Tuesday, June 26, 2007

சிவாஜி - இந்த டப்பா படத்துக்கு இப்படியொரு பில்டப்பா!!!

"தப்பா அதிர்ஸுகாது!!" சிவாஜி படத்த தெலுங்குல பார்த்துட்டேன்! அதுல தான் இந்த டயலாக். அந்த கொடுமைய ஏன் கேட்குரீங்க. இதெல்லாம் ஒரு படம்னு எடுத்தவன எதால அடிக்கிறதுனே தெரியல. இந்த டப்பா படத்தை எடுக்கத்தான் 2 வருஷமா 60 கோடி செலவு செய்து இல்லாத பில்டப் கொடுத்தானுங்க. உருப்படாத பயலுவ! படத்தோட மட்டமான கதைய பத்தி எல்லாரும் கேட்டுகேட்டு சலித்து போய் இருப்பீங்க. தமிழ்மண அன்பர்கள் அவங்கவங்க பாணில கதையையும், விமர்சனத்தையும் சொல்லிட்டாங்க. அதனால இங்க எனக்கு தோணினத மட்டும் சொல்லிகிறேன்.

* கதைனு எதுவும் இல்லீங்க!! இரண்டு ரஜினி படம் (படையப்பா, பாட்சா), இரண்டு சங்கர் படம் (முதல்வன், ஜெண்டில்மேன்) ஒரு குண்டால கொட்டி, நல்லா மசாலா கலந்து, அரைவேக்காடுல எடுத்து முடிச்சி இருக்காங்க!!

* படம் முழுக்க தேடினாலும் லாஜிக்னு ஒன்னு இல்லவே இல்ல. ரஜினி, சங்கர் படத்தில் என்னைக்குடா லாஜிக் இருந்து இருக்குனு நீங்க கேட்கலாம். இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் திருந்தி இருக்கிற சமயத்தில், இவங்க ஊடால புகுந்து கெடுக்கிற முயற்சிய ரொம்பவே பாராட்டலாம்.

* தமிழ்சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறேன் என்று ஊரை எமாத்திட்டு இருக்குற டுபாக்கூர் சங்கர் படம் எடுக்கிறதுக்கு பதில் ஆல்பம் எதாவது போட போகலாம். வெயில், இம்சை அரசன் இதுபோல குறைந்த பட்ஜெட்ல நல்ல படம் கொடுத்து லாபமும் பார்க்கும் சங்கர், அரதபழசா போன ஒரு கதைய வச்சிட்டு 30-60 கோடி செலவு செய்து, ஒன்னுதுக்கும் உதவாத படங்களை எடுப்பது ஏனென்று தெரியவில்லை.

* உலக சினிமா பற்றி ஊருக்கு உபதேசம் செய்து வரும் சுஜாதா (இவரு திரைக்கதை எழுதுவது எப்படி?னு வேற நூல் விட்டு இருக்கார்), தான் கற்றதிலிருந்து என்ன பெற்றாரென்று தெரியவில்லை. இந்த படத்தில் அவரோட பங்கு என்னனு தெரியல. அப்படி ஒரு புதுமையான கதைக்களம்.

* விவேக் காமெடினு எதுவும் செய்யல, வெறும் ரஜினியோட புகழ்பாடியாக வர்றார்.

* இதுக்கு சுமனோட வில்லன் ரோல்ல சத்யராஜ் நடிக்க கேட்டாங்களாம். ரகுவரனையே ஒழுங்கா பயன்படுத்தாதவங்க சத்யராஜ்யா பயன்படுத்த போராங்க. கடைசில சுமன் மிதிபட்டு சாகும் போது தெலுங்கு படத்துக்கு இணையான முடிவு.

* ஸ்ரேயா புடவை கட்டினால் மூக்கு சிந்திட்டு இருக்காங்க! சின்னசின்ன டிரஸ் போட்டா எல்லாம் தெரிய ஆடுராங்க!

* ஏ.ஆர்.ரகுமான் இசை பரவாயில்லை ரகம். பாபா-ல வருவது போல, இதுலயும் "லப..லப..லப"னு பின்னணியில கத்துரார். பாடல்கள் ஓகே.

* க்ளைமாக்ஸ்ல ரஜினியைக் க்லோசப்பில் காட்டும்போது, செத்துப்போன எங்க தாத்தா ஞாபகம் தான் வருது. அப்படி ஒரு இளமை முகத்தில். இவரு செய்யற ஸ்டைலப் பார்த்து ஸ்ரேயா ரசிக்கிறது செயற்கையாக இருக்கிறது. தலையில் அடிச்சிகலாம் போல! வெளியே ஆன்மீக அல்டாப்பாகவும், பக்கம்பக்கமாக அறிவுரையும் சொல்லிட்டு அலையும் ரஜினிக்கு ஸ்ரேயாவோட இடுப்ப பிடிச்சிட்டு ஆட சொல்லி எந்த வேதம் சொல்லிதுனு தெரியல!! எங்கே நான் சின்ன வயதில் பார்த்த அந்த பில்டப் இல்லாத பழைய ரஜினினு கேட்கத்தோணுது. படத்தோட நடுவில் கலாய்க்கிற ஸ்டைல் ரசிக்கலாம்.் பழைய ரசிகன் என்கிற முறையில் ரஜினிக்கு ஒரே வேண்டுகோள், "நீங்க நதி இணைப்புக்கு பாக்கெட்ல இருந்து ஒரு கோடி இல்ல..ஒரு பைசா கூட தர வேண்டாம்!! 30 கோடி வாங்கிட்டு இதுபோல ஓட்டகாலணா பெரத படங்களில் நடித்து உங்க ஏழை ரசிகனோட மூளையையும், பாக்கெட்டையும் காலி பண்ணாதீங்கய்யா!!".

* சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

* கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வித்தியாசமாக தோன்றுவதாக ஊடகங்கள் ஒரு கலக்குகலக்கின. ஆனால் எனக்கு குடைக்குள் மழை படத்தில் பார்த்திபன் சொல்லும் வரிகள் தான் நினைவில் வருகிறது (என்ன கோட் இது!!இங்கிலீஷ் படத்தில் வர இராப்பிச்சைகாரன் மாதிரி).

நீ என்னடா சொல்லுறது! படம் ரொம்ப நல்லா போகுதுனு சிலர் சொல்லலாம். இந்த கேவலமான படத்துக்கு ஆயிரத்தில் காசு வச்சி வித்து இருக்கானுங்க. அதை நினைச்சா, இவனுங்க எப்படிப்பட்ட மொள்ளமாரியா இருக்கணும், 1000 ரூபாய் காசு கொடுத்து பார்த்தவனுங்க எவ்வளவு பெரிய ஏமாளிங்கனு தோணுது "நாங்க எமாளி இல்லை, படம் நல்லாதான் இருக்கு"னு சொல்லி மீசைல மண்ணு படலனு போறவங்க என்னை தயவு செய்து திட்டாதீங்க. உங்களோட கருத்து மட்டும் சொல்லுங்க!!

படம் பார்த்த பிறகு எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் நான் (உபயம்: நெட்) ஓசில பார்த்ததுதான்.

Friday, June 22, 2007

துர்கா பூஜா - படங்கள்

மேற்குவங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெறும் விழா "துர்கா பூஜா" ஆகும். நவராத்திரி, தசராவைத்தான் அவர்கள் இவ்வாறு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். அவ்விழாவன்று, "பண்டால்்" என்ற கூடங்கள் அமைக்கப்பட்டு, துர்காமாதா உருவத்தை அமைத்து வழிபடுவார்கள். பண்டால்கள் வெகுஅழகாகவும் நேர்த்தையாகவும் அமைக்கப்பட்டு இருக்கும். பண்டால்கள் துணி, அட்டை, மற்றும் தெர்மகோல் கொண்டு செய்யப்படுகிறது. ஒருமுறை நான் இந்த பண்டால்களையும், துர்காஉருவத்தையும் பார்த்து படம்பிடித்து வந்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

துர்காசிலை செய்யும்போது!!




துர்கா மாதா படங்கள்







பண்டால்கள்




எனக்கு எட்டிய - எட்டாத எட்டு

முதலில் எட்டு விளையாட்டுனு என்னை போட்டுக்கொடுத்த கவிதாயினி காயத்ரியை வன்மையாக கண்டிக்கிறேன். டூவிலர் லைசென்ஸ் எடுக்கத்தான் 8 போட சொல்லுவாங்க. இந்த எட்டு எதுக்குனு தெரியல. என்னையும் ஆட்டத்தில் சேர்த்து விளையாட்ட விபரீதம் ஆக்குரீங்க.

1. என்னோட கண்ணாடி கனவில் புள்டவுசர் விட்டு ஏத்தினது அம்மாவை இழந்த சம்பவம். எனக்கு வாழ்க்கையைக் காட்டிய விரல்கள் கைவிட்டுப்போன பிறகு என்னொட பாதையும், பயணமும் மாறிப்போனது.

2. இரவு முழுக்க படிச்சி எக்ஸாம் எழுதிட்டு, பஸ்ல தூங்கிட்டு போய் காஞ்சிபுரத்தில் இறங்கினதும், அங்க பேருந்துநிலையத்தில் எல்லாரிடமும் 2 ரூபாய் சேகரிச்சு ஊர் வந்து சேர்ந்ததும் மறக்கவே முடியாது.

3. நான் என்னோட கோபத்தால நண்பர்களை இழந்ததில்லை. எனக்கு பிடிக்காத விஷயத்தை யாரவது செய்தால் அங்கிருந்து முதல்ல விலகிடுவேன். அதையே நண்பர்கள் செய்தால், கடுமையாக எடுத்துச் சொல்லுவேன். என்னோட ப்ளஸ் இதுதான். இருப்பினும் கோபம் காரணமாக சில பள்ளி தோழர்களை இழந்தது. பிறகு கோபத்தில் யாரையாவது நோகடித்துவிட்டால், அதிகமாக நொந்துகொள்வேன். மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டேன்.



4. எல்லாக்குழந்தைகள் போல வரட்டு கடவுள்நம்பிக்கையோடு தான் வளர்ந்தேன். காலப்போக்கில் தெளிந்து கடவுள்மறுப்புக் கொள்கையில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது.பிறகு எந்த கஷ்டம் வந்தாலும் கடவுளை துணைக்கழைப்பதில்லை. வரலாற்று சுற்றுப்பயணம் காரணமாக அல்லாமல், கோவிலுக்கு போவதில்லை.

5. என்னைச்சுற்றி இருக்கும் எல்லாரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்வேன். எப்பவும் அது நடக்கிறது இல்ல. சில சமயம் சரியான லூசுபயல்னு நினைக்கத்தோணும். (நீங்க அப்படி நினைக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும்). பேராசிரியர் பெருமையா நகைச்சுவைமன்னன் சொல்லி பேசச்சொல்ல, நான் என்னோட கல்லூரி பிரிவு உபச்சாரவிழாவில் சொன்ன ஜோக்கக்கு ஒரு பயலும் சிரிக்கல. ரொம்ப அவமானமாக போச்சிப்பா!!

6. வாழ்க்கையில் இதுவரை லட்சியம், சாதனை என்று எதுவும் இல்ல. என்னால் முடிந்தவரை வறுமையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யனும். இதுதான் என்னோட லட்சியமாக மற்றும் சாதனையாக இருக்கும். வருங்காலத்தில், எனக்கு மேலும் நல்லதொரு பொருளாதார நிலை அமைந்தால் மேலும் நிறைய உதவி செய்வேன். சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இருப்பதை வெட்கக்கேடாக நினைக்கிறேன். நான் 1000 ரூபாய் வருமானத்தில் குடும்பம் நடத்தும் மனிதர்கள் இருக்கும் இந்தியாவில், 2000 ரூபாய் கொடுத்து சிவாஜி படம் பார்ப்பவன் அல்ல. 1 ரூபாய் (அ) 50 காசுக்கு கீரைக்காரியிடம் குடுமிப்பிடி சண்டை போடுபவனும் அல்ல.

7. என்னுடைய உடன்பிறந்தவர் அண்ணன் மட்டும்தான். முதல்ல அக்கா, தங்கை இல்லயேனு ரொம்ப ஆதங்கப்படுவேன். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்தபிறகு கண்மணி அக்கா, காயத்ரி, கவிதா, மைபிரண்ட், துர்கா என்று பாசமழைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

8. ஹிந்தியே சரியா பேசத்தெரியாம, ட்ரெயின்ல அதுவும் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல டெராடூன் வரை தனியாக போனது. அங்க போயும் குசும்பு அடங்காம ஹரித்வார் போனது. எல்லாம் என்னோட சரித்திர சாதனைகள்.

எப்படி என்னோட வயதெறிச்சல கொட்டிகிட்டீங்க!! நானும் இப்ப அடுத்தவங்க வயதெறிச்சல கொட்டிக்கிறேன்.

விடாதுகருப்பு

அசுரன்

கண்மணி அக்கா

ஆசிப்மீரான் அண்ணாச்சி

சந்தோஷ்

சதுர்வேதி

கண்ணபிரான் ரவிசங்கர்

அணில் மற்றும் கவிதா (முடிந்தால் பீட்டர் தாத்ஸ்யையும் கூட்டிவாங்க)

இதுபோல ஒரு கலவைய யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

ரசித்த மொகலாய ஓவியங்கள்

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு சொல்லுறது போல, நான் ரசித்த சில ஓவியங்களை உங்கள் பார்வைக்கு தர விரும்புகிறேன்.

பானிபட் போர்


தாராஷுகோ (ஷாஜகானின் மூத்தமகன், ஔரங்கசீபின் சகோதரர்)


ஷாஜகான்


ஜாஹாங்கீர் மற்றும் இளவரசர் குர்ரம் (ஷாஜகான்)






ஷாஜகான்


மும்தாஜ்

Thursday, June 21, 2007

சந்தேகத்திற்குரிய சாமியாரும் சீடனும் காந்திசிலையருகே கைது


தமிழ்மண அன்பர்களுக்காக வேண்டுகோளுகிணங்க, உலக சின்னத்திரையில் முதன்முறையாக வெண்ணெய் டிவியில் சென்னை சந்திப்பை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக பாசக்கார குடும்ப தலைவர் தவத்திரு ஸ்ரீஅபிஅப்பா சுவாமிகள் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாசக்கார குடும்பத்தோட அடாவடி சந்திப்பு எங்கே? எங்கே? என்று எல்லாரும் கேட்கிறாங்க? ஆனால் எங்கே சந்திப்புனு இன்னும் சொல்லாம கண்மணி அக்கா ரகசியமா வச்சிட்டு இருக்காங்க. சரி அத விடுவோம்!! நமக்கு எதுக்கு மேலிடத்து பொல்லாப்பு. கண்மணி அக்கா கலந்துகிட்டா மங்கை கட்டவுட், பேனர் செலவு ஏத்துகிறதா சொல்லி இருக்காங்க. குட்டிபிசாசு சோறு ஓசில சோறு போட்டா வரேனு சொல்லி இருக்காம். அய்யனார் காந்திசிலை பக்கத்தில் சந்திப்ப வச்சிக்கலாம்னு சொல்லி இருக்கார். அதுமட்டுமில்லாமல், அங்க சந்திப்பு நடத்த பில்லா, ரங்கா படத்துல வர மாதிரி கோட்வர்ட் இருக்காம். காந்தி சிலை பக்கத்தில் போய் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்கனுமாம். அதுக்கு பதிலா மத்தவங்க செருப்ப கால்ல தான் போடணும்னு சொல்லுவாங்களாம். இப்படி நிறைய பில்டப்போட சென்னை சந்திப்பு நடக்கவிருக்கிறது.

இடம்: காந்திசிலை

இம்சைகள்: பாசக்கார குடும்பம்

(சோத்துக்கு ஆசைப்பட்டு குட்டிபிசாசு இரவே வந்து பீச்சுல படுத்துட்டு, காந்திசிலை பக்கத்தில் பசியோட நின்னுட்டு, போறவன்..வரவன்..எல்லாரையும் கோட்வேர்டு சொல்லி இம்சை பன்ணிட்டு இருக்கு)

கு.பி.: எட்டுகால் பூச்சிக்கு எத்தனைகால்?

சுண்டல் விக்கிரவன்: மூஞ்ச பாரு! சாவுகிராக்கி! காலங்காத்தால ஏண்டா என் உயிர வாங்குர. போவும்போதும் வரும் போதும் சும்மா இதே கேள்விய கேட்டு கடுப்பேத்தினு கீற! மவனே இன்னோரு தபா கேட்ட, கேக்கிர வாய கீச்சி புடுவேன்!

குட்டிபிசாசு திட்டு வாங்கி முடித்த பிறகு, அந்த பக்கம் வந்த ஒரு பொண்ணப்பார்த்து குட்டிபிசாசு இதே கேள்விய கேட்க, அந்த பொண்ணு கோழிக்கு ரெண்டு கால்னு பதில் சொன்னது. யாருனு உங்களுக்கு தெரிஞ்சி இருக்குமே! சாட்ஷாத் நம்ம காயத்ரி தான்! மன்னிக்கவும்... கவிதாயினி காயத்ரி. கொஞ்சநேரத்துல பாசமலர் ஒருத்தர் வந்தாங்க. குட்டிபிசாசு உடன்பிறப்ப பார்த்து மலைத்துப்போய் நின்னுட்டு இருந்தது. நடுவுல புகுந்த காயத்ரி மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறுவேறு பாதையில் போய்விட்டன! அவை ஒன்ரோடொன்று பார்த்துக்கொள்ளும்போது பேசமுடியவில்லையே!னு ஒரு டயலாக் விட, ஒரே ஆனந்தகண்ணீர்!! வந்தது யாருமில்ல நம்ம கண்மணி அக்கா தான்.


சிறிதுநேரம் கழித்து பஜனைப்பாட்டோட காவி தறித்து ஒரு சாமியார் வந்தார்.

கு.பி.: காசு எதுவும் இல்ல, வேற எங்கயாச்சும் போங்க!!

சாமி: குழந்தாய் குட்டி பிசாசு!

கு.பி.: என்னோட பேரு உங்களுக்கு எப்படி தெரியும்

சாமி: என்னை யாரென்று தெரியவில்லையா! நான் தான் சென்னை சந்திப்பின் சிறப்பு விருந்தினன் தவத்திரு ஸ்ரீஸ்ரீ அபிஅப்பா சுவாமிகள்

சாமி: இந்தா பிரசாதம்!!

கு.பி.: என்ன சாமி! பிரசாதம்னு சொல்லிட்டு விபூதி தரீங்க! பொங்கல், புளியோதரை எல்லாம் தர மாட்டிங்களா?

