Sunday, December 16, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் கதை அனைவரும் அறிந்ததே. படத்தில் குறையென்று ஒன்றும் இல்லை. சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி என முக்கியமான நடிகர்களுடன் மற்றவர்களும் புதுமுகங்கள் என்று தெரியாத அளவிற்கு நடித்துள்ளனர். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை தனது நடிப்பால் அசத்திய ரஜினியை எப்படி சீரழித்ததோ, அதேபோல சத்யராஜையும் தமிழ்திரையுலகம் நன்றாகவே வீணடித்துள்ளது. காசில்லாமல் ரயிலில் நிற்கும்போது, பாம்பு தீண்டிய மனைவியை தூக்கிக்கொண்டு கதறிஓடும்போது, மனைவி இறந்த பின் ஹாஜாபாயிடம் கதறி அழும்போது மனதைப்பிழிகிறார் தனது நடிப்பால். அர்ச்சனா அசல் கிராமத்து வெள்ளந்தி தாயாக கணவனுக்கும் தாய்ப்பாசத்திற்கும் இடையே போராடும்போது சிறந்த நடிப்பு. நாசர், ரோகினி நடித்த இஸ்லாமிய தம்பதியினர் வேடங்கள் கனகச்சிதமான பொருத்தம். இன்பநிலா மிகவும் அழகாக இருக்கிறார்.

பண்ருட்டி பக்கத்திலுள்ள பத்திரக்கோட்டை கிராமத்தின் முதியவர் மாதவர் படையாச்சியுடைய குடும்பத்தில் நிகழும் 20 வருட சம்பவங்களை அவரோட பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தது போல இருந்தது திரைப்படம். அப்படி ஒரு யதார்த்தம். (முத்தம் கொடுப்பதையும், மனைவியைக்கடிப்பதையும், உள்ளாடை போடுவதையும் யதார்த்தம் என்று நம்பிக்கொண்டிருக்கும் கமல் இந்தப்படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்). உலகத்தரம் என்பது தமிழ்மண்ணை உண்மையாக உலகிற்கு உணர்த்துவது தான். அதில் மறுபடியும் தேர்வாகிவிட்டார் தங்கர். தமிழ்திரைப்படத்தில் பொதுவாக இஸ்லாமியர் என்றாலே குண்டு வைப்பவர்கள் என்றோ, சம்பிரதாயத்துக்கு குல்லா போட்டுக்கொண்டு வந்துபோவார்கள். இவற்றிற்கு விதிவிலக்கு ஹாஜா பாயாக வரும் நாசர். தமிழ்திரையுலகிற்கு மறந்துபோன வட தமிழ்நாட்டை தங்கர் அழகாக படம் பிடித்திருக்கிறார். (நம்ம சந்தோஷோட ஊரு ஆம்பூர் தான் என்று நினைக்கிறேன்). எங்க வட்டார பேச்சுமொழியை வேறு பதிப்பித்துள்ளார். (உதா: செய்துகினு இருந்தேன், எம்மா நாள் ஆச்சு). பரத்வாஜின் இசை படத்தின் உணர்விற்கு மேலும் பலமூட்டுகிறது. யார் யாரோ, மார்கழி, வேலாயி எனத் தொடங்கும் பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் அருமையாக உள்ளது. அழகு குலையாமல் அள்ளித்தொகுத்திருக்கிறார் லெனின். இப்படம் தமிழ்மக்களுக்கு ஒரு வரலாற்றுச்சாசனம். தவறாமல் பார்க்க வேண்டிய படம். மேலும் இது போன்ற படங்களை தங்கரும், சத்யராஜும் தமிழுக்குக் கொடுக்க வேண்டும்.

6 comments:

  1. குட்டிப்பிசாசே,
    அசத்திறிங்கய்யா!!
    இப்பிடியே அசத்துங்க.
    சித்தன்

    ReplyDelete
  2. //(முத்தம் கொடுப்பதையும், மனைவியைக்கடிப்பதையும், உள்ளாடை போடுவதையும் யதார்த்தம் என்று நம்பிக்கொண்டிருக்கும் கமல் இந்தப்படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்).//

    chea chea... ipadi solithingale...

    ReplyDelete
  3. விக்னேஷ்,

    நானும் கமல் ரசிகன் தான்! ஆனால் படத்தில் வந்ததைத்தான் சொன்னேன். ஹேராம், குருதிப்புனல், விருமாண்டி படத்தில் இதுமட்டும் தான் அளவுக்கு அதிகமாக வந்துபோகும் காட்சிகள்.

    ReplyDelete
  4. ///விக்னேஷ்,

    நானும் கமல் ரசிகன் தான்! ஆனால் படத்தில் வந்ததைத்தான் சொன்னேன். ஹேராம், குருதிப்புனல், விருமாண்டி படத்தில் இதுமட்டும் தான் அளவுக்கு அதிகமாக வந்துபோகும் காட்சிகள்.///

    இதுல என்ன சார் இருக்கு.... எந்த நடிகையும் நடிக்க ஒத்துக்கலைனா அப்படிபட்ட காட்சிகளை எடுக்க தேவையில்லையே... இல்லை மக்கள் தான் அப்படிபட்ட காட்சிகள் வரும் போது கண்ண மூடிக்கிறாங்களா???

    ReplyDelete
  5. நான் காட்சிகளை சொல்லலிங்க! இப்படி எல்லாம் எடுத்துட்டு யதார்த்தம், உலகத்தரம் என்று புருடா விடவேண்டாம்னு தான் சொன்னேன்!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய