Wednesday, July 11, 2007

சித்தூர் நாகைய்யா-கண்ணன் பாடல்

மறைந்த தெலுங்கு நடிகர் சித்தூர் நாகைய்யா அவர்களுக்கு ஆந்திர அரசு சிலை எழுப்பியுள்ளதாக செய்தியில் படித்தேன். அந்தக்கால நடிகர்களில் எனக்குப்பிடித்தவர்கள் நாகைய்யா, சுப்பைய்யா, பாலைய்யா,(அய்யா, அப்பா என்ற விகுதியை சேர்த்துக்கொள்ளுவதை அக்காலத்தில் ஸ்டைல்) எம்.ஆர்.ராதா போன்றவர்கள் யதார்த்தமான நடிப்பின் மூலம் வெகுஇயல்பாக தங்களுடைய கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதில் வல்லவர்கள்.

அவர்களில் நாகைய்யாஅவர்கள் நான் பார்த்த பெரும்பாலான படங்களில் தந்தையாகவோ, ஆன்மீக துறவியாகவோ நடித்திருந்தார். குறிப்பாக என் நினைவில் வருபவை: அசோக்குமார் என்ற படத்தில் தியாகராஜபாகவதரின் தந்தையாக நடித்து இருந்தார் (இப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருந்தார்). பக்த மீரா படத்தில் மீராவின் கணவர் ராணாவாக நடித்திருந்தார்.(இப்படத்தில் எம்.எச்.சுப்புலட்சுமி அவர்கள் மீரா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்). சரஸ்வதி சபதம் படத்தில் புலவரின் (சிவாஜி) தந்தையாக வருவார். "கலைகளுகெல்லாம் அதிபதி என் கண்மணி வித்யாபதி" (பேச்சில் தெலுங்கு வாசம் இருந்தாலும்) என்று ஒரு தந்தையாகவே மாறி உருகிப்போவார்.தெனாலிராமன் படத்தில் அப்பாஜியாக நடித்தார். இவர் சுயமாக பாடவும், இசையமைக்கவும் செய்தார்.

துறவியாக நடிக்கும்போது நாகைய்யா ஒழுக்கமான துறவிபோலவே காட்சியளிப்பார். ராமு,தெய்வமகன்,அனாதைஆனந்தன் படங்களில் துறவியாக வருவார். இப்படங்களில் இவர் பாடும் கிருஷ்ணன் பாடல்கள் காலத்தால் அழியாதவை. நான் சிறுவயதாக இருக்கும்போது தெய்வத்தை வணங்கும் போது இந்தப்பாடல்களின் சிலவரிகளைத்தான் பாடுவேன்.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா

கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ........

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

ஏழைக்கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான் .......

இந்த இரண்டு பாடல்களைவிட அனாதை ஆனந்தன் படத்தில் வரும் சீர்காழி கோவிந்தராஜனின் கனீர்குரலில் உதிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்

காற்றடித்தால் அவன் வீடாவான் கடுமழையில் அவன் குடையாவான்

ஆற்றார் அழுதால் அழுதகண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான்

வெயிலினிலே தான் அவன் பிறந்தான் மழையினிலேறி மனைபுகுந்தான்

உறவறியாத குழந்தைக்கெல்லாம் உறவினனாக அவன் வருவான்

அதிகமான வருமானத்துடன் நடித்துவந்த இவர் தாராள உதவிசெய்யும் மனப்பான்மையால் மற்றும் தயாரித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், 100 ரூபாய்கெல்லாம் நடிக்கவேண்டி வந்தது. நம்நாடு என்ற எம்.ஜி.ஆர். படத்தில் ஒன்றிரண்டு காட்சியில் தோன்றி இறந்துவிடுவார். இதுதான் அவருடைய கடைசி தமிழ்படம் என்று நினைக்கிறேன். 1938 முதல் 1973 வரை 200க்கும் மேற்ப்பட்ட தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1904-ல் பிறந்த இவர் 1973-ல் இறந்தார்.