சாமி: நீ ஓசியில் உண்டகட்டி வாங்கி சாப்பிடுரன் போல, உனக்கு விபூதியே அதிகம்! பொங்கல், புளியோதரை வேண்டுமென்றால் சரவணபவனுக்கு போய் சாப்பிடு, இப்படி ஓசி சோத்துக்கு அலைவது இழுக்கு!!

அந்த சமயம் பார்த்து பாசக்கார கொலைவெறி கொள்கை வீரர்கள் கும்பலாக வந்தனர். முத்துலக்ஷ்மி, சென்ஷி, இராம், கோபி, இம்சையரசி, ஜி என எல்லோரும் வந்தனர். இந்த கூட்டத்தைப்பார்த்து எதோ உத்தரவு வாங்கம மாநாடு நடத்தப்போரங்கனு உடனே போலிஸ் வந்துவிட்டது. குட்டிபிசாசும் அபிஅப்பாவும் திருதிருவென்று விழிக்க, ரெண்டு பேரயும் சந்தேகத்தின் பேரில் போலிஸ் அழைத்துச்சென்றது. மறுநாள் காலை தினத்தந்தியில் சந்தேகத்திற்குரிய சாமியரும் சீடனும் காந்திசிலையருகே கைது என்று போடப்பட்டு, பருத்திவீரன் படத்தில் வருவதுபோல, கீழே சாமிஜியும், குட்டிபிசாசும் குத்துகால் போட்டு அமர்ந்து இருந்தனர்.

Wednesday, June 20, 2007

காலத்தைக் கட்டுப்படுத்த கடிகாரத்தை நிறுத்திய கந்தசாமி

பருந்துச் சிறகுடைய

பட்டாம்பூச்சி காலயந்திரத்தை

கந்தசாமியின் கொல்லைபுரத்தில்

போட்டுவிட்டுப் போனது

பள்ளியே பார்த்து

அறியாத கந்தசாமிக்கு

காலயந்திரமா புரியப்போகுது,

காயலாங்கடைக்கு சென்றான்

வழியில் என்னைப்பார்த்து,

காலயந்திரம் தருகிறேனென்று

பழைய கடனுக்கு

கணக்குத் தீர்த்தான்

சோதனையோட்டம் பார்க்க

இயந்திரத்தில் ஏறினோம்.

காலத்தை கட்டுப்படுத்த

கந்தசாமி கடிகாரத்தை

நிறுத்தி கொண்டான்

“கடிகாரத்தை நிறுத்தினால்,

காலம் எப்படி நிற்கும்”

என்றேன்! “மூச்சி நின்றால்,

உயிரும் நிற்கும்தானே!”

உளரினான் மடையன்

விசையை இயக்கினேன்

கண்ணிமைக்கும் நேரத்தில்

கட்டற்ற வெளிக்குள்

காலங்கள் தாண்டின

உயிரை உறித்ததுபோல்

காலத்தின் சுழற்சி

சலனமற்ற சஞ்சரிப்பு

சரித்திர சம்பவங்கள்

விரித்தது கண்முன்னே!

‘சாக்ரடீசு விடமுண்டார்’

வரலாற்றைப் புரட்டியது,

‘வயோதிக வால்மீகி

ராமகாதை எழுதினார்’

வயற்றைப் புரட்டியது

‘இயேசு சிலுவையேறினார்’

கண்களை மிரட்டியது

படீரென்று சத்தம்!

பால்காரன் வரும்நேரமென்று

கந்தசாமி விசையைத்திருக

வீட்டுக்கு திரும்பிவிட்டோம்!!

Tuesday, June 19, 2007

சாணி - ஓட்டம் - ஒரு சம்பவம் (2)

என்னதான்னு தெரியலிங்க! ஓட்டமும், சாணியும் என்னோட நிறையவே சம்பந்தப்பட்டு இருக்கு, இதனாலதான் என்னவோ நான் சானியா மிர்சாவோட விசிறியும் கூட.

அன்று பொங்கல் அதிகாலை சுமார் 3:00 மணி இருக்கும். எனக்கு 9 வயது என்னோட பாட்டி வீடு மெழுக சாணி கொண்டு வர சொன்னாங்க. நானும் பழைய கோணி ஒன்று எடுத்துக்கொண்டு கிளம்பினேன். பொதுவாக இது போன்ற செயல்களுக்கு செல்ல மாட்டேன். அன்று அவசரமாக தேவைப்பட்டதால் நானே போக வேண்டிய கட்டாயம். நான் போன பதிவில் சொன்ன வணிகவளாகம் அருகே மாடுகள் கட்டப்படுவதால், சாணி அங்கு எளிதாக கிடைக்கும். ஆனால் அதன் அருகில் இருக்கும் மரங்களில் காட்டேறி, முனீஸ்வரன் கும்பிடுவார்கள். ஆதலால் இரவில் அங்கு அதிகமான நடமாட்டம் இருப்பதில்லை. அந்த இடத்திற்குச் சென்றால் எளிதில்
சாணி கிடைக்குமே என நானும் சென்றுவிட்டேன். காட்டேறியும், முனீஸ்வரனும் எங்கள் குலதெய்வம் என்பதால் எங்களை ஒன்றும் செய்யாது என்ற துணிச்சலில் தான் அங்கு வந்தேன். யாரோ வெளியே உள்ளவைகளை முன்பே எடுத்துவிட்டார்கள் போல, கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்போம் என கீழ்தளத்தினுள் நுழைந்தேன். அங்கு என்னுடைய அதிர்ஷ்டம் நிறைய சாணி கிடைத்தது.

திடீரென எதோ ஒரு சத்தம். அந்த நிசப்த தருணத்தில், சத்தம் தெளிவாகக் கேட்டது. ஏற்கனவே அடிமனதில் ஒரு பயத்தில்தான் நான் சாணி அள்ளிக்கொண்டு இருந்தேன். இந்த சத்தம் என்னுடைய பயத்தை மேலும் அதிகமாக்கிவிட்டது. மனதை திடபடுத்திக்கொண்டு திரும்பினேன். எதோ ஒரு கரிய உருவம் பக்கத்தில் இருந்த தூன் அருகே நின்று என்னைப்பார்த்துக் கொண்டு இருந்தது. என்னுடைய பயம் என்னை சிலையாக்கிவிட்டது. என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த உருவம் மாடு போலவும் தெரியவில்லை. மனிதனைப்போலவும் தெரியவில்லை. கோணியைப்பிடித்தபடி குனிந்திருந்த நான் ஒட தயாரானேன். அங்கிருந்து அப்போது நான் ஓடிய வேகஓட்டத்தை என் வாழ்நாளில் இதுவரை ஓடியதில்லை.

ஓடிவந்து படுக்கையில் படுத்தவன் தான், பயத்தில் 4 நாள் காய்ச்சல். காட்டேறியைத்தான் நான் பார்த்துவிட்டேன் என என்னுடைய பாட்டி படையல் எல்லாம் வைத்தார்கள். இப்போது அந்த உருவம் ஞாபகத்தில் வரவில்லை, மறந்துவிட்டது. ஆனால் சம்பவம் நடந்த புதிதில் பயந்து இரவு நேரம் எங்கேயும் வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் இருந்தேன். இப்போது கூட அந்த மரத்தைப் பார்த்தால், நான் ஓடி வந்ததை நினைத்து சிரிப்பு வரும் !! இப்ப சொல்லுங்க! என்னோட புலம்பல் அவசியம் தானே!!

சாணி - ஓட்டம் - ஒரு சம்பவம் (1)

நான் சிறுவயசிலிருந்தே நல்லா ஓடுவேன், தடகள வீரன் இல்லாட்டியும் சுமாராக ஓடுவேன். ஓடுகாலி! ஓடுகாலி!னு நீங்க சொல்லுரது என்னோட காதில் கேட்குது. இதுகெல்லாம் ஒரு இடுகையானு கேட்காதீங்க! முழுசா படிச்சிட்டு சொல்லுங்க, எப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனு தெரியும்.

எனக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் தன்னுடைய விடுமுறை விண்ணப்பத்தை அவருடைய கல்லூரியில் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பினார். நான் அங்கு சென்ற பின் தான், அன்று கல்லூரி மாணவர்கள் போராட்டம் எதோ செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. நான் கல்லூரிக்குள் நுழைய முடியாமல் வெளியே நின்றேன். மாணவர்கள் கல்லூரி அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலையை தடுத்தவாறு போராட்டம் நடத்தினர். காவல்துறை வந்து மாணவர்களை விலக்கிக் கொண்டு இருந்தது. அச்சமயம் யாரோ ஒரு மாணவன் ஒரு காவல் அதிகாரி மீது கலெரிந்துவிட்டான். உடனே காவல்துறை எல்லா மாணவரையும் அடிக்க துவங்கியது. நான் அக்கல்லூரி மாணவன் இல்லையென்றாலும் கண்டிப்பாக என்னையும் அடிப்பார்கள் என்று நானும் ஓட வேண்டிய நிலை. நான் ஓடிக்கொண்டு இருக்கும் போது, ஜீப்பில் வந்த காவல்துறை என்னுடைய பின்னால் ஓடிவந்த ஒரு மாணவக்கூட்டத்தை லத்தியால் எல்லோருடைய பின்னாலும் அடித்துப் பிண்ணியது. காவலதிகாரிகள் அம்மாணவர்களை கண்டதும் மேலும் ஓடலானேன். போகும்வழியில் எந்த பேருந்தும் கைகாட்டியும் நிற்கவில்லை. கைகாட்டியதும் ஓடி ஏறமுடியாதபடி வெகுவேகமாக சென்றன. ஓடிஓடி வண்டிமாடு போல நுரை தள்ளிவிட்டது. ஓடும் வழியில் ஒரு குட்டிச்சுவரைப் பார்த்தேன்.

இனியும் இப்படியே ஓடிக்கொண்டிருந்தால் நாமும் தர்மஅடி வாங்குவோம் என முடிவு எண்ணி, வேகமாக ஓடிச்சென்று அதைத் தாண்டினேன். தாண்டிய மறுகணம் குட்டிச்சுவரின் மறுபக்கம் குவிக்கப்பட்ட சாணியில் முட்டியளவு இறங்கி இருந்தேன். பழைய சாணி போல சரியான நாற்றம், எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே வந்தேன். ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். எப்படியோ, புண்ணியவதி ஒரு குடம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். சாணி கழுவின பிறகும் என்னை சுற்றி அது விட்டுச்சென்ற மணத்தை என்னாலேயே தாங்க முடியவில்லை. பேருந்தில் ஏறினால் எல்லாரும் மூக்கை மூடி எனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று முடிவு செய்து நடந்தே வீட்டுக்கு சென்றேன்.

இப்ப சொல்லுங்க! என்னோட புலம்பல் அவசியம் தானே!!

நினைத்தாலே கசக்கும்!!

பாலாற்றுமண்ணும் பன்றிக்கூட்டமும் மறந்து போகுமா!
தோல்பேக்டரியும் தூதுவிடும் நாற்றமும் தொலைந்து போகுமா
இதுதான் இப்ப நான் ஊருக்கு போகும்போது பாடும் பாடல்.
எங்க ஊரில் இராபின்சன் குளம் என்ற ஒன்று இருக்கும். அது பிரிடிஷ் அரசாங்கத்தால் கட்டப் பட்டதாக என்னோட அப்பா சொல்லுவார். அதோட நீர் போக்குவரத்து பற்றி வியப்பாக கூறுவார். சில ஏரிநீர் அதற்குள் பாய்ச்சப்பட்டு பிறகு வெளியேற்றப்படும் நீர் பாலாற்றில் சென்று வடியும். அந்த குளம் இப்ப ஊருடைய குப்பைகளைக் கொட்டக்கூடிய ஒரு குப்பைத்தொட்டியாகவும், கழிப்பிடமாகவும், பன்றிகளின் இருப்பிடமாகவும் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன் குளம் நல்ல நிலையில் இருக்கும்போது, நிலத்தடிநீர் வெகு குறைவான ஆழத்திலேயே கிடைத்துக்கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பத்மசாலிய நெசவாளர்களின் நெசவுத்தறி கால்குழியில் நீர் நிரம்பிவிடும். அவர்கள் இதனை தடுக்க அந்த குளத்திற்கு நீர்வரும் பாதையை மூடிவிட்டனர். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக குளம் சீர்கெட்டு, முற்றுமாக மாசடைந்துவிட்டது. அந்த காலத்தில் பிரிஷ்காரர்கள் பல நல்ல விஷயங்கள் இந்தியாவிற்கு விட்டுச்சென்றனர். அவை இன்று சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்றால் இல்லை. சென்னையில் உள்ள பக்கிம்காம் கால்வாயும் இதற்கு ஒரு உதாரணம். (இன்று ஏரிமாவட்டம் எனப்படும் செங்கற்பட்டு பகுதியின் நிலை என்ன? ஏரிகளில் தூர்வாரப்படாமல், கல்லூரிகளும், வீடுகளும் ஆக்கிரமித்துள்ளன. ஏரிப்பகுதியில் வீடுகட்ட அனுமதித்த அரசும் குற்றவாளி தான்)

இராபின்சன் குளத்தை அடுத்து நகராட்சியால் உலகவங்கியின் உதவியில் சுமார் 25 வருடத்திற்கு முன் கட்டப்பட்ட வணிகவளாகம் உள்ளது. அதுவும் 10 ஆண்டுகளுக்கு முன் போதிய மேம்பாடு இல்லாமல் தூசிபடிந்து, பொருள் சேமிப்பு களஞ்சியங்களாக மாறிவிட்டது. அதனுடைய கீழ்தள கார்பார்க்கிங் பகுதியில் உள்ள தூண்களில் சிலர் மாடுகளைக் கட்டப்பயன்படுத்துவார்கள்.பிறகு சீட்டு ஆட்டம், விபச்சாரம் புழங்கும் பகுதியாக மாறி, இப்போது முற்றிலும் இடிக்கப்பட்டுவிட்டது. இன்று இப்பகுதி குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஊருடைய அசிங்கத்துக்கு மொத்த குத்தகையாக விளங்குகிறது.
என்னத்த பேசி, என்ன செய்யறது எங்க ஊரு ரொம்பத்தான் மாறிப்போச்சு!!

Monday, June 18, 2007

பாசக்கார குடும்பம் இணைந்து மிரட்டும் – பாசக்கார 'முதல்வன'் ரீமேக்

வெண்ணெய் டிவிக்கான டாக்குமெண்டரி எடுக்க நகராட்சில நாய் புடிக்கிரது எப்படினு நிருபர் குட்டிபிசாசு படம் எடுத்து படம் காட்டிட்டு இருக்குது. அப்ப குட்டிபிசாசு செல்போன்ல ஒரு எஸ்.எம்.எஸ். மெசேஜ் வருது. என்னனு பார்த்தா உலக பிரபலமான (தினமணில மட்டும் இல்ல? பி.பி.சி. கூட சொன்னாங்க! பார்க்கலயா நீங்க! பார்க்கட்டி நீங்க வேஸ்ட்!) பாசக்கார குடும்பத்த பத்தி டாக்குமெண்டரி எடுக்க சொல்லி வெண்ணெய் டிவில இருந்து மெசேஜ். குட்டிபிசாசு உடனே தமிழ்மணத்தில போய் பார்க்குது. சொதப்பினது யாருனு கண்மணி அக்கா போட்ட பதிவின் கும்மில கண்மணி அக்கா தான் சொதப்பினதுனும், அதுமட்டுமில்லாமல் தருமியிடம் கையூட்டு வாங்கிட்டாங்கனு யாரோ (பழனியாண்டவன் மொட்டை மேல சத்தியமா நான் கும்மியடிக்கல) அடிச்ச கும்மியால பா.கு. உறுப்பினர் மத்தியில் குடுமிப்பிடி சண்டை.

பா.கு. தீவிர உறுப்பினர் உடன்பிறப்பு மைபிரண்ட் ஹேய்! என்னை மீறி கும்மி அடிச்சிடுவிங்களா! அடிச்சி பாருங்க! தமிழ்மணமே ஸ்தம்பிச்சிடும்! ஜாக்கிரதை

பொருளாளர் அய்யனார் இதும்மா தங்கச்சி! இதெல்லாம்....”

கவிதாயினி (போதுமா!) காயத்ரி இந்த டி.ஆர் செண்டி எல்லாம் இங்க வேண்டாம்! கும்மியடிச்ச குரங்கு யாருனு தெரியனும்! கண்மணி அக்காவ திட்டின கம்மினாட்டி யாருனு தெரியனும்!

மகளிரணி சிங்கம் மங்கை மின்னல் கும்மியடிக்கிறத நிறுத்து, தமிழ்மணமே கும்மியில்லாம கிடக்கட்டும்!

கொ.ப.செ.மின்னுதுமின்னல் கும்மி இல்லாம தமிழ்மணமே கஷ்டப்பட, பா.கு. தலைவர் மட்டும் இதெல்லாம் கண்டும்காணம ஊர்ல போய் எஞ்ஞாய் பண்ணிட்டு இருக்கிறத கேள்விபட்டு குட்டிபிசாசு அவர பேட்டி எடுக்க போகுது.

இடம்: வெண்ணெய் டிவி ஆபிஸ்

இம்சைகள்: குட்டிபிசாசு, அபிஅப்பா (முதல்வன் ரகுவரன் போல பேசுனும்)

கு.பி: ஐயா! நமீதாவையும் உங்களயும் வச்சி தமிழ்மணத்துல கிசுகிசுக்கிறாங்கலே உண்மையா?

அ.அ: நாலு பேரு நாலு விதமாதான் சொல்லுவான்

கு.பி: நாலு பேரு கேட்கல நான் சும்மா கேட்டேன்! அப்ப தானே பேட்டி ஒரு கிலுகிலுப்பா இருக்கும்

அ. அ.: டேய்! கேட்க வந்தத முடிட்டு ஒழுங்கா கேளு! கண்டத கேட்டு குடும்பத்துல குண்டு போட்ட கொன்னுபுடுவேன்!

கு.பி.: சரிங்க ஐயா! பா.கு.வோட உட்கட்சி பூசல் காரணமாக தமிழ்மணத்தில் கும்மியடிக்க ஆள் இல்லயாமே!


அ.அ.: யார் சொன்னது! ஆதாரம் இல்லாம பேசாதிங்க!

(இது ரஜினி தான்! சத்தியமா அபிஅப்பாசாமி இல்ல)

கு.பி.: பா.கு.வோட மூத்த பதிவாளர் மற்றும் ஆலோசகர் தருமி ஐயாவோட சமீபத்திய இடுகையில 7 கும்மிதான் இருக்கு! கொ.ப.செ. குட்டிபிசாசுவோட நேத்து போட்ட இடுகை இன்னும் படிக்க ஆளில்லாமல் ஈயடிக்குது.

அ.அ.: கண்மணி அக்காவோட பதிவுல 40 கும்மி வந்து இருக்கு உங்களுக்கு தெரியுமா?

கு.பி.: அவங்க சொந்த காசுல வாடகைவீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கிரது எல்லாருக்கும் தெரியுமே (உண்மைய சொன்னதுக்கு அக்கா மன்னிக்கவும்!)

அ.அ.: பா.கு. உறுப்பினர்கள் போன வாரம் 3 இடுகை போட்டு இருக்காங்க!

கு.பி.: வ..வா.ச. போன வாரம் 10 இடுகை போட்டு இருக்காங்க! அதுமட்டும் இல்லாம நீங்களே! யாவாரம் படுத்துகிச்சி சாமியாரா போகப்போறேனு ஒரு இடுகை போட்டீங்க!

அ.அ.: அது எவனோ என்னோட பேருல போட்ட போலி இடுகை!

அ.அ.: தம்பி! நான் 30 வருஷமா இணையத்துல கடலை போட்டவன், சும்மா கேள்வி கேட்கணும்னு எதையும் கேட்காதிங்க!

கு.பி.: ஐயா! தமிழ்மணப்பதிவாளர்கள் எல்லாரும் நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்காங்க! பதில் சொல்லுங்க!

அ.அ.: தம்பி! நீ ஒருநாள் பதிவு எழுதிபாரு, அப்ப தான் இந்த பதவியோட கஷ்டம் உனக்கு புரியும்!

என்ன யோசிக்கிற! இதை தான் “பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மத்தவர் பதிவு எழுதியே சாவார்்”னு ‘லொள்ளு’வர் சொல்லி இருக்கார். இப்ப புரியுதா! சொல்லுரது சுலபம்!

கு.பி.: ஐயா! நான் உங்க சவால ஏத்துக்கிறேன்!

(முதல்வன் மியுஸிக் ஸ்டார்ட்ஸ்!!!!!! முதல்வனே...வனே..வனே..வனே..வனே..முதல்வனே..அ ஆ இ ஈ உ ஊ ஐ ஒ ஓ...ஔ......அம்...அஹா)

***************************************************************

குட்டிபிசாசு இணையத்தில் இருக்கிற எல்லாத்தையும் காப்பி & பேஸ்ட் செய்து இடுகையா போட, மின்னல் கையூட்டு வாங்கிட்டு பல்வேறு பேருல கும்மியடிக்க தமிழ்மணத்தில் அண்மையில் கும்மியடிக்கப்பட்ட இடுகை முழுக்க குட்டிபிசாசுவே ஆக்கிரமிக்க.

(முதல்வன் மியுஸிக் ஸ்டார்ட்ஸ்!!!!!! முதல்வனே.... வனே..வனே.. வனே.. வனே.. வனே. முதல்வனே....அ ஆ இ ஈ உ ஊ ஐ ஒ ஓ...ஔ......அம்...அஹா)

***************************************************************

குட்டிபிசாசு: சுண்ணாம்பு சட்டிதலை மாமா!!

விஜயகுமார்: என்னோட பொண்ண பதிவு போடுர உனக்கெல்லாம் கட்டிகுடுக்க முடியாது! மின்னல் போல பின்னூட்டம் போடுரவனுக்கு தான் கட்டிகுடிப்பேன்!

குட்டிபிசாசு: என்னால பதிவ காப்பி & பேஸ்ட் தான் பண்ண முடியும்! மின்னல் போல கும்மியடிக்க முயற்சி செய்தா கும்மி அடிச்சிஅடிச்சி குஷ்டம் தான் வரும்!கிழவி மாதிரி இருக்கிற மனிஷாவ கட்டிகிறதுக்கு பதிலா, ஒரு கிழவியவே கட்டிக்கலாம்! நான் ராணி எலிசெபெத்த ட்ரை பண்ணுரேன்! வர்டாய்யா என் டுபுக்கு!

Sunday, June 17, 2007

அடிப்படைக் கல்வி - சிறார் தொழிலாளர்கள்

அடிப்படைக்கல்வியும் சிறார்தொழிலாளர்களும் இணைந்த பிரச்சனைகள்!

சமீபத்தில் தமிழ்நாடு சென்றபோது, பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருந்தது. என்னுடைய அண்ணியின் உறவுக்கார சிறுவனொருவன் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் தான் படிக்கிறான். அடிக்கடி எங்கள் வீட்டிற்கும் வருவான். ஆனால் பள்ளி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் அச்சிறுவன் வரவேயில்லை. நான் என் அண்ணியை இதுபற்றி கேட்டபோது, பத்தாம் வகுப்பு படிக்க வைக்க முடியாமல் அச்சிறுவனுடைய தந்தை அவனுடைய படிப்பை நிறுத்தப்போவதாக உள்ளார் என்று கேள்விபட்டேன், நான் சிறுவனுடைய தந்தையிடம் இதுபற்றி பேசினேன்.

அவர் ஒரு நெசவுத்தொழிலாளி.ஒரு நெசவாளியின் மாதவருமானம் 2000 ரூபாய்தான் இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் உழைத்தால் 3000 வரை கிடைக்கும். இதுதான் இவர்கள் வாழ்க்கைத்தரம். ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் என் போன்றவனுக்கு இது செறிக்க முடியாத விஷயம் தான். சிறுவன் அரசு உதவிப் பள்ளியில் படிப்பதால் 350 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள் என்றும், அப்படியே கட்டணம் செலுத்தினாலும் பாடம் எழுத நோட்டுபுத்தகம், பள்ளிச்சீருடை என 500 ரூபாய் வரை ஆகுமென்றும் அவர் கூறினார். மேலும் சிறுவனை இயந்திர நெசவுத்தறியை இயக்கும் வேலைக்கு அனுப்பப்போவதாக கூறினார். அவர் வருத்தம் எனக்கு புரிந்தது.

சிறுவன் மேலும் படிக்க நான் செலவு செய்யத்தயார் என்று கூறிவிட்டு, நோட்டுப்புத்தகமும் பள்ளிச்சீருடையும் வாங்கிக்கொடுத்துவிட்டு வந்தேன்.இந்த உதவியை நம்மால் எல்லாருக்கும் செய்ய இயலாது தான். நான் கூறுவதைக்கேட்டால் இலவசகல்வி இன்னும் நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகம் நிச்சயம் எழும். அரசுப்பள்ளியில் உள்ளது என்று சொல்பவர்கள், தரமான கல்வி எல்லாருக்கும் வழங்க இயலுமா? படிக்க இடம் கிடைக்காமல் தான் அச்சிறுவன் அரசு உதவிப்பள்ளியில் சேரும் நிலை.

எங்கள் ஊர்ப்பகுதியில் தீப்பெட்டித்தொழில், பீடித்தொழில், நெசவுத்தொழில்,தோல் தொழிற்சாலை அதிகம் உண்டு. இவற்றில் பல சிறுவர்கள் வேலைக்குப் போவதைப் பார்த்து இருக்கிறேன். பெரும்பாலும் சுமார் 8-12 வயது சிறுவர்கள் தான். இந்த மனக்குமுறல் எங்கு சென்றாலும் அகலுவதில்லை. இந்தியாவின் ஒரு உயர்தர தொழிற்நுட்ப கல்விநிலையத்தில் அமைந்துள்ள உணவகத்தில் சிறார்கள் வேலை செய்வதைப்பார்த்தபோது நொந்து போய்விட்டேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு நாடு முன்னேற்றம் குதிரைப் பாய்ச்சலில் உள்ளதாக சொற்பொழிவாற்றும் கோயபல்ஸ்களை செருப்பால் அடிக்கத் தோன்றும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.உலகத்திலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் 5-14 வயதுடைய 44 மில்லியன் சிறார் தொழிலாளர்களாக உள்ளதாக உலக தொழிலாளர் அமைப்பு கணக்கிட்டுள்ளது.குறைந்த செலவில் பெரிய லாபம் பார்க்க விரும்பும் முதலாளிகள் சிறார்களை தொழிலுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசாங்கம் அடிப்படைக் கல்வியும் அளிக்காமல், சம்பிரதாயச் சட்டங்களைச் சுழற்றி மக்களையே பதம்பார்க்கிறது.

நாளைய தலைமுறைக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், வெறும் பேச்சளவில் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. இந்தியாவின் 20% GNP குழந்தை தொழிலாளர்களால் என்பது மறுக்க முடியாத வெட்கப்பட வேண்டிய உண்மை. பெரும் தொழிற்வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தான் சிறார் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.தொழிற்புரட்சி தான் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக்காரணம் என காரல் மார்க்ஸ் கூறியது ஞாபகம் வருகிறது. இதற்காக தொழிற்சாலை வேண்டாம் என்று கூறவில்லை. சிறார்தொழிலாளர்கள் தனிப்பட்ட பிரச்சனையல்ல! மக்கள்தொகை, அடிப்படை கல்வியின்மை, வெத்துவேட்டு தீர்வுகள், செத்தபாம்பு சட்டங்கள், முதலாளியத்துவத்திற்குச் சார்பான பொருளாதாரக் கொள்கைகள் என பல்வேறு கலவையான பின்னிப்பிணைந்த அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது. இதன் தீர்வு எளிதானது! முன்னிற்கும் செயல்பாடுகள் கடினமானது. ஆனால் செயல்படுத்தாமல் விட்டால் நாளை மலரும் முல்லைகளைக் கிள்ளியெறியும் என்பது திண்ணம்!

நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து!!

ஒருத்தன் படிச்சத மறக்கலாம், ஆனா குடிச்சத மறக்க முடியுமா?

அதுக்குதான் இந்த இடுகை!


தண்ணியடிக்கிறது கூட ஒரு கலை தான். இதை நல்ல ஒரு குடிமகன் கண்டிப்பாக ஒத்துக்குவான். என்ன சரக்கு, எந்த காலத்துல, என்ன மிக்சிங்கோட, என்ன சைட்டிஷோட, எந்த நண்பனோட, யாரோட காசுல, எங்க அடிக்கணும்னு இந்த பட்டியல் நீளும்.நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது தான் இந்த பழக்கமெல்லாம் இருந்தது. இப்ப இல்ல! (உண்மையா! திருப்பதி லட்டு சத்தியமா! திருனெல்வேலி அல்வா சத்தியமா! இப்ப அடிக்கிறது இல்ல அன்பு மிக்கவரின் வேண்டுகோளுக்கினங்க விட்டுட்டேன்). ஆனா அந்த அனுபவம் ஒரு கல்வெட்டு மாதிரி.நாங்கெல்லாம் அப்ப இந்த சொல்லொன்னாகலையில் கிங். நானும் என்னோட அறைதோழன் சின்னாவும் தான் அடிப்போம்.அப்ப பீர் 60 ரூபாய். விஸ்கி பிபி கோல்ட் (இது என்னோட உள்ளங்கவர்ந்த பிராண்ட்) 80 ரூபாய் இருந்தது. பெரும்பாலும் ரம் தான், ஏனென்றால் அது புல் 120 ரூபாய் தான். இரவு 7 மணிக்கு மேல தான் சரக்கு வாங்குவோம். எங்களுக்கு தெரிஞ்ச ஒரு மிலிட்டரி மாமா, அவரிடம் தான் வாங்குரது.அவர் தேசத்துக்கு சேவை செய்தாரோ இல்லயோ எங்களுக்கு செய்தார். எங்க வார்டன்க்கு நாங்க வச்ச பேரு ஸ்கெலிட்டன் (ஆள் சும்மா கம்பிகட்டு கணக்கா இருப்பாருஅதனாலதான்). பாட்டீல் எந்த படுபாவியாவது பார்த்தால், வார்டனிடம் போட்டுகொடுத்துவிடுவான். அதனால அதை உடனே பக்கெட் போட்டு மூடி வச்சிடுவோம். ஹாஸ்டல் மெஸ் சாப்பாடு கொண்டு வந்து ரூம்ல கரெக்டா வச்சிப்போம். 10 மணி ஆன பிறகு கொஞ்சம் ஆள்நடமாட்டம் குறையும், அப்பதான் அரங்கேற்றம் வச்சிப்போம்.

எங்க அரங்கேற்றம் பத்தி ஒரு விளக்கம்:

தேவையான பொருட்கள்:

1. பக்கெட்(Bucket)

2. 2 கிளாஸ் (குடிக்கும் நபர்களைப்பொருத்து)

3. சரியான அளவு சோடா (அ) தண்ணீர் (பெப்ஸி, கோக், ஸ்ப்ரைட் வசதியகேற்றபடி)

4. 5 (அ) 6 ஊதுபத்தி (இல்லாட்டி அக்கம்பக்கம் இருக்கிரவணுங்க மோப்பம் பிடிச்சி வந்து ஒரு கிளாஸ் ஊத்த சொல்லுவான். பிறகு முதலுக்கே மோசமாகிடும்)

5. சைட்டிஷ் (இதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது! நாங்க ஊறுகாய் விரும்பிகள்)

செய்முறை:

பாட்டீல் திறந்து பக்கெட்ல ஊத்தனும். பிறகு சரியான அளவு சோடா (அ) தன்ணீர் விட்டு கலக்கவும். குடிக்க சரக்கு தயார்.தயாரான சரக்கை பக்கெட்ல இருந்து கிளாஸ்ல மொண்டு குடிக்க வேண்டியதுதான். அப்ப அப்ப ஊறுகாய கொஞ்சம் சுவைக்கனும், இல்லாட்டி கிளப்பிக்கும் அப்புறம் மட்டம் ஆகுவிங்க (அ) ஆம்லேட் தான். எலுமிச்ச ஊறுகாய் இந்த விஷயங்களுக்கு உகந்தது. இப்படியே தொடர்ந்தால் நீங்க வெகுவிரைவில் சிறந்த குடிமகனாக வாய்ப்பிருக்கிறது.

இது எங்க ரம் அடிக்கிற ஸ்டைல்!!

எப்பவும் சனிக்கிழமை தான் அடிப்போம்,அப்பதான் மறுநாள் நல்லா தூங்கலாம். நாங்க குடிச்சி முடிச்ச பிறகு, உடனே தூங்க மாட்டோம். வாட்ச்மேன தாஜா பண்ணி வெளிய மேய போய்டுவோம். நல்லா சுத்திட்டு லேட்டா வந்து மெலந்துப்போம்.பிறந்தநாள் பார்ட்டில அலப்பர தாங்காது குடிச்சா பாட்டு தான், குத்தாட்டம் தான். பட்டய கிளப்புவோம்.

ஆனா இப்ப பாருங்க எல்லாம் மல ரும் நினைவுகள் ஆகிப்போச்சு!

Saturday, June 16, 2007

காற்று மாசுபடுதல பயிர்சாகுபடியைக் குறைக்குமா?

ஆம்! குறைக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சிக்குழு.

மாசுபடுதல் தெற்காசியாவின் நெல்சாகுபடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஆராய்ச்சி குழுவொன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபடுதலில் பெட்ரோலிய எரிபொருள்களால் உண்டாகும் வாயுக்களே முக்கிய காரணியாக அமைகிறது. 1980 முதல் இந்தியாவில் முக்கிய உணவுப்பொருட்களின் சாகுபடி குறைந்து வருகிறது. உலகில் இதுபோன்ற பிரச்சனையால் தெற்காசியாவும் அதிகம் பாதிப்படையவுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வானத்தை ஆக்கிரமிக்கும் மாசுப்பொருள்களான பசுமையில்ல வாயுக்கள், சிறுதுகள்கள் மற்றும் புகை பெட்ரொலிய பொருட்கள் எரிவதால் பெரும்பாலும் உண்டாகின்றன. இவை சூரிய கதிர்கள் பூமியடைவதையும் வெகுவாக தடுக்கின்றன மழைபெய்தலையும் குறைக்கின்றன.


தற்போது, வரலாற்று நெல்சாகுபடி தகவல்கள் மற்றும் காலனிலை அமைப்பின் மூலம் நெல்சாகுபடி குறைவில் மாசுபடுதலின் பெரும்பங்கை தெளிவாக ஆராயப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. வானிலுள்ள
பழுப்பு மேகம்எனப்படும் மாசுமண்டலம் 1985 முதல் 1998 வரை இல்லாதிருந்தால், நெல்சாகுபடி 11%-ஆக உயர வாய்ப்பிருப்பதாக கலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆரய்ச்சியாளர் கூறியுள்ளார். மேலும் அவ்வறிக்கையில், இத்தகைய மாசுமண்டலம் குறைவதால் நெல்சாகுபடி அதிகரிக்கும் என மேலும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, க்ளோபல் வார்மிங் மற்றும் காற்று மாசுபடுதல் வெறும் ஒரு தனிநாட்டிற்கானதல்ல, உலகிற்கானது. அடுத்ததாக இவ்வாராய்ச்சிக்குழு சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆய்வை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மீது படர்ந்துள்ள பழுப்புமேகத்தின் நாசா செயற்கைக்கோள் படம

Friday, June 15, 2007

மலர்ச்சி

முத்தங்கள் முட்டி

பனிமுட்டை பதிந்த

மொட்டுக்கள் மலர

நுகர் மணத்தில்

உள்ளம் உலர

வெளிர் இதழ்கள்

சிவந்தன வெட்கத்தால்!

மனித சிலந்தி


பாலாறு பாயும்பூமி

முனி எங்க சாமி!

தறியோடும் சத்தம்

நூலோடு யுத்தம்

கருக்குழி பிறந்து

கால்குழி இறங்கி

சாயக்கரை சதையோடு

கரையில்லா பாலை

படுகள வாழ்க்கை

மனித சிலந்திக்கு!!

பொன்ஸ் அக்கா - அலெக்ஸாண்டர் - மறுவெளியீடு

என்னுடைய முந்தைய பதிவில்் பொன்ஸ் அக்கா சொன்ன அறிவுரை!!!

//
பிசாசு,

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இந்தப் போருக்குப் பின்னால போரஸ் தன்னோட மகளையோ தங்கையையோ அலெக்ஸாண்டிருக்குக் கட்டி வைப்பாருன்னு நினைவு.. இத வச்சி உங்க தமிழைய்யா ரீமிக்ஸ் பண்ண முயன்றிருப்பாரு..

//

நம்ம திரையுலக வல்லுனர்களிடம் கிடைத்தால் எப்படி சின்னாபின்மாகி இருக்கும்! வாங்க தைரியமா பார்ப்போம்!!

(1) பி.வாசு டைரக்ஷன்-ல பாசமலர் இரண்டாம் பாகம் வெளிவருகிறது, அதுல பாசத்தை புழியமாதிரி ஒரு சீன் வச்சி இருக்காரு! தாய்க்குலம் எல்லாம் கன்ணுல தண்ணீ வச்சிக்கும். அப்படி ஒரு சீன்! நம்ம நடிகர்திலகம் தான் போரஸாக நடிச்சி இருக்கணும். அவரு இல்லாததுனால இளைய திலகம் பிரபு நடிக்கிறார். அலெக்ஸாண்டராக ‘தமிழக பெருச்சாளி’ சாரி! ‘தமிழக புரூஸ்லீ’ தனுஷ் நடிக்கிறார். (ஒரேஒரு ப்ராப்ளம் அடிக்கடி ஹெல்மெட் இறங்கி கண்ணை மூடிக்குதாம்.வேறவழியில்ல இப்ப தான் ஹெல்மெட் கட்டாயமாச்சே!!) நாயகி எதோ மும்பை நடிகையாம்.

(தாய்க்குலம் கண்ணீர் வச்சிக்கும் காட்சி)

போரஸ்: அலெகஸ்.. என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்! அதுல ஆனந்தகண்ணீர் தான் வரணும்!

அலெக்ஸாண்டர்: மாமா! ஆனந்தகண்ணீர்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க!!

போரஸ்: எதுடா பெரிய வார்த்தை! ஆனந்தகண்ணீர் தம்மாதூண்டு வார்த்தை.

(வரலாற்றுக்காட்சிகள்)

வரலாற்றுக்காட்சிகள் நிச்சயம் இருக்கணும்னு சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

கல்யாணத்தில் ஓரமாக நின்று செலுகஸ்(அலெக்சாண்டரின் தளபதி) மொய் வசூலிக்க, சாண க்கியர் மொய்ப்பணம் 101 பொற்காசு!னு சாணக்கியர் க்யூவில் நிற்க, சந்திரகுப்தன் பந்தில உட்காந்து வடை பாயசத்தோட சாப்பிட்டு கைய நக்கிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த போரஸான பிரபு என்ன கொடுமை அலெக்ஸ் இது! மொய்யே எழுதாமே இந்த கட்டு கட்டுரான் என்கிறார்.

ஜீலம் கரையோரமா ஒரு குத்துப்பாட்டு வேற இருக்காம். போர்ல செத்துட்டது தன்னோட ஆட்கள்னு தெரியாம தனுஷ் சாவுக்கு ஆடுற ஆட்டம் கண்டிப்பாக ஹிட் ஆகுமாம்.

(2) விஜய டி. ராஜேந்தர் தங்கைக்கோர்கீதம்-இரண்டாம் பாகம் அஷ்டாவதானியாக டைரக்ஷன்,நடிப்பு(அடப்பாவி நடிப்பா?),இசை,ஒளிப்பதிவு,கலை,பாடல்கள்,வசனம்,திரைக்கதை அவரே!

(டிஆர் பிராண்ட் வசன்ங்கள்)

கத்திப்பேசதடா! பேசினா என் கத்தி தான் பேசும்டா!!

டேய்! அலெக்ஸு ரிலாக்ஸு இல்லாட்டி நீ க்ளோஸு பிறகு கேட்காத ப்லீஸு

யே டண்டணக்கா டணக்குணக்கா!!!

(ஒரு உருக்கமான சீன்)

டிஆர்: இதும்மாதங்கச்சி! ஒரு ஆம்பிள வாழ்க்கையில வழுக்கினால், சமையல்கட்டுல பூனை வழுக்கின மாதிரி, ஆனா ஒரு பொண்ணு வாழ்க்கையில வழுக்கினா போர்க்களத்தில யானை வழுக்கின மாதிரிம்மா…!!

இந்த கேடயத்தையும் கத்தியையும் எடைக்கு போட்டாவது, இந்த அண்ணன் உன்னோட கல்யாணத்த நடத்திவைப்பாம்மா!!

(3) சும்மா இருப்பாரா நம்ம எஸ்.ஜே.சூர்யா, candom -னு ஒரு படத்தை ரீலீஸ் பண்ணிட்டாரு!! என்ன அது அசிங்கமா காண்டம்னு கேட்டா! அது யுத்த காண்டம் சொல்லுராரு

அலெக்ஸாண்டர் தளபதியோட ஓரினசேர்க்கைல ஈடுபடுறபோல ஏகப்பட்ட கசமுசா சீனாம். இதைப்பார்த்து சென்ஸார் கத்திரிப்பாய்ச்ச, எடுத்த எல்லாம் கட்டாகி மிச்சசொச்ச பில்ம் எல்லாம் தீப்பெட்டில போட்டு குடுத்துடாங்கலாம். டென்சனான எஸ்ஜே அந்த தீப்பெட்டியால அதிகாரி மண்டைய உடைச்ச கேஸ் இன்னும் நடக்குது.

(4) மணிரத்னம் இருவர்- இரண்டாம் பாகம் எடுத்து முடிச்சிட்டார். அதுல வர 5 நிமிட போர்க்கள காட்சி ரொம்பவே பேசப்படுமாம். ஜோ-னு(சிம்ரன், த்ரிஷா-னு எல்லாம் மழை பெய்யாது) மழை பெய்யுது. இந்த பக்கம் போரஸ், அந்தபக்கம் அலெக்ஸாண்டர். மாத்திமாத்தி காட்டுராங்க! ரெண்டு பேரும் கொட்டுர மழைல பேசிக்கிறாங்க,

போரஸ்: எதுக்கு இந்த போர்!

அலெக்ஸ்: வேண்டாமா!

போரஸ்: ஆமா!!

அலெக்ஸ்: ஏன்!!

போரஸ்: நிறுத்துங்க! எல்லாத்தையும் நிறுத்துங்க!!

அலெக்ஸ்: சரி!

செலுகஸ்: யோவ்! ஒன்னுமே புரியலயா! நீங்க முதல்ல பேசுரத நிறுத்துங்கய்யா!!

(சிறப்புக்காட்சி)

அலெக்ஸாண்டர்: (போரஸ் படையைப் பார்த்து...) ஐயரே! அது என்னய்யா! கருப்பா ஒசரமா எருமைமாடு மாதிரி!

ஐயர்:அது யானை!

அலெக்ஸாண்டர்: ம்ம்ம்யானை எவ்வளவு இருக்கும்

ஐயர்: சுமார்! ஒரு 1000 பொன் இருக்கும்

அலெக்ஸாண்டர்: 10 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 10 யானை!!!!சுமார் 10000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: 1 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 1 யானை! 1000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: யானை வாயில இருக்கே! அது என்ன?

ஐயர்: கரும்பு!!

அலெக்ஸ்: அது எவ்வளவு ஆகும்!!

ஐயர்: 1 கரும்பு ! சுமார் 1/2 பொன் ஆகும்.

அலெக்ஸாண்டர்: ஆகட்டும் எவ்வளவுனா ஆகட்டும்!! வாங்குரோம்! 10 கரும்பு வாங்குரோம்! வாங்கி ஜூஸ் போட்டு குடிக்கிறோம்! அது கிரேக்கருக்கு மட்டும் தான்! வேற எவனுக்கும் இல்ல!

பின்னணி இசை ஓவென்று சத்தமெழ பாடல்

Greece சீமையிலே

Horse ஓட்டும் வீதியிலே

Force-ஆக வந்தவனே

போரஸை அடிப்பாயோ!

போரஸை அடிப்பாயோ!

பி.கு.: உப்புமா கிண்டினது போதும் போடனு எங்க கண்மணி அக்கா திட்டுர மாதிரி இருக்கு! இதுக்கு மேல போனால் எங்க பாசக்கார மகளிரணி பட்டைய கிளப்பிடும்! வரட்டா!!!

எங்க வாத்தியார் சொன்ன வரலாறு

என்னுடைய பள்ளிபருவத்தில், தன்னுடைய சொற்பொழிவைப் பற்றி தானே பெருமையாக சொல்லிக் கொள்ள(கொல்ல) கூடிய ஒருவர் எனக்கு தமிழாசிரியராக இருந்தார். அவர் ஒருநாள் எங்கள் வகுப்பில் தன்னுடைய மகாபாரத சொற்பொழிவை கேட்க பலர் வருவதாகவும், தான் வருணிப்பதைக் கண்டு அனைவரும் மெய்மறப்பதாகவும் நாங்களும் அதை கண்டு களிக்க வேண்டும் என்று கூறினார். அன்று மாலை என்னுடைய நண்பன் ஒருவன் என்னுடைய வீட்டிற்கு வந்து “டேய்! நம்ம தமிழ் வாத்தி கோவிலில் சொற்பொழிவு ஆத்துராரு! போலாம்டா... நமக்கும் டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும். அவருக்கும் சோப்பு போட்ட மாதிரியும் இருக்கும்” என்று சொன்னான். நானும் சரியென்று அவனுடன் கிள்ம்பினேன்.

அங்கு சொற்பொழிவில் கேட்க ஆளில்லாமல் ஈ அடித்துக்கொண்டு இருந்தது. ஐந்தாறு வயதானவர்களும் நாலைந்து வாண்டுகளையும் தவிர யாரும் இல்லை. அன்று எங்கள் தமிழ் ஆசான் வாலிவதைப் படலத்தை வருணித்து எல்லோரையும் வதைத்துக்கொண்டு இருந்தார். கோவிலில் சுண்டல் வாங்கிய களைப்பு தீர நாங்களும் சற்று அமர்ந்தோம். சற்றுநேரம் கழித்து வாலிவதைப் படலத்தோடு தொடர்பு படுத்தி தனக்குத் தெரிந்த அலெக்ஸாண்டர் கதையையும் அவிழ்த்துவிட்டார். வரலாறா? இல்லை தெலுங்கு மாசாலாபடமா? என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு கதை! ஆனால் இதே கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் பழைய திரைப்படம் ஒன்று உண்டு. அப்படத்தில் தாராசிங் அலெக்ஸாண்டராகவும் ப்ரித்விராஜ்கபூர் (ராஜ்கபூரின் தந்தை) போரஸாகவும் சாய்ராபானு அலெக்ஸாண்டரின் மனைவியாகவும் நடித்திருந்தார்கள். அக்கதை என்னவென்றால் அலெக்ஸாண்டருக்கும் போரஸுக்கும் போர் மூள்கிறது. போரில் போரஸின் கை ஓங்கி இருக்கும் சமயம், அலெக்ஸாண்டரின் மனைவி போரஸின் கூடாரத்திற்குச் சென்று, தன் கணவரைக் கொல்ல வேண்டாம் என்று வரம் (யோவ்! எத்தனை நாளைக்கு இப்படி ஏமாத்துவீங்க) கேட்கிறாள்.

