Sunday, March 21, 2010

இதில் என்ன வேறுபாடு

நாத்திகம் என்றால் கடவுள், கடவுள் சார்ந்த மதங்கள், கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது. அதோடு நின்றுவிடுகிறது அதன் வேலை. பகுத்தறிவு என்பது அதனையும் கடந்தது. மதம் மட்டுமல்லாமல், சாதி, பழக்கவழக்கங்கள், உணவு, உடை என பல்வேறு பரிமாண மாற்றங்களை உள்வாங்கியது. காலத்திற்கு, சூழ்நிலைக்கேற்ற மாற்றங்களை, கருத்துகளை ஏற்றுக்கொள்வது.

பெரியார் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் கொள்கைக் காவலர்களாக இன்று வலம்வருபவர்கள், இதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். ஒருகாலத்தில் பெரியார் பிராமணர்களை பார்ப்பான் என்று சொன்னார். அதையே இவர்கள் பிடித்துக் கொண்டு வம்பளப்பது ஏன்னென்று தெரியவில்லை. இன்று பூணூல் போட்டவர்களை விட பூணூல் போடாத பார்ப்பான்கள் தான் மிகமிக அதிகம். அம்பேத்கார் புத்தமதத்திற்கு மாறினார் என்று புத்தமதத்திற்கு ஓடுபவர்கள், பெரியார் இஸ்லாத்திற்கு போகச் சொன்னார் என்று இஸ்லாத்தின் பெருமை பற்றி பேசுபவர்கள் எல்லாரும் ஆட்டுமந்தைகளே. ஒருவேளை தானாக யோசித்து அந்த முடிவை எடுப்பாராகில் சரி.

ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது. ராஜபக்சே, பொன்சேகா போன்ற கொலைகாரர்கள் புத்தமதத்தில் இருப்பதால், அம்பேத்காரிய பெரியாரியவாதிகள் புத்தமதத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்தவனை பார்ப்பான் என்று திட்டிவிட்டு தன் சாதி பெருமை பேசும் பல பெரியாரிஸ்ட்களைப் பார்த்திருக்கிறேன்.

இது இப்படியென்றால், இன்னுமொரு பக்கம் கடவுளால் மொத்தமாக கைவிடப்பட்டாலும், ஈழத்தமிழர்கள் மதப்பற்றிலும், கடவுள் பற்றிலும் ஊறித்திளைக்கிறார்கள். போரினால் பெரிதாக பாதிக்கப்பட்டதாக் சொன்னாலும், சகோதரர்கள் வேலிக்குள் முடங்கிக் கிடந்தாலும்  ஈழத்தமிழர்கள் கோவிலில் பாலபிஷேகம் செய்வதும், தேங்காய் உடைப்பதும் குறைந்தபாடில்லை. ஒரு மதம் தன்னைச் சார்ந்தவனை பண்படுத்த தவறினால், பிறகெதற்கு அதனுடைய கட்டுப்பாடுகள். மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை. நிறுவனமயமாகிவிட்ட மதங்களில் இது சிறந்தது, இது தாழ்ந்தது என்ற ஐயமே தேவையற்றது. இந்துமதம் கூவம் நம்பர் 1 என்றால், இஸ்லாம் கூவம் நம்பர் 2. இதில் என்ன வேறுபாடு. 

Tuesday, March 02, 2010

9 (2009) - திரைப்படம்

மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இறுதிப்போர் நிகழ்ந்து எல்லோரும் அழிந்துகிடக்கும் தருவாயில் தன்னுடைய உயிரை பொம்மைகளில் அளித்துவிட்டு இறக்கிறார் ஒரு விஞ்ஞானி. அப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட பொம்மை '9'. உயிர்தெழுந்து வரும் 9, அழிவுகளிடையே நடந்து செல்லுகையில் ஒரு இயந்திர மிருகத்தால் துரத்தப்படுகிறது.  ஆனால் துரத்தப்படும்போது 9-ஐ பொம்மை 2 காப்பாற்றுகிறது. பிறகு தன்னுடைய சில தோழர்களிடம் 9-ஐ அறிமுகம் செய்கிறது. அந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பது பொம்மை 1. ஆனால் அது ஒரு கோழை. 2 இயந்திரத்தால் பிடிக்கப்பட்ட்டப்பின், 2-ஐ காப்பாற்றி வருவதாக 9 செல்கிறது. ஆனால் சென்ற இடத்தில் செயலிழந்து கிடக்கும் இயந்திர உற்பத்தியை தொடக்கிவிட்டு விடுகிறது. ஊக்குவிக்கப்பட்ட இயந்திரங்களை 9ம், அதன் நண்பர்களும் எப்படி சமாளித்து அழித்தார்கள் என்பது மீதி கதை. முதலில் நான் '9' குறும்படத்தை பார்த்தேன். படத்தின் அனிமேஷன் காட்சிகளும், விடயமும் புதுமையாக இருந்தது. இந்தக் குறும்படம் 2005-ம் ஆண்டின்  ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மிகுந்த ஆவலுடன், பிறகுதான் '9' என்று முழுநீளப் படமாக வந்ததையறிந்து, அந்தப்படத்தையும் பார்த்தேன்.  இப்படம் ஷான் அக்கரால் இயக்கப்பட்டது. குறும்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் டிம் பர்டன் தானே இப்படத்தை தயாரித்தார். பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், வித்யாசமான படமாக அனைவராலும் புகழப்பட்டது. நீங்களும் பார்த்து மகிழ '9' குறும்படத்தின் படத்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டு தங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.


Sunday, February 28, 2010

ரம்பையின் காதல் - ரசித்த பாடல்கள்

தங்கவேல், பானுமதி நடித்த படம் ரம்பையின் காதல். இப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கனீர்குரலில் ஒலித்த தத்துவப்பாடல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பகவானே மௌனம் ஏனோ... , சமரசம் உலாவும் இடமே... என்று தொடங்கும் பாடல்கள். மனதை உருக்கக்கூடியடி ஆர்.பாப்பாவின் இசை,மருதகாசியின் பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள். பாடல்களை ரசித்தவர்கள் மறக்காமல் கருத்தைச் சொல்லவும்.



Saturday, February 20, 2010

இந்தியாவை புரையோட வைக்கும் புரையிரும்பாலைகள்

நாட்டிற்கு முன்னேற்றம் அவசியம், அந்த அவசியம் நாட்டினுடைய வளத்தையும் சுற்றுப்புறசூழலையும் சீர்கெடுத்துத்தான் வளரவேண்டுமா? இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புரையிரும்பு ஆலைகள் அதிக அளவில் பெருகிவருவது. வெவ்வேறு சுற்றுப்புற சுகாதார நாசங்களால் மக்கள் அவதியுறும் வேளையில், புரையிரும்பு (sponge iron) என்ற DRI (Direct-reduced iron) இரும்பு உற்பத்தியால் இந்தியா புரையோடிக் கொண்டிருக்கிறது. புரையிரும்பு நவீன எஃகு உற்பத்திக்கு முக்கியமான மூலப்பொருள். இரும்புத்தாதுவை நிலக்கரி அல்லது எரிவாயுடன் ஆக்ஸிசன் ஒடுக்கம் செய்வதனூடாக உலையில்லாமல் புரையிரும்பு தயாரிக்கப்படுகிறது. இம்முறை அதிக லாபத்தையும் குறைந்த முதலீட்டையும் கொண்டது. உலகிலேயே இந்தியாவில் தான் புரையிரும்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 20% உலகஉற்பத்தியை இந்தியா கொண்டுள்ளாது. புரையிரும்பாலை மிகுந்த லாபம் ஈட்டித் தருவதாக உள்ளது. 100 டன் உற்பத்தி செய்யும் ஆலை, அதன் முதலீட்டை வெறும் 18 மாதங்களில் மீட்டெடுப்பதாக சொல்லப்படுகிறது. ஆதலால் புரையிரும்பாலைகளின் மீதான முதலீடுகள் அதிகரிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் கட்டுமான தொழிலின் வளர்ச்சியால், இரும்பின் தேவை அதிகமாக உள்ளது. ஆகவே எஃகு உற்பத்தியின் முலப்பொருளாகிய புரையிரும்பும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. 

 

இரும்புத்தாது, நிலக்கரி சுலபமாக கிடைப்பது பொருத்து, பெரும்பாலான புரையிரும்பாலைகள் ஒரிசா, ஜார்கண்ட், சடிஸ்கார், மேற்குவங்காளம் போன்ற மத்தியகிழக்கு மாநிலங்களில் அமைந்துள்ளன. ஆந்திரா, தமிழ்நாடு, கோவா, குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலும் புரையிரும்பாலைகள் உள்ளன. ஒரிசாவில் மட்டும் கிட்டத்தட்ட இந்தியாவின் 60% புரையிரும்பாலைகள் அமைந்துள்ளன. 1988-ல் ஒரு மில்லியன் டன்னாக இருந்த இந்திய புரையிரும்பு உற்பத்தி, 2005-ல் 11.82 டன்னாக இருந்த வளர்ச்சிகண்டு, 2006-2007-ல் 16.27 டன்னாக உயர்ந்து, 2009-ல் 20 டன்னை விஞ்சி நிற்கிறது. புரையிரும்பு தயாரிப்பில் இரண்டு வகையுள்ளது, 1. நிலக்கரி சார்ந்தமுறை, 2. எரிவாயு சார்ந்தமுறை. உலகின் மற்ற நாடுகளில் புரையிரும்பு அதிகமாக எரிவாயு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதனால் அவற்றிலிருந்து புகை வெளியேற்றப் படுவதில்லை, மேலும் மாசுபடுதலும் குறைவாக உள்ளது.  ஆனால் முதலீட்டளவில் பார்த்தால் எரிவாயு பயன்படுத்தி புரையிரும்பு தயாரிக்கும்முறையின் முதலீட்டின் 20% கொண்டு நிலக்கரி சார்ந்த புரையிரும்பாலைகள் அமைத்துவிடலாம். இந்தியாவில் கிட்டத்தட்ட 90% புரையிரும்பாலைகள் நிலக்கரியைப் பயன்படுத்துகின்றன. எனவே, இவை அதிகமான புகையையும், தூசு, மாசுக்களை ஏற்படுத்தி சுற்றுப்புறசூழலை நாசப்படுத்துகின்றன. 


இந்தியாவின் பல புரையிரும்பாலைகளில் நச்சு புகை வெளியேறுவது மட்டுமல்லாமல், அறிவியலல்லாத முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. சாலையோரங்களில், ஆறுகளில், ஆற்றுப்படுகைகளில் கழிவுகள் கொட்டப்படுகின்றன, ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் புகை கார்பண்டையாக்ஸைட், நைட்ரஜண்டையாக்ஸைட் போன்ற வாயுக்களையும், நுண்ணிய கன உலோகத் துகள்களான காட்மியம், ஜின்க், ஈயம், பாதரசம், மங்கனிஸ், நிக்கல், க்ரோமியம், ஆர்சனிக் போன்றவற்றை கொண்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் சிலிகோசிஸ், ஆஸ்த்மா போன்ற சுகாதாரப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டுள்ளனர். நீரில் அதிகம் கலந்துள்ள ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் மூளை-சிறுநீரகப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. பல புரையிரும்பாலைகளின் ஐந்து கி.மீ  சுற்றளவிற்குள் உள்ள நிலம், நீர் இராசயனக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டுள்ளன. அரிசி வயல்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள புரையிரும்பாலைகளின் கழிவுகளால், அரிசி பழுப்பு நிறமாக விளைகின்றன. இதனால் பெரும்பான்மையான விவசாயிகள் தொழிலடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், மாசடைந்து விலைபோகாத அரிசியை உண்ணும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். 

ராய்ப்பூர் வேளாண்மைப் பல்கலைகழகத்தின் ஆய்வுக்கட்டுரையில்
“ராய்ப்பூரின் அருகிலுள்ள சில்தாரா பகுதியில் 25000 ஹெக்டர் நிலப்பரப்பு வாழமுடியாத பகுதியாக உள்ளது”.

கருமையான நச்சு தூசுகள் படிந்த நிலங்கள் மேய்ச்சலுக்குக் கூட பயனற்றுப் போய்விட்டதால், கிராமபுறங்களின் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்னாற்றலை சேமிப்பதாக கருதி, பகலில் மட்டுமே மாசுவடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் சாம்பல் போன்ற மாசுக்கள் படிந்து மையான பூமி போல காட்சியளிக்கிறது. 



இந்திய சட்டப்படி, இரண்டு புரையிரும்பாலைகளுக்கிடையே குறைந்தது 5கி.மீ இடைவெளி இருக்கவேண்டும். ஆனால் சில்தாராவில் 30 ஆலைகள் உள்ளன. ஒரு கி.மீ இடைவெளியில் ஆலைகள் அமைந்துள்ளன. ஒரு கிராமத்திற்கும் புரையிரும்பாலைக்கும் ஒரு கி.மீ இடைவெளி இருக்கவேண்டும். அதுவும் இங்கே மீறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள பல புரையிரும்பாலைகள் சட்டத்திற்கு புறம்பாக மலைவாழ் மக்கள் வசிக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் (Scheduled areas) அமைக்கப்பட்டுள்ளன.



கண்முன்னே நிகழும் அழிவைப் பார்த்துக்கொண்டிராமல், பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் விளைவாக கோவா மாசுகட்டுப்பாட்டுவாரியத்தின் உத்தரவின்படி, முக்கியமான புரையிரும்பாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஆலைகள் துவங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ‘லோஹா கரம் ஹை’ (இரும்பு சூடாக இருக்கிறது) என்ற ஆவணப்படம் புரையிரும்பாலையினால் ஏற்படும் சுற்றுப்புறசூழல் சீர்கேட்டினைப் பற்றியது. இப்படம் இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் கழகத்தின் சிறப்பு விருதினைப் பெற்றது. ஒரு விருது பெருவதற்காக எடுக்கப்பட்ட ஆவணப்படமாக இல்லாமல், அதையும் தாண்டி முறையற்ற தொழில்மயமாக்கலினால் உண்டாகும் மனிதவுரிமை, சுகாதார, சுற்றுப்புற சீர்கேடு, சட்ட மீறல்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது இந்த ஆவணப்படம்.

உலகமயமாக்கலின் பிறகு, உலகம் முழுக்க தொழில்மயமாகி வரும் இன்றைய நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் எவை என்றால், இந்தியாவும் சீனாவும் தான். என்ன தான் இவை பொருளாதார முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதற்கு கொடுக்கப்பட்ட விலை மிகமிக அதிகம். சீரற்ற வளர்ச்சிக்காக, நாட்டின் வளத்தையும், நாட்டு மக்களையும் பலிகடாவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேற்ற புலிகள் போல காட்டிக்கொண்டாலும், தரம்-பாதுகாப்பு விடயங்களில் மக்களை மக்களாகவே மதிப்பதில்லை. மக்களின் நலத்தின் மீது துளியும் அக்கரையின்றி நாட்டினுடைய சுற்றுப்புறசூழலை சீர்கெடுத்து அழிவுப்பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற ஆண்டுச்சந்திப்பில், 163 நாடுகளை சுற்றுப்புறசூழல் செயல்திறன் குறியீட்டெண்களின் வரிசைப்படி வெளியிட்டது. இதில் இந்தியா 123வது இடத்திலும், சீனா 121வது இடத்திலும் உள்ளன. இந்த இருநாடுகளின் வளர்ச்சி, அவற்றின் சுற்றுப்புறசூழலின்மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள முடியாது. சில இந்திய முதலாளிகளை உலகப்பணக்காரப் பட்டியலில் இடம்பெற வைத்துவிட்டு, மற்றவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கினால் இந்தியா நாடாக இருக்காது, சுடுகாடாகத்தான் இருக்கும். பயனடைவோர் 20% இருந்தாலும், நட்டம் அடைவோர் 80% இருக்கின்றனர். உடைந்த கண்ணாடி பயனற்றுப் போவது போல, சேதமுற்ற சுற்றுப்புறச்சூழலை எவ்வளவு கொடுத்தும் முந்தைய நிலைமைக்கு மீளமைக்க இயலாது. நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு பணம்-பதவி விட்டுச்செல்வதைவிட தூய்மையான நாட்டை, உலகை விட்டுச்செல்ல வேண்டும். 

அரசியல் கொள்கை, பொருளாதார மேம்பாடு, சுற்றுப்புற சூழல் என எல்லாவற்றையும் கடந்துநிற்பதே மனிதநேயம். அதற்கேனும் மனம் இறங்குவார்களா...! 
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி – கிளியே!
செம்மை மறந்தாரடி?

Wednesday, February 17, 2010

தோழன் அன்பரசுவிற்கு




தோழன் அன்பரசுவிற்கு,

வங்காளத்தில் முதன்முதலாய் அறிமுகமானவன் நீ தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் என்னோடு இருந்ததை விட உன்னோடு தான் அதிகம் இருந்திருப்பேன். கடந்த 25 ஆண்டுகளில் நான் விரும்பிய நட்பு உன்னிடம் தான் கிடைத்தது. நாம் கல்லூரி விட்டுச் செல்லும்போது நான் அழுதுகொண்டிருந்தேன். ‘இது என்ன நிரந்தரப் பிரிவா? பிறகு பார்க்கத்தானே போகிறோம்’ என்றாய். சமாதனப்படுத்தினாய். இப்போது அந்தப் பிரிவு நிரந்தரமாகிவிட்டது. வாழ்க்கை எத்தனை நிலையாமை கொண்டது. என் தாயை இழந்த போது இருந்த அதே வலி. இப்போது நண்பனை இழக்கும்போதும். நீ இறந்தபோன செய்தி பொய்த்துப் போய்விடாதா? வேனில்கால மழையாய் என் வாழ்வில் வந்து போய்விட்டாயே. இனி நான் எங்கு காண்பேன் உன்னை. 

என்றும் உன்னுடன் 
அருண்

Monday, February 15, 2010

திருகாணி சவப்பெட்டி


சவப்பெட்டிக்கு ஆணி அடிப்பாங்க. ஆனால் ஆணிக்குள்ளவே சவத்தை வைக்கமுடியும்ன்னா? அதெப்படி. இப்ப திருகாணி வடிவில் ஒரு சவப்பெட்டி வந்து இருக்காம். இதுக்குள்ள சவத்தை வைத்து நிலத்தில் அழுத்தி முறுக்கவேண்டியது தான். இதைப் பயன்படுத்தினால் இடம் மிச்சமாகுமாம். மையானத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் பகுதிகளில் கூட இந்த திருகாணிசவப்பெட்டியை வைக்கமுடியும். பெட்டியின் மேலுள்ள சின்னங்கள் விருப்பம் போல வைத்துக் கொள்ளலாம்.படங்களைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.






Tuesday, February 09, 2010

The God - குறும்படம்

காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love)




சில நாட்களுக்கு முன் காதல் மீதான புனிதப்போராட்டம் (Jihad for Love) என்றொரு ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்த ஆவணப்படம் இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியது. இவர்களுடைய மனக்குமுறல்கள், உண்மையான நிலைப்பாடுகள், கடவுள் மீதான பற்றுதல் என  அனைத்தையும் இந்த ஆவணப்படம் கண்முன் நிறுத்துகிறது. ஆவணப்படத்தில் நான் பார்த்தவற்றை சுருக்கமாக கீழே தருகிறேன்.

இரண்டு பெண் ஓரினக் காதலர்கள் குரான் வாசகங்களை படிப்பதாக ஆவணப்படம் தொடங்குகிறது.
தென்னாப்பொரிக்காவில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு முஸ்லீம் சகோதரர். ஓரினச் சேர்க்கை, மதம், குடும்பம் என  அவருடைய வாழ்க்கை போராட்டமாக இருப்பதாக விவரிக்கிறார். முக்கியமாக ஒரு இஸ்லாமிய மத அறிஞருடன் பேசும்போது குரானில் homosexual act அதாவது molestation  தான் பாவமாக கருதப்படுவதாகவும், homosexual relationship or love பற்றி எதுவும் கூறவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு அந்தப் பெரியவர் “இஸ்லாம் மட்டுமல்ல எந்த புனிதமான மதமும் ஓரினச் சேர்க்கையை அனுமதிப்பதில்லை.” என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.
எகிப்தில் ஓரினச்சேர்க்கைக்காக தண்டனை அனுபவித்துவிட்டு பிரான்ஸில் அகதியாக இருக்கும் ஒருவர். அவருடைய தண்டனை கொடுத்தவர்கள் மீதான கோபத்தையும், அனுபவித்த இன்னலையும் நம் முன்னே பதிவு செய்கிறார்.
தங்கள் காதலை இஸ்லாமிய சமூகம் எப்படி அங்கீகரிக்கும் என்றபடி பிரான்ஸில் இருக்கும் இரு பெண் ஓரினக் காதலர்கள். அதில் ஒருவர் பெண் ஓரினச் சேர்க்கைக்கு குரானில் என்ன தண்டனை என்று பார்க்கிறார். “The only punishment is Scolding the women, when there is no penetration” என்று அராபியில் படிக்கிறார்.
ஓரினச்சேர்க்கைக்காக 100 கசையடி வாங்கிய, இரானில் இருக்கும் அமீர். துருக்கியில் தன் காதலனோடு இருக்கிறார்.அவர்களுடைய குடும்ப நலனுக்காக முகம் படத்தில் காட்டப்படுவதில்லை.
துருக்கியில் இருக்கும் பெண் ஓரினக் காதலர்கள். (துருக்கியில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் எதுவுமில்லை.)
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் சுஃபி கவிஞன்,துறவி ஷா ஹுசைன், இந்துவான மதுலால் இருவருக்குமான காதல். அவர்களுடைய சமாதி, அங்கே ஹுசைனுடைய இறந்தநாளன்று கொண்டாடப்படும் விழா.
இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளரான இளைஞர் ஒருவர். அவருடைய தேடல்.பெண்வேடமிட்ட ஆண்களுடனான ஆட்டம். பின்னணி “மொஹலே ஆஸம்” படத்தில் வரும் பிரபலமான பாடல் “பியார் கியா தோ டர்னா க்யா”.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஓரினக் காதலர்கள் மீது மதங்களுக்கு அப்படி என்ன கடுப்போ தெரியாது. சொல்லி வைத்தது போல, எல்லா மதங்களும் இந்த விடயத்தை கடுமையாக எதிர்கின்றன. ஓரினக் காதலை ஆபிராகாமிய மதங்கள் முற்றிலுமாக எதிர்க்கின்றன. கடுமையான தண்டனைகள்  விதிகின்றன, விதிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் கடவுளே ஓரினக் காதலர்களாக இருந்தாலும், மதம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மனுதர்மத்திலும், அர்த்தசாத்திரத்திலும் இதற்கான தண்டனைகள் சொல்லப்பட்டுள்ளன. சில மதங்கள் இவற்றை ஒரு சமூகக்கூறாக கூட கருதவில்லை. விலங்குகளில் கூட ஓரினச்சேர்க்கை உண்டு. ஓரினச்சேர்க்கை பரிணாம கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டு. இதுவே தற்போதைய முற்போக்கான, விஞ்ஞான மதவாதிகள் எதிர்க்கக் காரணமாகவும் இருக்கும். இயற்கையாக ஏற்படும் விளைவுக்கு தனிப்பட்ட நபர் எப்படி காரணமாவார். அவரை தண்டிப்பது ஏன்? ஒதுக்குவது ஏன்? 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சில நாட்களுக்கு முன் கோவா படம் குறித்த விமர்சனப் பதிவில் நண்பர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விமர்சித்திருந்தார். ஓரினச்சேர்க்கை ஓர் அருவருக்கத்தக்க விடயமாக கூறியிருந்தார். “ஓரினச்சேர்க்கை என்பது தவறா?” என்று ஒரு நண்பர் பின்னூட்டமிட, பதிவிட்ட நண்பர் “ஓ! அவனா நீ?” என்று ஒரு பகடி செய்தார். இதில் பகடி செய்ய என்ன இருக்கிறது. ஓரினச்சேர்க்கையை ஆதரித்துப் பேசினால் அவனும்/அவளும் ஓரினச் சேர்க்கையாளராகத்தான் இருக்கவேண்டுமா? அப்படி இருந்தால் என்ன தவறு.

Philadelphia படத்தில் tom hanks ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பார். முதலில் அவர் ஓரினச் சேர்க்கையாளர், எய்ட்ஸ் நோயாளார் என அறிந்து அவருக்காக வழக்காட மறுக்கும் வழக்குரைஞர், பின்பு மனம்மாறி வழக்காடுவார். அந்த வழக்குரைஞரையும் சிலர் ஓரினச்சேர்க்கையாளராக அணுகுவார்கள்.

Fire படத்தில் இரு பெண்கள் திருமண வாழ்வில் தோல்வியடைந்து ஓரினச்சேர்க்கைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு நம்மவர் மத்தியில் இருக்கும் மதிப்பு எப்படி என்று கேட்டுப்பாருங்கள். எதோ நீலப்படம் போல கூறுவார்கள். 

இதுதான் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் சாக்கடையாக மணக்கும் நம் சமுதாயத்தின் நிலைமை. எல்லோரும் இதில் நெளிபவர்களே. இதையெல்லாம் பார்த்தும் கேள்வி எழுப்பாமல் இருக்கும் நாமும் இந்தப் புழுக்களில் ஒன்றா என்பதில் அவமானப்படவேண்டும். இதில் எந்த மதத்தையும் நான் தனியாக குறிப்பிடவில்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும். பெற்றபிள்ளையின் காதலை ஆதரிக்கும் முற்போக்காளராகக் காட்டிக்கொண்டாலும், அடுத்தவன் பிள்ளை ஓரினச்சேர்கையில் காதலித்தால் முகம் சுளிப்பவர்களே! திருமாலும், சிவனும் சேர்ந்து ஹரிஹரனாகலாம், ஆனால் நம்மோடு இருக்கும், நடமாடும் உறவுகள் செய்தால் தவறா? இவர்களுடைய காதலைத் தடுக்க மதங்களுக்கும், மனிதர்களுக்கும் உரிமை யாரால் கொடுக்கப்பட்டது.