12 comments:

  1. தகவலுக்கு நன்றிகள். இதுவரை நான் அறிந்திராத ஒரு நடிகர்..இவர்களின் வாழ்க்கை இப்படி சோகமாக போவது தான் கொடுமை

    ReplyDelete
  2. என்ன செய்வது நம்ம கலைவாணர் கதையும் அப்படித்தான், இருக்கும்போது யாரும் உதவ மாட்டாங்க... செத்தா சிலை வைப்பாங்க!!

    ReplyDelete
  3. நம்ம காலத்துக்கு முந்திய ஆள் என்றாலும், இவரின் பல படங்களில் குணச்சித்திர நடிப்பை ரசித்திருக்கின்றேன். மிக்க நன்றி பதிவுக்கு

    ReplyDelete
  4. ஆம். இவர் சிறந்த குணசித்திர நடிகர். பின்னூட்டத்திற்கு நன்றி!!

    ReplyDelete
  5. நாகையா பற்றி இந்த நாளில் தெரிந்தவரிருப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.குட்டிபிசாசுனு சொல்லவே கூச்சமாக இருக்கிறதுப.
    ஏனெனில் எழுதி இருப்பது ஒரு பெரிய நடிகரைப் பற்றி. நாகையா அநாவசிய அழுகைனு நினைக்கலாம்.ஆனால் யார் பையன்,முதலிய எல்லாப்படங்களிலும்
    ஒரு உண்மையான தகப்பனை அப்படியே உருவாக்கிக் காட்டுவதில் அவரை மிஞ்ச முடியாது. நீங்கள் சொன்ன சுப்பையாவும்,பாலையாவும் அதே தரம்தான்.
    சம்பூர்ணராமாயணத்திலும் தசரதனாக நடித்திருப்பார் என்கிற நினைவு.

    மிகச் சிறந்த நடிகர். என்.எஸ்கே,இவர் போன்றவர்களைத் திரையுலகத்தில் மீண்டு வரமுடியாத நஷ்டத்தில் தவற விட்டுவிட்டோம்.....மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  6. ஆமாம் வல்லி அம்மா. யார்பையன் படத்தில் அந்த சிறுவனின் தாத்தாவாக வருவார். சம்பூர்ண ராமயணத்தில் தசரதனாகவும் வருவார்.

    //மனம் நிறைந்த நன்றி.//

    இந்த இடுகையை படித்ததற்கு நான் தான் நன்றி கூறவேண்டும்.

    ReplyDelete
  7. கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியாக நடித்தது நாகையாவா அல்லது சுப்பையாவா. சுப்பையாவா பற்றி எதாவது இருந்தால் கொஞ்ஞம் போடுங்களேன்

    ReplyDelete
  8. // vathilai murali said...

    கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியாக நடித்தது நாகையாவா அல்லது சுப்பையாவா. சுப்பையாவா பற்றி எதாவது இருந்தால் கொஞ்ஞம் போடுங்களேன் //

    கப்பலோட்டிய தமிழனில் பாரதியாராக மிடுக்குடன் நடித்தவர் எஸ்.வி.சுப்பைய்யா அவர்கள். அவர் பற்றி இடுகை பிறகு போடுகிறேன்.

    ReplyDelete
  9. நாகையா சொந்தமாக தயாரித்த
    'என் வீடு' படத்தில் வரும் 'கொஞ்சு
    மொழி மைந்தர்தளே தவள வானில்
    தவழ் நிலவின் ஒளியிலோடி ஆடுவீரே..' எனக்கு மிகவும் பிடித்த
    பாடல்.

    ReplyDelete
  10. @நனானி அக்கா,

    வந்தமைக்கு நன்றி!!

    ReplyDelete
  11. useful information

    ReplyDelete
  12. ஏனோ நல்லோர் வாழ்க்கை இங்கணம் முடிதலே வாடிக்கையாய் போனது. :(

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய