சென்றுவிட்டு வந்தார். மன்னருக்கு நெருக்கமான சில இஸ்லாமிய அறிஞர்களுக்கு மன்னரின் புதிய உணவுப் பழக்கம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருநாள் எப்படியும் இன்று கேட்டுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இஸ்லாமிய வழக்கப்படி பன்றிக்கறி உண்பது தவறு என்று எடுத்துச் சொன்னார்கள். உடனே ஜஹாங்கீருக்கு கோபம் வந்துவிட்டது. „சரி! பன்றிக்கறி சாப்பிட அனுமதிக்கும் மதம் ஒன்றைக் கூறுங்கள்“ என்றார் மன்னர். „கிருத்துவம்“ என பதில் வந்தது. „நானும் கிருத்துவத்திற்கு மாறலாம் என நினைக்கிறேன்“ என்று மன்னர் சொன்னதுதான்,  அதற்கு பிறகு யாரும்  ஜஹாங்கீரிடம் உணவைப் பற்றியும், மதுவைப்பற்றியும் வாய் திறப்பதில்லை.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கொசுவத்தி சுத்தலாம் வாங்க

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் தமிழாசிரியர் பெயர் சங்கரன். வகுப்பில் எப்பவும் சுத்த தமிழில் பேசுவார். எங்களையும் பேசச் சொல்லுவார். அப்போது இருந்த ஒரு வழக்கம் என்னவென்றால், ஆசிரியர்கள் டீ,காபி வாங்கிவரச் சொல்லும்போது பேனா கொடுத்து அனுப்புவார்கள். டீகிளாஸுக்கு பதிலாக பேனாவை கொடுத்துவிட்டு டீ,காபி வாங்கிவருவோம். திரும்ப கிளாஸ் கொண்டுபோய் கொடுக்கும்போது பேனாவை வாங்கிக் கொள்வோம். சங்கரன் ஐயா பேனாவை பிரகாசத்திடம் கொடுத்துகொட்டைவடிநீர்(coffee) வாங்கி வாஎன்றார். பேனாவை வாங்கிச் சென்ற பிரகாசம் சற்றுநேரம் கழித்து பேனாவைக் கொண்டுவந்து கொடுத்தான். சங்கரன் ஐயாவுக்கு ஒன்று விளங்கவில்லை. பிறகு தான் தெரிந்தது, பிரகாசம் கொட்டைவடிநீரைபேனாமைஎனப் புரிந்து கொண்டு பேனாவில் மை நிரப்பி வந்தது.

FREAK SHOW



Freaks திரைப்படம் 1932ல் எம்.ஜி.எம் தயாரிப்பில் வெளிவந்தது. இப்படத்தின் இயக்குனர் டோட் ப்ரவ்னிங் (Tod Browning). படம் முழுக்க முக்கியமான கதாபாத்திரங்கள் யாவும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியவர்களைக் கொண்டே உருவாக்கப்பட்டன. சர்க்கஸில் வேலைசெய்யும் Freakகளை சுற்றி நடக்கும் திரைக்கதை. Freaks படம் எக்ஸ்ப்ளாய்டேஷன் (Exploitation) வகைப்படமாக இருந்தாலும், படத்தில் அழகானவர்கள் வில்லன்களாகவும், ஊனமுற்றவர்கள் கதை நாயகர்களாகவும் நல்லவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். கதையின் நாயகன் ஒரு குள்ளன், பெயர் ஹன்ஸ். அவனை கிளிபட்ரா என்பவள் சொத்திற்காக திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் அதே சர்க்கஸில் இருக்கும் ஹெர்குலிஸை காதலிக்கிறாள். கிளியோபட்ரா கொடுத்த விஷத்தால் ஹன்ஸ் நோய்வாய்ப்படுகிறான். கிளியோபட்ராவின் காதல் தொடர்பை நண்பர்கள் மூலம் தெரிந்தும் தெரியாவன் போல இருக்கிறான் ஹன்ஸ். முடிவில் ஹன்ஸுக்கு ஏற்பட்ட நிலைமைக்காக, அவனுடைய நண்பர்கள் கிளியோபட்ராவையும் ஹெர்குலிஸையும் பழிவாங்குகிறார்கள்.



படத்தின் சோதனையோட்டத்தைப் பார்த்தபின் பல காட்சிகள் வெட்டப்பட்டன. பார்த்தவர்கள் முகம் சுளித்தார்கள். இயக்குனர் டோட்டுக்கு பிறகு வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. இப்படம் UKயில் 30 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டது. தற்போது Freaks உலகின் சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்பட்டாலும், வெளிவந்த காலத்தில் விமர்சகர்களால் பெரிதும் புறகணிக்கப்பட்டது. பல ஆண்டுகழித்து 70, 80களில் இப்படத்திற்கான அங்கீகாரம் கிடைக்கத் துவங்கிவிட்டது. தற்போது இப்படத்திற்கென்றே பெரும் ரசிகர்கூட்டம் உள்ளது.



நான் கடவுள் திரைப்படம் வந்தபோது, அதில் வந்த மாற்றுத்திறனாளிகளின் நடிப்பை பலர் புகழ்ந்து பேசினாலும், திரைப்படத்தை சிலரே புகழ்ந்து பேசினர், பலர் அருவருப்படைந்தார்கள். நான் கடவுள் படத்தில் வலிய திணிக்கப்பட்ட சில பாத்திரங்கள். காட்சிகள் தனிதனியாக தொங்கிறதே தவிர முடிவில் ஒரு முழுமையில்லை. இளையராஜாவின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. தாண்டவனைக் காட்டும் போது வரும் உடுக்கை ஒலியும், ருத்ரனையும் காண்பிக்கும்போது ஒலிக்கும் வீணையும் ஒருவித சொல்லொண்ணா உணர்வை ஏற்படுத்தக் கூடியவை. காதல் கத்திரிக்காய் இல்லாத படம் அதற்காக வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மெச்சிக்கலாம்.
 
Freak show என்பது உடல்ஊனமுற்ற, வித்யாசமான உடலமைப்பு கொண்டவர்களை ஊர்ஊராக கொண்டுசென்று காட்டி பணம் வசூலிப்பது. ஒரு காலத்தில் இக்காட்சிகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரபலமாக இருந்தது. பிறகு சர்க்கஸ் போன்றவற்றிலும் இத்தகைய வேடிக்கைகள் நடைபெற்றன. 

ஜார்ஜ் கர்லின் அமெரிக்கா பற்றி குறிப்பிடும் போது அடிக்கடி கூறும் வாக்கியம்.
When you're born, you get a ticket to the freak show. When you're born in America, you get a front-row seat.
எதையாவது செய்து பிரபலமாகத் துடிப்பவர்களை Freak எனக் குறிப்பிடுகிறார். இவர்களைப் பார்த்து நாம் ஆவேசமோ, கோபமோ படக்கூடாது. மாறாக அவர்களின் செய்கைகளை, அசுவாசமாக ரசிக்க வேண்டும் என்பார். அது தான் freak show. 

பதிவுலகில் கூட கர்லின் குறிப்பிட்ட freak showகள் உண்டு. இத்தகைய freak showவின் நடுவே நாம் விவாதமோ கருத்துகளோ சொல்லக்கூடாது. நாமும் அதை சுவாரசியமாக ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பதிவர் ‘பதிவுலகின் freakஎனப் பதிவிடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் “சென்று நீங்க சொன்ன freak யார்?” என்று கேட்டால், உடனே அவர் “நான் தான் அந்த freak” என்பார். நீங்களும் மண்டையை சொறிந்துகொண்டு வருவீர்கள். ஆதலால் freak show பார்த்தால் ரசிக்கணும் கேள்வி கேட்டக் கூடாது. கேட்டால் பின்னவீநத்துவ நான்லீனியர் வசவுகள் தான் கிடைக்கும். 

Wednesday, October 03, 2012

இதை நீ யாரிடமும் சொல்லாதே

துருக்கியில் ஸ்மைர்னா என்றொரு இடம் கடலோரத்தில் உள்ளது. பழங்காலந்தொட்டே அவ்விடம் வாணிபம், போக்குவரத்து முதலியனவற்றுக்கு பிரிசித்தி பெற்றது. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடற்பாதை கண்டுபிடிக்கும் முன், ஆசியாவிற்கு வரவிரும்புவர்கள், துருக்கியைக் கடந்து  பாரசீகம் வழியாக சீனாவிற்கோ, இந்தியாவிற்கோ செல்வதுண்டு. ஆதலால் ஸ்மைர்னாவில் பல்வேறு தரப்பட்ட, பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வசித்து வந்தார்கள். 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஸ்மைர்னாவில் ஒரு யூத வணிகர் வசித்து வந்தார். அவர் அவ்வூரில் புகழ்பெற்ற செல்வந்தர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவ்வூரின் பஷாவுக்கு (Pasha; துருக்கியில் நகரஆளுநரை, தளபதிகளை, உயர்ந்த பதவியில் உள்ளவர்களை பஷா எனச் சொல்வதுண்டு) யூத வணிகரின் மீது மிகுந்த பொறாமை. யூத வணிகரின் செல்வங்களை எப்படியாவது அபகரிக்க ஒரு சந்தர்ப்பம் தேடி வந்தார். ஒரு நாள் யூத வணிகர் பஷாவை ஒரு அலுவலாக சந்திக்க வேண்டி வந்தது. துருக்கி அதிகாரிகள் பலர் சூழ்ந்துள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பஷா யூத வணிகரை ஒரு கேள்வி கேட்டார். „உலகில் எந்த மதம் உண்மையானது, இஸ்லாமா? யூதமதமா? கிருத்துவமா?“. இந்த கேள்விக்கு வணிகர் யூதமதம் அல்லது கிருத்துவம் உண்மையானது என்றால், „அப்போது இஸ்லாம் பொய்யானதா?“ எனக்கேட்டு வணிகரைச் சிறையிலிட்டு அவரது செல்வங்களை எடுத்துக் கொள்ளலாம்.  இல்லாவிடில் இஸ்லாம் உண்மையானது என்றால், வணிகரை மதம்மாறச்சொல்லி கட்டாயப்படுத்தலாம் என பஷா நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது அன்று நடக்கவில்லை. 

பஷா கேட்ட கேள்விக்கு வணிகர் ஒரு குட்டிக்கதையைச் சொன்னார் „ ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். அவரிடம் இருந்த செல்வம் போக ஒரு விலைமதிப்பில்லா வைரக்கல் இருந்தது. அது அவருடைய பரம்பரைச் சொத்து. அந்த வைரத்தை வைத்திருக்கும் பெருமையை மூன்று மகன்களும் அடைய ஆசைப்பட்டனர். பெரியவர் தன் மகன்களின் இத்தகைய மனநிலையை நன்கு அறிவார். அவர் தான் இறந்த பிறகு தன்னுடைய மகன்கள் ஒருவரைஒருவர் வைரத்திற்காக அடித்துக் கொள்ளக்கூடாது என நினைத்தார். அதன்படி அவர் உண்மையான வைரத்தைப்போல அச்சுஅசலாக இன்னும் இரண்டு வைரக்கற்களை ரகசியமாக செய்துவைத்துக் கொண்டார். அப்பெரியவர் இறக்கும் தருவாயில், தன் மகன்களை தனித்தனியாக சந்திக்க எண்ணி அழைத்தார். ஒவ்வொருவரிடமும் மூன்று வைரக்கற்களில் ஒன்றைக் கொடுத்து, „இது தான் உண்மையான வைரம், ஆகவே இதை நீ வைத்துக்கொள்! மற்ற வைரங்கள் போலியானவை, இதை நீ யாரிடமும் சொல்லதே!“ என்றார். அவருடைய மகன்களும் தத்தமது வைரங்களை உண்மையானவை என இருந்தார்கள். இக்கதையைக் கூறி முடித்த வணிகர் „பஷா அவர்களே! இப்போது கூறுங்கள், யாரிடம் உண்மையான வைரம் உள்ளது! யாருக்கு உண்மையான வைரம் எது என்பது தெரியும்!“ என்றார். அதற்கு பஷா „உண்மையான வைரம் எது என்பது மகன்களுக்குத் தெரியாது. தந்தைக்கு மட்டுமே தெரியும்“ என்று கூறினார். உடனே வணிகர் „ஆம்! உண்மையான மதமும் நமக்குத் தெரியாது. அதைக் கொடுத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்“ என்றார். தன் தவற்றை உணர்ந்த பஷா வணிகரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அனுப்பி வைத்தார்.

இக்கதையில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் அடங்கி உள்ளது. அது என்னவென்றால் தந்தை மகன்களுக்கு கூறிய வசனத்தில் (இது தான் உண்மையான வைரம், ஆகவே இதை நீ வைத்துக்கொள்! மற்ற வைரங்கள் போலியானவை, இதை நீ யாரிடமும் சொல்லதே!) இதை நீ யாரிடமும் சொல்லதே என்பதை மட்டும் கவனியுங்கள். ஒருவேளை மகன்களில் ஒருவன் „என்னுடைய வைரம் தான் உண்மையானது, மற்றவருடையது பொய்யானது“ எனக்கூறத் தொடங்கினால், மூவருக்குள் சண்டைச்சச்சரவு கட்டாயம் வந்தே தீரும். இன்று நடக்கும் மதச்சண்டைகளை கவனித்தால் உங்களுக்குப் புரியும், இவை எல்லாம் எதனால் என்று. என் மதம் உண்மையானது, உன் மதம் பொய்யானது எனும் வெட்டிவிவாதத்தினால் வருவது.