Saturday, March 30, 2013

பரதேசி மற்றும் ஒரு காதல் கதை


பரதேசி 

…சமீபத்தில் பரதேசி படம் பார்த்தேன். வேதிகாவின் நடிப்பு   எரிச்சலோ எரிச்சல். க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும்போது  முதல் மரியாதை ராதாவை ஞாபகப்படுத்துகிறார். தன்ஷிகாவின் நடிப்பு மிகவும் முதிர்ச்சியானதாக இருந்தது. பிரமாதம். அதர்வா செயற்கையாக நடித்திருந்தார். அவர் பல இடங்களில் அழும்போது ஏனோ ஈர்ப்பை ஏற்படுத்தவே இல்லை. பொதுவாக ஒரு அப்பாவி கதாபாத்திரம் தனக்கு நேரும் கொடுமையை எதிர்க்க துணிவில்லாமல், கஷ்டப்படும்போது நமக்கு ஒரு பச்சாதாபம் உண்டாகும். அது இங்கே மிஸ்சிங். ஜீவி. பிரகாஷுக்கு வைத்த  பரிக்ஷையில் வெள்ளைப் பேப்பரை கொடுத்துவிட்டு ஓடிவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார். பின்னணி இசை கொடுமை. பாலா + இளையராஜா ஒரு நல்ல காம்பினேஷன். "நான் கடவுள்" படத்தில் மிகவும் பிரமாதமான பின்னணி இசையைக் கொடுத்திருப்பார் ராஜா. பாலா ஏன் இப்படி? ஒருவேளை சொந்தப்படம் என்பதால் இவ்வாறு செய்தாரோ?  படத்தில் வறுமை, சாதிக்கொடுமை பற்றி வெளிப்படையாக குறிப்பிடாமல் விட்டது பாலாவின் சுதந்திரம் அதுபற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நாம எதுக்கு இந்தப் படத்தை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டும். மற்றபடி ஒரு வித்யாசமான முயற்சி அவ்வளவே. அதற்காக பாராட்டலாம்.

…சுதந்திரம் வருவதற்கு முதல் மக்களை தேநீர் அருந்த பழக்கப்படுத்த ஆங்கில அரசாங்கம் எல்லோருடைய வீட்டிற்கும் இலவசமாக விநியோகித்தது.  வயசான ஒரு தாத்தா ஒருத்தர் சொன்னது "வெள்ளைகாரன் காசு வாங்கமல் டீயை சும்மா கொடுத்தான். சுதந்திரம் வாங்கி நம் ஆளுங்க டீயை காசுக்கு விக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னா விலை விக்குது!". என்னமா திங்க் பண்ணுராரு பாருங்க.

தொலைக்காட்சியில் பரதேசி பேட்டி
…அதர்வா: பாலா என்ன கெட்டப் கொடுப்பார்னு எனக்கு ஒரே எக்ஸைட்டிங்க இருந்தது.
…தொகுப்பாளர்: நீங்க எப்படி அந்த இன்ஸ்ட்ருமென்டை ……(டே! அது தமுக்குடா!)  கத்துகிட்டு அடிச்சிங்க?

 நான் என்றாவது முடியை ஒட்ட வெட்டி வந்தால், "என்னடா! காரவடை முடிவெட்டு வெட்டிகிட்டு வந்திருக்க" என எங்க பாட்டி சொல்லும். பரதேசி படத்தில் வரும் முடிவெட்டைத் தான் அப்படி சொல்வதுண்டு.

மதபோதனை செய்யும் மருத்துவர் வரும் பகுதி ஏதோ இடைசெறுகல் போல உள்ளது. கதையோட்டதைத் தடுக்கிறது. ஆனாலும் அந்தப் குத்துப்பாட்டு (தன்னைத் தானே...). கேட்க நன்றாக இருக்கிறது. எங்க ஊரு பக்கத்தில் ஒரு தோல் மருத்துவனை இருக்கிறது. அது கிருத்துவ மிஷனரியால் நிறுவகிக்கப்படுகிறது. என்னுடைய தமையனுக்கு சிறுவயதில் வைட்டமின் குறைவால் முகத்தில்  தேமல் இருக்கும். என்னுடைய பாட்டி அந்த மருத்துவமனைக்கு அவனைக் கூட்டிச் சென்றார்கள். நானும் உடன் செல்வதுண்டு. ஒவ்வொரு முறையும் சிறு சிறு வேதபுத்தகங்கள், நற்செய்தி வாசகங்கள் கொடுப்பார். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சொல்வார்கள். எனக்கு என் தமையனுக்கு இதில் சுத்தமாக ஈடுபாடு இருப்பதில்லை. அவர்கள் சொல்வதும் விளங்காது. மணிக்கணக்கில் வேறு உட்காரவைத்து விடுவார்கள். பிறகு ஒரு வழியாக  மருந்து சாப்பிட்டு தேமல் சரியாகிவிட்டது. ஆனாலும் வீட்டிற்கு வந்து புத்தகம் கொடுப்பார்கள். மேலும் வரச்சொல்வார்கள். மருத்துவமனை ஆட்கள் வந்தாலே போதும், நானும் தமையனும் புறகடை வழியாக அடுத்த தெருவிற்கு ஓடிவிடுவோம்.


*********************************************************************************

ஒரு காதல் கதை
கதையோட கதாநாயகன் அந்தண சாதியில் பிறந்தவன். சகோதரர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு வேறொரு இடத்திற்குச் சென்று வேலை பார்க்கிறான். சகோதரர்கள் எப்படியோ அவனை சமாதானப்படுத்தி ஊருக்கு அழைத்துப் போகிறார்கள். போகும்வழியில் இளைப்பாற ஒரு இடத்தில் தங்குகிறார்கள். அங்கு ஒரு பாடல் கேட்கிறது. பாடல் கேட்கும் திசை நோக்கி கதாநாயகன் போகிறான். அங்கு இரண்டு சகோதரிகள். அவர்களுடைய குரலின் இனிமையில் மயங்கி, அவர்களுடன் பேச முயற்சிக்கிறான். அவர்கள் பயந்து ஓடுகிறார்கள். இவனும் துரத்திச் செல்கிறான். ஓடிச்சென்ற பெண்கள், தங்களை ஆண் ஒருவன் துரத்துவதாக தந்தையிடம் முறையிடுகிறார்கள். பெண்களுடைய தங்தை தகாதமுறை நடக்க நினைத்தவனை தண்டிக்க கத்தியுடன் வருகிறார். வரும்வழியில் கதாநாயகனைப் பார்க்கிறார். கதாநாயகன் தான் அப்பெண்களை நேசிப்பதாகவும், திருமணம் புரிய விரும்புவதாகவும் கூறுகிறான். அதற்கு பெண்களின் தந்தை தாங்கள் சக்கிலிய சாதியர் எனவும், இந்தத் திருமணம் பொருந்தி வராது எனக் கூறுகிறார். ஆனால் கதாநாயகன் திருமணம் செய்ய தீர்மானமாக இருக்கிறான்.  தவிர்ப்பதற்காகவோ, சந்தேகப்பட்டோ ஆனால் பெரியவரோ பெண்களை மணப்பதானால் சில கோரிக்கைகளை விடுக்கிறார். உன்னுடைய சாதிய அடையாளங்களான பூணூல், குடுமியைக்  களைந்துவிட்டு, தோல் செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.  எங்கள்வீட்டில் மாடுமேய்த்து, தோல் பதனிடுதல், செருப்பு தைத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்தால் என் மகள்களை திருமணம் முடித்துவைப்பதாக கூறுகிறார். இவற்றிற்கு ஒப்புக்கொண்ட கதாநாயகன் வீட்டிற்குச் செல்கிறான்.  பெற்றோர், சகோதரர்களின் சம்மதம் கேட்கிறான். கிடைக்கவில்லை. குடுமி, பூணூலைக் களைந்துவிட்டு சக்கிலிய தொழிலை ஏற்கிறான். சகோதிரிகளை மணக்கிறான். திருமணம் முடிந்த கொஞ்ச வருடங்களில் மாமனார் இறந்துவிட, இவனே அனைத்து பொறுப்புகளையும் பார்த்துக் கொள்கிறான். ஒருநாள் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளை திருடர்கள் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். திருட்டுப்போன சேதி கேட்டவுடன் வேல்கம்பும் வாளுடனும் கிளம்புகிறான் கதாநாயகன். திருடர்களுடன் சண்டை செய்து எல்லாரையும் வீழ்த்தி விரட்டுகிறான். திரும்பும்வேளையில் பின்னிருந்து ஒருவன் கத்தியால் குத்தி கதாநாயகனைக் கொன்றுவிடுகிறான். நடந்தது தெரிந்து மனைவியர்கள் இருவரும் ஓடோடி வருகிறார்கள். துயரம் தாளாமல் இருவரும் கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்கள். இது திருநெல்வேலிசீமையில் வணங்கப்படும் முத்துபட்டன் (பட்டவராயன்) கதை. மனைவியர்கள் - பொம்மக்கா, திம்மக்கா. மாமனார் - வாலபகடை.  இந்தக்கதை கதைப்பாடலாக இன்றும் தென்மாவட்டங்களில்  சொல்லப்பட்டு வருகிறது.

நம்ம மகாஜனங்கள் இந்தக் கதையையும் விட்டுவைக்கவில்லை. மதுரைவீரன் கதையில் மதுரைவீரன் காசிராஜனின் மகன் சக்கிலியரின் மகன் அல்ல என்று இடைசெறுகியது போல, பொம்மக்கா திம்மக்காவிற்கும் முற்பிறவி வைதீக சாயம் பூசி இருக்கிறார்கள். (எதோ "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்" படத்தைப் போன்றதொரு லவ் சப்ஜக்ட். என்ன கிளைமேக்ஸ் தான் சோகம். ட்ராஜிடி.)

 பட்டவராயர் பொம்மக்கா திம்மக்காவுடன் ... சண்டையின் போது உடன் சென்ற பூச்சி காச்சி நாய்கள். 

***********************************************************************************

கானா பழனியின் பாட்டு (தாத்தா கொஞ்சம் பொடி கொடு)