வரம் கேட்டவளை தன்னுடைய உடன்பிறப்பாக பாவித்து, போரஸும் மறுநாள் அலெக்ஸாண்டரை கொல்லாமல் விடுகிறான். முடிவு, போரஸ் போரில் தோற்கிறான். பிறகு வருவன எல்லோருக்கும் தெரியும். போரஸ் தன்னை ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என முழங்க, அலெக்ஸாண்டரும் போரஸின் போர்வீரத்தையும் துணிச்சலையும் மெச்சி அவனுடைய தேசத்தை அவனுக்கே திருப்பி அளிக்கிறான். இவ்வாறாக அலெக்ஸாண்டர் கதையைக்கூறியபடி தமிழ் ஆசான் தன்னுடைய வதைப்படலத்தைத் தொடர்ந்தார். மறுநாள் காலை எங்களுடைய வரலாற்று ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும், தவறான வரலாற்றைக்கூறி ஒரு தமிழாசிரியர் சொற்பொழிவாற்றியதாக பொரிந்து கொண்டிருந்தார். நானும் என் நண்பனும் விஷயம் புரிந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அன்று எனக்கு எழுந்த கேள்வி இன்றும் எனக்கு உண்டு. அந்தக்கதை ஒரு வரலாற்றுப் பொய்யா? இதன் விடை ஆம்.
அலெக்ஸாண்டர் வெறும் போர்வீரன் மட்டும் அல்ல. கி.மு.333-ல் ஒரு பெரிய மேற்கு- கிழக்குலக கலாசார புரட்சிக்கு வித்திட்டவன். தன்னுடைய 33 வயதில் அறிந்த உலகில் பெரும்பாலான பகுதியை வென்றவன். அலெக்ஸாண்டரின் படை வெறும் 40000 வீரர்களைக் கொண்டிருந்தாலும், அவனுடைய போர் வியூகங்களும் கட்டுக் கோப்பான படையும் (நீளமான ஈட்டிகளையுடைய கட்டுக்கோப்பான காலாட்படை பலமான தடுப்புசக்தியை உடையது) பாரசீக மன்னன் மூன்றாம் டாரீயஸின் ஒன்றரை லட்சம் பேர் கொண்ட படையை சிதறியோடச் செய்து மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்தன.
இரண்டு வருடத்திற்கு முன் வெளிவந்த ‘அலெக்ஸாண்டர்’ எனும் ஆங்கில திரைப்படத்தில், இது குறித்த சில காட்சிகளும் உண்டு. அஃதாவது பொதுவாக மன்னன் இறந்தாலோ போரைவிட்டு ஓடினாலோ படை நெகிழ்வதையே பாரசீக படை பலவீனமாக கொண்டிருந்தது (இது போன்ற திருப்பங்களை இந்திய போர்வரலாற்றிலும் காணலாம்!). அலெக்ஸாண்டர் மற்றும் போரஸிடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326-ல் நடைபெற்ற போர் (Battle of hydaspes) அலெக்ஸாண்டருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. குறிப்பாக, அலெக்ஸாண்டர் தன் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டதற்கு முக்கிய காரணங்களாக வரலாற்றாசிரியர்கள் அடுக்குவது:
(1) நாட்டைவிட்டு வெகுகாலம் பிரிந்த படையினரது மனநிலை மற்றும் அழுத்தம், (2) சிற்றரசன் போரஸிடம் 500 யானைகள் இருந்ததைக் கண்டு மிரண்ட கிரேக்கப்படை; ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட யானைகளுள்ள படையைக்கொண்ட கங்கைச்சமவெளியில் அமைந்துள்ள நந்த பேரரசின் பாரிய படையை எதிர்கொள்ள வேண்டிய சூழல்.

ஆனால் எங்க தமிழ் வாத்தியார் சொன்ன ‘தாலி செண்டிமெண்ட்’ கதை சும்மா டுபாக்கூர்தான். இதற்கு ஒரு வரலாற்று தடயமுமோ அல்லது கணிப்போ இல்லை. வரலாறு தெரிந்தால் சொல்லுணும்! இல்லாட்டி சும்மா இருக்கணும்!

Sunday, June 03, 2007

நிறைய எழுதணுங்க!!

எங்க பாசக்கார டீம்ல: கண்மணி அக்கா போல டைமிங் காமெடி செய்து சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரமாரியாக எழுதித்தள்ளுகிறார். காயத்ரியோட கவிதைகளைப் பார்த்த பொறாமையாக இருக்கும். கருத்து மற்றும் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கும். (அவர் இயற்கை, உறவுகள் என்று எல்லையோடு நிற்க்காமல் சமூக சிந்தனைமிக்க கவிதைகளையும் எழுதவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்). மங்கை ரொம்ப நல்லா எழுதுவாங்க. ஆனா அவங்க எழுதுரது குறைவு. எங்க அபிஅப்பா எழுதினார்ன்னா நக்கல்-நையாண்டிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவர் சாமியாராக போனதில் இருந்து எழுதுரது குறைந்துவிட்டது. அய்யனார் சாதாரண விஷயத்தக்கூட அழகாக சொல்லக்கூடியவர். மொழியைப் பயன்படுத்தும் லாவகம் அலாதியானது. மைபிரண்டும் கண்மணி அக்கா போல காமெடிப் பதிவில் கில்லாடி. மின்னுதுமின்னல் பதிவ விட பின்னூட்டம் நல்லா எழுதுவார்( மின்னல் கோபிக்காதே! சும்மா தான் சொன்னேன். நீங்க எழுதுன மொக்கைகவிதை ஒன்று போதும் உங்களுடைய திறமையைக் கூற! ஆனால் தொடர்ந்து எழுதுங்க!).

எல்லாரபத்தியும் சொல்லிட்டு என்னை விட்டுடமாட்டேன். வழக்கம்போல நம்ம கமலஹாசன் பாணியில் ஒரு கவிதை, ஒரு மொக்கை, ஒரு திரைபார்வை, ஒரு ஆக்கம் என்று வரிசைபடி இடுகையிட்டு வருகிறேன். (கவிதை பற்றி சொல்லவே தேவை இல்லை. யாரும் படிக்காவிடிணும், என்னோட பதிவுக்கு த்ருஷ்டி கழிச்சதுபோல எப்போதாவது ஒன்று எழுதிவிடுவேன். ஏன்னய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை என்று கேட்டால், “நான் முடிவுபண்ணிட்டா! என் பேச்ச நா..னே.. கேக்க மாட்டேன்!” விஜய் ஸ்டைல்ல டயலாக் அடிப்பேன். எனக்கு இனிமேல கொலை வெறியோட பின்னூட்டம் போட்டு திட்டினாலும், நிறுத்துறது கஷ்டம் தான்.) பின்னவீனத்துவம்னு நான் எதுவும் தெரியாம அகலக்கால் வைக்கிறது இல்லை. சாதாரணமாக ஆக்கமான இடுகைகளை விட மொக்கைக்கு தான் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. அதிலும் என்னுடைய சில ஆக்கமான இடுகைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் போதிய பின்னூட்டம் இல்லாததால், வகையான இடுகைகளை எழுதுவதைத் தவிர்த்தேன். ஏனென்றால் பின்னூட்டம் இருந்தால்தான் இடுகை போதியநேரம் தமிழ்மணத்தில் தெரிகிறது, இல்லாவிடில் மறைந்துவிடுகிறது. இவற்றால் நொந்துபோன நான் மொக்கைபதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். எங்க பாசக்கார குடும்ப ஆலோசகர் ‘தருமி’ ஐயா சொன்னதுபோல பின்னூட்டமும், ஆக்கமும் தொடர்பில்லாத இருவேறு விஷயங்கள. அவருடைய அறிவுரைக்கு செவிசாய்த்து என்னுடைய பாதையை மறுபடியும் தொடர முடிவு செய்துவிட்டேன். இத்தகைய நிலை எனக்கு மட்டும் இல்லை, நிறைய தமிழ்மண அன்பர்களுக்கு நிகழ்ந்திருக்கும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்.அறிவுரையும் சொல்லலாம்.

எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! இதுக்கு முக்கிய காரணம் தமிழ்மண ஜாம்பவான்கள் தான். என்னோட எழுதனும் என்கிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தவர்கள். இவர்களுடைய பதிவுகள்தான் எனக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. நான் இன்னும் நிறைய படிக்கணும்...மேலும் மேலும் எழுதணும்... தங்கள் வாழ்த்துக்களுடன்...

பி.கு.:

தமிழ்மணமே! என்னோட கண்ணான பாசக்கார குடும்பத்தை உன்னிடம் ஒப்படைச்சிட்டு போரேன். அதில் ஆனந்தகண்ணீரத்தான் நான் பார்க்கனும்!! ஐயோ!!!ஊருக்குத்தான் போரேனுங்க...! ஒரேடியா போகலை..!!