Sunday, December 16, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் கதை அனைவரும் அறிந்ததே. படத்தில் குறையென்று ஒன்றும் இல்லை. சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி என முக்கியமான நடிகர்களுடன் மற்றவர்களும் புதுமுகங்கள் என்று தெரியாத அளவிற்கு நடித்துள்ளனர். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை தனது நடிப்பால் அசத்திய ரஜினியை எப்படி சீரழித்ததோ, அதேபோல சத்யராஜையும் தமிழ்திரையுலகம் நன்றாகவே வீணடித்துள்ளது. காசில்லாமல் ரயிலில் நிற்கும்போது, பாம்பு தீண்டிய மனைவியை தூக்கிக்கொண்டு கதறிஓடும்போது, மனைவி இறந்த பின் ஹாஜாபாயிடம் கதறி அழும்போது மனதைப்பிழிகிறார் தனது நடிப்பால். அர்ச்சனா அசல் கிராமத்து வெள்ளந்தி தாயாக கணவனுக்கும் தாய்ப்பாசத்திற்கும் இடையே போராடும்போது சிறந்த நடிப்பு. நாசர், ரோகினி நடித்த இஸ்லாமிய தம்பதியினர் வேடங்கள் கனகச்சிதமான பொருத்தம். இன்பநிலா மிகவும் அழகாக இருக்கிறார்.

பண்ருட்டி பக்கத்திலுள்ள பத்திரக்கோட்டை கிராமத்தின் முதியவர் மாதவர் படையாச்சியுடைய குடும்பத்தில் நிகழும் 20 வருட சம்பவங்களை அவரோட பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தது போல இருந்தது திரைப்படம். அப்படி ஒரு யதார்த்தம். (முத்தம் கொடுப்பதையும், மனைவியைக்கடிப்பதையும், உள்ளாடை போடுவதையும் யதார்த்தம் என்று நம்பிக்கொண்டிருக்கும் கமல் இந்தப்படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்). உலகத்தரம் என்பது தமிழ்மண்ணை உண்மையாக உலகிற்கு உணர்த்துவது தான். அதில் மறுபடியும் தேர்வாகிவிட்டார் தங்கர். தமிழ்திரைப்படத்தில் பொதுவாக இஸ்லாமியர் என்றாலே குண்டு வைப்பவர்கள் என்றோ, சம்பிரதாயத்துக்கு குல்லா போட்டுக்கொண்டு வந்துபோவார்கள். இவற்றிற்கு விதிவிலக்கு ஹாஜா பாயாக வரும் நாசர். தமிழ்திரையுலகிற்கு மறந்துபோன வட தமிழ்நாட்டை தங்கர் அழகாக படம் பிடித்திருக்கிறார். (நம்ம சந்தோஷோட ஊரு ஆம்பூர் தான் என்று நினைக்கிறேன்). எங்க வட்டார பேச்சுமொழியை வேறு பதிப்பித்துள்ளார். (உதா: செய்துகினு இருந்தேன், எம்மா நாள் ஆச்சு). பரத்வாஜின் இசை படத்தின் உணர்விற்கு மேலும் பலமூட்டுகிறது. யார் யாரோ, மார்கழி, வேலாயி எனத் தொடங்கும் பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் அருமையாக உள்ளது. அழகு குலையாமல் அள்ளித்தொகுத்திருக்கிறார் லெனின். இப்படம் தமிழ்மக்களுக்கு ஒரு வரலாற்றுச்சாசனம். தவறாமல் பார்க்க வேண்டிய படம். மேலும் இது போன்ற படங்களை தங்கரும், சத்யராஜும் தமிழுக்குக் கொடுக்க வேண்டும்.

எவனோ ஒருவன்

சங்கர் இதுவரை தனது படத்தில் (அவரு எங்க பட எடுத்தார்! பாப்ஆல்பம் தான் போடுரார்) சொல்லனும் என்று நினைத்து, சொல்ல முடியாத திரைக்கதை. குத்துப்பாட்டு நம்பி படம் எடுக்கும் காலத்தில், பாட்டு இல்லாத ஒரு படம். ர.மாதவனின் (அப்படித்தான் படத்தில் வருகிறது!) அற்புத நடிப்பு. மாதவன் இதுவரை நடிக்காத ஒரு கதை, ஏற்றிராத ஒரு வேடம். சீமான், சங்கீதா என எல்லோரிடமும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு நேர்மையான குடும்பஸ்தனின் வாழ்க்கையில் மனைவி கேட்கும் சில கேள்விகள் புகுந்து அவனின் பாதையை மாற்றிபோடுவதே கதை. குளிர்பானத்திற்கு 2 ரூபாய் அதிகமாக விற்கும் இடத்தில் துவங்கி, காவல்துறையின் ஒழுங்கினம், பாதையில் பைக் நிறுத்துவது, போதைப்பொருள், மருத்துவமனையில் நிகழும் பிரச்சனை என எல்லாவற்றையும் உடைத்தெறிகிறார். பிறகு என்ன? ஒரு பக்கம் காவல்துறை தேடல், மனைவி குழந்தைகளோடு ஒரு பக்கம் புலம்பி அழ, நாயகன் தன் வழியில். எல்லாருக்கும் இருக்கும் சமுதாய சமத்துவ உணர்ச்சி மேலெழும்பி மறுபடியும் நாயகன் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதே முடிவு. முடிவில் சமூக இன்னலுக்கு வன்முறை தீர்வல்ல என்று கூறுவது இது ஒரு மசாலாப்படம் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்துகிறது. கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது, ஆனால் நல்லப்படத்தைப் பார்ப்பதற்கு இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.

காவல்துறை அதிகாரியாக வரும் சீமான் சங்கீதாவிடம் விசாரணை நடத்துவது காவல்துறை பெண்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம். கதாநாயகன் ஒரு பிராமண இளைஞனாகக் காட்டுவதற்கு மாதவன் நாமம் சாத்திக்கொள்வதையோ, சந்தியாவந்தனம் செய்வதையோ (சங்கர் படத்தில் வருவது போல) காண்பிக்காமல் வெறும் பேச்சில் மட்டும் உணர்த்தி சராசரி தமிழனாக உலவவிடுவது சிறப்பு்.

என்னவென்று தெரியவில்லை சமீபத்தில் வந்த எல்லாப்படங்களும் யதார்த்தமான, அருமையான படங்களே தமிழில் வந்துள்ளது. இது தான் தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்கு ஆரோக்கியம். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களில் வரும் படங்கள் மத்தியில் ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் படங்கள் அத்திப்பூக்கள் தான். கண்டிப்பாக பார்க்க கூடிய படம். டோண்ட் மிஸ் இட்!!

Wednesday, December 05, 2007

100 தியேட்டர்களில் ஒன்பது ரூபாய் நோட்டு!

பொதுவாக கிராமங்கள் என்றாலே, தெந்தமிழ்நாடு (பொதுவாக மதுரை, திருநெல்வேலி, கொயம்பத்தூர் ஒட்டிய கிராமங்கள்)தான் திரைப்படங்களில் காட்டப்படும். தங்கர்பச்சனின் படங்களில் தான் வடதமிழகத்தையும் பார்க்க முடிகிறது. பாரதிராஜவுக்குப் பிறகு தமிழக கிராமத்தின் உண்மையான பகுதியை காட்டியது தங்கர்பச்சான் தான். அண்மையில் தங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு படத்தைப் பற்றி ஒரு பக்கம் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளினாலும், திரையரங்கில் ரசிகசிகாமணிகளின் வருகை அவ்வளவாக இல்லை என்று ஒரு செய்தி உலவுகிறது. (நம்ம சியான் விக்ரம் நடித்த சேது படம் கூட இப்படித்தான் முதலில் கஷ்டப்பட்டது). இதுபோன்ற படங்களை தவரவிட்டு பிறகு மணிக்கணக்கில் பண்பாடு பற்றியும் யதார்த்தம் பற்றியும் பேசுவது அபத்தம். இப்படத்தை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்க சமீபமாக தமிழ்சினிமா.காமில் வெளிவந்த தகவல் உங்கள் பார்வைக்கு...!!

**************************** ******************************* ******************************* ***************

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் சாமிநாதன், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான 100 தியேட்டர்களில் படத்தை திரையிட சம்மதித்துள்ளார். இந்த படத்தை பார்க்கிற ரசிகர்கள், தியேட்டருக்கு வெளியே இருக்கிற உண்டியலில் விரும்பிய பணத்தை செலுத்தலாம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி. அது அவரவர் விருப்பம். உண்டியலில் பணம் செலுத்தாமல் இலவசமாக படத்தை பார்த்துவிட்டும் செல்லலாம். இந்த நிபந்தனையின் பேரில் இப்படியரு படத்தை திரையிடுவது தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்!

மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை திரையிட சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடி வந்த இயக்குனர் தங்கர்பச்சான், பிரமிட் சாய்மீராவுக்கு சொந்தமான ஏழு தியேட்டர்களை வாடகை அடிப்படையில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், அவர் கேட்பதற்கு முன்பாகவே முந்திக்கொண்ட அந்நிறுவனம், இவ்வளவு அற்புதமான படத்திற்கு நாங்கள் இலவசமாகவே தியேட்டர் தருகிறோம். அதுவும் 100 தியேட்டர்களை! என்று சொல்ல, பரவசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.

எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 100 திரையரங்கங்களில் இந்த படம் ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும். வெளியே உண்டியலில் விழுகிற பணம் அத்தனையும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளருக்குதான். அதில் ஒரு பைசா கூட தங்களுக்கு வேண்டாம் என்று பெருந்தன்மையோடு தெரிவித்துவிட்டார் அந்நிறுவனத்தின் இயக்குனர் சாமிநாதன். அவரின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு சத்யராஜ், நாசர், அர்ச்சனா, ரோஹினி உள்ளிட்ட அத்தனை பேரும் நேரடியாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

நன்றி: தமிழ்சினிமா.காம்