Monday, February 01, 2010

நீயா நானா / கோபிநாத் / ருத்ரன்


பொதுவாக மனிதர்களிடையே தெய்வ நம்பிக்கையோ, ஜோதிட நம்பிக்கையோ, பேய்பிசாசு நம்பிக்கையோ, மற்ற மூட நம்பிக்கையோ இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களில் பலர் இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். இவற்றில் எந்த நம்பிக்கையும் மற்றவர்களை (அதாவது இந்த மற்றவர்கள் சகோதரர்களாக, பிள்ளைகளாக, கணவன்/மனைவியாக கூட இருக்கலாம்) சுரண்டாத, ஒடுக்காத வரையில் பரவாயில்லை.  
அமானுஷ்ய விசயங்கள் உண்மையா பொய்யா என்பது பற்றி விஜய்டீவியின் நீயா நானா-வில் சென்ற ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனநலமருத்துவர் ருத்ரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வீற்றிருந்தார். மக்கள் அமானுஷ்ய விசயங்களை எப்படி அணுகலாம் என்ற கேள்விக்கு ருத்ரனின் பதில் உங்களுக்கு பயப்படும் போல் ஒரு சம்பவம் நடக்கிறதா பயப்படுங்கள். அது இயல்பு. பிறகு அதையே நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமாறாதீர்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், கனவுகள் நிஜசம்பவங்களாக நடப்பதாக ஒருவர் கூறினார். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட என்னால் கூறமுடியும் என்று சொன்னார். கோபிநாத்தும் நடந்தது என்ன நிகழ்ச்சியில் நாங்களும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளோம் என்று சான்றிதழ் கொடுத்தார். பிறகு ருத்ரன் கேள்வி கேட்க ஆரம்பித்ததும். மேற்சொன்ன நபர் முதலில் நண்பனிடம் போன் செய்து கனவு பற்றி விசாரித்தேன் என்றார். பிறகு வேறொரு நண்பர் மூலம் விசாரித்தேன் என்று தடுமாறினார். பிறகு அந்த நண்பர் தான் தன்னை அணுகி தான் டீவியில் செய்த நிகழ்ச்சி பார்த்ததாகவும், தற்போது எதாவது கனவு வந்ததா என்று கேட்டதாக புதிதாக ஒன்றை சொன்னார். இப்படியாக டாக்டர் ருத்ரன் அந்த நபரிடம் இருந்து போலித்தனத்தை வெளியே கொண்டுவந்ததும் கோபிநாத்திற்கு ஷாக் அடித்தது போல் இருந்திருக்கும், ஏனென்றால் நடந்தது என்ன என்று நிகழ்ச்சியின் மூலம் அவர் கொடுத்த சான்றிதழ் கிழிந்துவிட்டது.

அடுத்ததாக அமானுஷ்ய விசயங்கள் சுவாரசியமானவை, பொழுதுபோக்கானவை என்று ஒரு குண்டு போட்டார் கோபி. அதற்கும் சுவாரசியம் என்றால் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் பொதுவில் வந்து மக்களை முட்டாளாக்கத் தேவையில்லை என்று ருத்ரனிடம் இருந்து வந்த பதில் வந்தது. டாக்டர் ருத்ரன் தன் பதிலில் இந்த கார்போரேட் சமாசாரங்களின்   சிந்தனை, அறிவு சாயத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இந்த பதிலும் நிச்சயம் கோபிநாத்திற்கு சுருக்கென்று இருந்திருக்கும். இவர் நடத்தும் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏமாற்றும் விசயங்களை புரியவைப்பதை விட்டுவிட்டு, சுவாரசியமான விசயங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பேசாமல் கோபி சாருவை கூப்பிட்டு இருக்கலாம். தன்னோட பங்குக்கு சாயிபாபா படத்தில் இருந்து குங்குமம், அரிசி, பருப்பு, புளி கொட்டுகிற கதையெல்லாம் சொல்லி சுவாரசியமாக்கி இருப்பார். அமானுஷ்ய விசயத்தை நம்பாதவராக மருத்துவப் பெண்மணி ஒருவர் தன்னுடைய அனுபவத்தையும், கருத்தையும் பகிர்ந்து கொண்டார். அமானுஷ்ய சக்தியில் நம்பிக்கை இல்லாதவர்களிலிருந்து வந்த கருத்துகள் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் கோபிநாத் அமானுஷ்ய சக்தியை நம்பும் ஒரு பெண் மாபெரும் கருத்தைக் கூறிவிட்டதாகப் பரிசளித்து திருப்தியடைந்தார்.

உபரிதகவல்:
நீயா நானா சிகழ்ச்சியில் பெண்ணிற்கு தாலி புனிதமானதா? இல்லையா? என்ற விவாதம் செம்மையாக வெளிவருவது போல, பர்தா தேவையா? இல்லையா? என்ற விவாதம் வெளிவராமலே இருப்பது மிகவும் சிறப்பான விசயம்.

பொய்யாகிப் போனவை



எங்க பாட்டி மதிய நேரத்தில் கறிசோறு கொடுத்து அனுப்பினால் இரும்பு ஆணியோ ஒரு அடுப்புகரித்துண்டோ போட்டு அனுப்புவாங்க. மதியநேரம் கறிசோறு கொண்டு போனால் காத்துகருப்பு தொடர்ந்து வரும் என்று அவங்களுக்கு ஒரு நம்பிக்கை. தென் தமிழகத்தில் கருப்புசாமி, அய்யனார், மதுரைவீரன் கும்பிடுவது போல, வேலூர் பகுதியில் காட்டேரி, முனீஸ்வர வழிபாடு உண்டு. என்னுடைய சிறுவயதில் காட்டேரி என்றால் கருப்பாக  இருக்கும், அதற்கு நீளமா தலைமுடி இருக்கும் என்று கதை சொல்லித்தான் எனக்கு எங்க பாட்டி சோறு ஊட்டுவாங்க. காட்டேரி கும்பிட சாயங்காலமாக குளக்கரை பக்கத்தில் இருக்கும் அரசமரத்தடியில்  பொங்கல், கறி, கருவாட்டு கொழம்பு செய்துகொண்டு போய் படைப்பாங்க. இப்போது அங்க ஒரு சப்கோர்ட் வந்திடுச்சி. ஆனால் இப்போது அந்த அரசமரம் இல்லை. வெட்டிட்டாங்க.

முன்பெல்லாம் எங்க ஊரில் இருக்கிற முனீஸ்வரன் கோயில் பக்கம் இரவில் யாரும் போகமாட்டாங்க. அங்க இருக்குற முனிகள் இரவில் சண்டைபோடும் என்று சொல்லுவாங்க. உடைந்து போயிருக்கும் களிமண் குதிரைகள் சண்டையில் செத்துபோன குதிரைகள் என்று சொல்லுவாங்க. இப்ப அந்த பகுதியில் வீடுகள் அதிகமாகிவிட்டதால், இந்தக் கதைகள் எல்லாம் பொய்யாகிப் போய்விட்டது.

ஒரு உபரி தகவல் என்வென்றால், காட்டேரி குலதெய்வமா கும்பிடுரவங்க கருப்பு அறுனாகொடி கட்டுவாங்க. முனீஸ்வரன் கும்பிடுரவங்க சிவப்பு நிற கொடி கட்டுவாங்க. இரண்டையும் கும்பிடுரவங்க இரண்டு நிறத்திலும் கட்டுவாங்க.

எங்க வீட்டுக்கு எதிரில் எங்கத் தெருவையும் பக்கத்துத் தெருவையும் இணைக்கும் ஒரு சந்து இருந்தது. அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக பேசிப்பாங்க. ஒருநாள் இரவு எங்க தாத்தா திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் எதோ ஒரு வெள்ளையான உருவம் அவரை எழுப்பியதாம். பதற்றத்தில் அவர் அந்த உருவத்தை அடிக்கப் போக, ஜன்னல் கம்பியை ஓங்கியடித்து கைமுறிந்துவிட்டதாம். இந்த கதையை நான் நினைத்து நினைத்து சிரிப்பதுண்டு.

எங்க தெருவில் மூலைக்கடை நாடாருக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் பூதம் இருப்பதாக சொல்லி யாரும் வாழரது இல்லை. அப்படி இதுக்கு முதல் அந்த வீட்டில் இருந்தவங்க சாப்பிடும் போது திங்குற சோத்தில் மலமும், மண்ணும் விழுமாம். இப்போ அங்க வீடு இல்ல. ஒரு மளிகைக்கடை இருக்கு.

மேலே சொன்ன விசயங்கள் கதைகளாக, செவிவழிச் செய்தியாக எனக்குச் சொல்லப்பட்டவை. இப்படி நிறைய பேருக்கு அனுபவங்கள் இருக்கும். இவை அந்தந்த பகுதிகளின் பழக்கவழக்கமாக, தெய்வ நம்பிக்கையாக, தனிநபர் நம்பிக்கையாக, குல வழக்கமாக உருவாக்கப்பட்ட புனைக்கதைகளின் சார்புடையவையாகவே கருதுகிறேன். இவற்றை இன்னும் மக்கள் நம்பிக்கொண்டும் வழிபட்டுக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

Friday, January 22, 2010

டாக்டர்ர்ர்ர் விஜய் அவர்களை இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது

டாக்டர்ர்ர்ர் விஜய் அவர்களை இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது. நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே! (படக்கோர்வையை உருவாக்கிய அன்பருக்கு நன்றி)

Sunday, January 17, 2010

ஆயிரத்தில் வேறொருவன்


இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே! சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என்ற disclaimer-உடன் தொடங்குகிறது. இதன்பிறகும் படத்தில் வரலாற்றை தேடுவது தேவையில்லாத விடயம். சோழ பாண்டிய போரில் தப்பித்த சோழவம்சத்தின் கடைசி வாரிசைத் தேடி பயணிக்கிறது ஒரு குழு. பாண்டியர்கள் வராமலிருக்க சோழர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த 7 பொறிகளைத் தாண்டி செல்வதுதான் கதையின் முதல்பாதி. படத்தின் இரண்டாவதுபாதி சோழர்கள் வாழும் குகையில் நடக்கிறது.

படத்தின் முதல்பாதியில் கார்த்தி பேசும் போதெல்லாம் ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார். இரண்டாவது படத்திலேயே கார்த்தியின் இந்த முன்னேற்றம் பெரிய விடயம். போகப்போக இரண்டாம் பாதியில் மனிதர் சீரியஸாகிவிடுகிறார்.

ரீமாசென் படத்தின் முக்கிய கதாபாத்திரம். அவர் தான் வில்லி. சந்திரமுகி ஜோதிகா போல இருக்கிறார். பார்த்திபனை மிரட்டுகிறார். என்னதான் ரீமாசென் காலை அகல விரித்து நடித்தாலும், இரண்டாம் பாதியில் நம் மனதில் நிற்பவர் பார்த்திபன். பார்த்திபன் அறிமுகக் காட்சி அருமை. படத்தின் முடிவில் சோழமக்கள் சித்திரவதை செய்யப்படும்போதும், பார்த்திபன் இறக்கும்போதும் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்திச் செல்கிறது. படத்தின் இறுதிக் காட்சிகள் ஈழத்தமிழரை மட்டுமல்ல, வல்லாதிக்கத்தால் நசுக்கப்படும் எந்தவொரு இனமும் அமைப்பும் சந்திக்கும் நிலைமைதான். அது ஈழமாகவோ, காஷ்மீராகவோ, வடகிழக்கிந்தியாவாகவோ, இராக்காகவோ இருக்கலாம், ஆனால் மக்கள் மீதான அடக்குமுறை இப்படித்தான் இருக்கும். வல்லாதிக்கத்தின் வேட்டைநாய்களான ராணுவத்தின் யோக்கியதை அவ்வளவுதான்.

கலை இயக்குனர் சந்தானம் பாரட்டப்படவேண்டிய அளவைவிட அதிகமாக பங்காற்றியுள்ளார். பல வித்யாசமான, ஆச்சர்யமான விடயங்களை நம் கண்முன்னே உண்மைபோல் நிறுத்துகிறார். அவற்றை ராம்ஜி ஒளிப்பதிவு செய்தவிதம் பிரமாதம்.

ஜிவிபிரகாஷின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கிறது. The king arrives, celebration of life போன்ற இசைகள் காட்சிகளுடன் அலட்சியமாகப் பொருந்துவது மிகஅழகு.

தாய் தின்ற மண்ணே… பாடலிலாவது தமிழர் சோகத்தைப் பதிவு செய்த வைரமுத்துவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

படைப்பற்றி பாடமெடுக்கும் கமல் குழியிலிருந்து அடியேன் ராமானுஜதாசன் என்று எகிறிகுதித்ததை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவர்களுக்கு இப்படம் பெரிய ஆறுதல். ஒரு நல்ல, தரமான பழந்தமிழரின் வாழ்வியலைக் கூறும் ஒரு வரலாற்றுப் படம் தமிழில் இதுவரை வரவில்லை. இப்படம் அதுபற்றி கூறவில்லை என்றாலும், அந்த ஆர்வத்திற்கான முதல்கல்லாக ஏற்கலாம்.

7 விதமான பொறிகளின் கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் குறைவுதான். இருப்பினும் இதுவரை தமிழில் வெறும் பாடல்காட்சிகளில் மொக்கையாக பயன்படுத்தப்பட்டு வந்த கிராபிக்ஸ் தொழிற்நுட்பம் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Gladiator வகை சண்டை காட்சி கூட தமிழுக்கு புதுசு. புதைகுழிப் பகுதியில் வரும் நடராஜர் நிழல் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.

The mummy, McKhennas gold, 300, Apocalyptos படங்களின் சாயல் இருப்பினும்,படத்தில் எதுவும் அரைத்தமாவு இல்லை. 100 கோடியில் லஞ்சலாவண்யம் பற்றி மயிருபிளக்கும் சங்கர், மேடைக்கு மேடை வார்த்தைக்கு வார்த்தை புதுமை பற்றி அறிவுரையாற்றிவிட்டு பொறுமையை சோதிக்கும் படங்களை தற்போது கொடுத்துக்கொண்டுவரும் கமல் என ஹைபட்ஜட்டில் பழைய பக்கோடா விற்கும் இவர்கள் செய்யாததை செல்வராகவன் இந்தப்படம் மூலமாக செய்துவிட்டதாக நினைக்கிறேன்.

Apocalypto, Passion ofchrist படங்களில் மொழியே தெரியாமல் சப்டைட்டில் பார்த்து மட்டுமே ஓரளவு புரிந்துகொண்ட படத்தைப் பற்றி பேசி சிலிர்ப்பவர்கள். இந்தப் படத்தில் வரும் 15 அ 20 நிமிட தமிழ் புரியவில்லை என்று சில தமிழ் பதிவர்கள் அங்கலாய்கிறார்கள்.லாஜிக் மீறல் என்றொரு குற்றம். எல்லா mystery, fantasy படங்களிலும் லாஜிக் புஜ்ஜியம் தான்.
 
In overall, A New dish with a different taste.
 
*****************************************************************************

தான் ரசித்ததை தன் குருநாதர்களிடம் மடலனுப்பி கேட்கும் படவா ரசிககண்மணிகள் என்றுதான் திருந்துவார்களோ தெரியாது. கூடிய சீக்கிரத்தில் அதிமேதாவி சாருவிடமோ, சகலகலா ஜெயமோகனிடமோ கருத்துக்கணிப்பு நடக்கும் பாருங்கள். அவர்களும் தன் பங்கிற்கு இரண்டு, மூன்று உலகப்படங்களையோ, மலையாளப் படத்தையோ சொல்லி, பொருத்தம் பார்த்து புடுங்காசூரர்களாகக் காட்டிக்கொள்வார்கள்.