Friday, October 31, 2008

மார்க்ஸ் சாதனையும் டாஸ்மாக் சாதனையும்




#1 மார்க்ஸ் சாதனை:
தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதர சிக்கலுக்குப் பிறகு மறுபடியும் மார்க்சிசம், சோசியலிஸம், கம்புனிஸம் பற்றிய பொதுவான பார்வை மாறியுள்ளது போலும். தேடல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஜெர்மனியில், கார்ல்-டைட்ஸ் வெர்லாஃக் பதிப்பகம் 1500-க்கும் மேற்பட்ட கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூலின் பிரதிகளை விற்றுள்ளது. "1867-ல் எழுதப்பட்ட மூலதனம், ஆண்டிற்கு பொதுவாக விற்பனை இரண்டு இலக்கம் தாண்டுவதே அரிதாக இருக்கும்போது, தற்போது விற்பனை அதிகரித்துள்ளது", என்று அதன் பதிப்பாளர் கூறுகிறார்.

#2 டாஸ்மாக் சாதனை:
தமிழகம் முழுவதும் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளில் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'"ல் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும் எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. எதோ திரையில் விஜயகாந்த் வசனம் பேசுவது போல, ஒரே புள்ளியல் விவரமாக தினமலரில் வந்துள்ளது. அரசுக்கு வருமானம் அதிகமானாலும், இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கீழ்தட்டு மக்கள்தான். மற்ற மாநிலங்களை விட தற்போது, தமிழகத்தில் குடிப்போர் எண்ணிக்கை பெறுமளவில் அதிகரித்துவிட்டது. குடிப்பழக்கம் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் கூட பரவாயில்லை, அப்படி இருப்பதில்லையே. இது பெருமளவில் தனிமனிதர்களின் பொருளாதாரச் சிக்கலை அதிகரிக்கும், அதன் தொடர்ச்சியாக சமுதாய சிக்கல்கள் உருவாகலாம். தெரியாமலா வள்ளுவர் கள்ளுண்மை அதிகாரத்தை, தனிமனித ஒழுக்கமாக கருதி அறத்துப்பாலில் வைக்காமல், பொருட்பாலில் வைத்தார்.
என்ன நடக்கிறது, எங்கே போகிறது தமிழகம். மக்களைப் போதையில் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த கலைஞர் என்ன கலிகுலாவா? குறளோவியம் படைத்த கலைஞருக்கு இது தெரியாதா என்ன?
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

சாட்சாத் திருமால் தான் கேபல்ஸ் (Goebbels) !



அரசியலிலும் போரிலும் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களை கேபல்ஸ் (Goebbels) என்று சொல்லுவார்கள். ரஷ்யாவில் ஜெர்மனி தர்ம அடி வாங்கும்போது கூட "நாஜிகளுக்கு மாபெரும் வெற்றி" என்று முழங்கிக் கொண்டிருந்தவர். ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் முடிவுரும் தருவாயில், கேபல்ஸ் ஹிட்லர் இறக்கும் வரை தீவிரவிசுவாசியாக இருந்து, தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இது ஒருபக்கம் இருக்க, என்னதான் கேபல்ஸ் கூறியவற்றைப் பொய்ப்பிரச்சாரம் என்று சொன்னாலும், அரசியல்ரீதியாகப் பார்ப்பின் இத்தகைய தகவல்கள் தங்களது ஊர் மக்களுக்கு ஒரு மனரீதியான திடத்தன்மையையும், எதிரிகளுக்கு ஒரு சோர்வையும் அளிக்கக் கூடியவை.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட கார்கில் யுத்தத்தின்போது இந்தியாவில் பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சிகள் தடைசெய்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம்,பாகிஸ்தான் கூறப்போகும் இந்திய இழப்பு பற்றிய புள்ளியல் விவரங்கள் இந்தியர்கள் கேட்காமல் இருக்கவே. இலங்கையில் நிகழும் ஈழப்போராட்டத்தில், இலங்கையரசு எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் "புலிகள் மீது கடும் தாக்குதல், பயிற்சித்தளம் தாக்கியழிப்பு, 50 புலிகள் பலி, 100 புலிகள் காயம்" என்றே அறிவித்து வந்துள்ளது. கருத்துக்கணிப்பு போல இதுவும் ஒரு கண்துடைப்பு விடயம் தான். இதனுடைய தாக்கமும், சமுதாயத்தில் பெறும் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. இதைப்பற்றி பேசும்போது, இந்திய இதிகாசங்களில் இருந்து ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடக்கும் போது, தேவர்கள் அமுது அருந்துவதால் இறக்கமாட்டார்கள், ஆனால் அசுரர்கள் தொடர்ந்து அழியாமல் போரிடுவார்கள். இதன் காரணம் திருமாலைக் கேட்டால், அவர் "அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், சஞ்சீவி மந்திரம் அறிந்தவர், அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்துவிடுகிறார்" என்று கூறினாராம். (பார்த்தீர்களா! ஒரு எதிர்இனத்தவரின் உண்மையான வீரத்தைக் கடவுளால் கூட ஒத்துக்கொள்ள முடியவில்லை). ஒருவேளை, தேவாசுர போர், உண்மையாக ஆரிய-திராவிட யுத்தமாக நடந்திருப்பின், திருமால் தான் "கேபல்ஸ்".

மழை என் தோழன் !!


பனி முட்டைகளாய்

முற்றத்தில் வீழ்ந்தபோது

வினைப் பின்னமில்லா

விடலைப் பருவத்திலே

முத்துக்களாய் சேகரித்தேன்!

சன்னலில் சாறலாய்

முத்தங்கள் பதித்தபோது

உடைந்த துளிகள்

உலர் உள்ளத்தை

நனைத்தது உணர்ச்சியால்!

தோட்டத்தில் தூறலாய்

பூவிதழில் பொதிந்தபோது

தழுவாத தருணங்கள்

எண்ணிய தவிப்புகளெத்தனை!

சாப்ளின் சொன்னதுபோல்

உன்னோடு உறவாடும்போது

உப்புநீர் உமிழும்

என்றும் என் கண்ணோடு!

Thursday, October 30, 2008

தமிழ்மணப் பதிவுப்பட்டை பிரச்சனை! உதவுங்கள்!

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை!! என்னுடைய பதிவில் தமிழ்மணத் திரட்டியில் சேர்க்க இயலவில்லை, தமிழ்மணப் பதிவுப்பட்டையும் தெரியவில்லை. இடுகைகளைப் புதுப்பித்தால், புதிய இடுகைகள் இல்லை என்று காட்டுகிறது. தெரிந்தவர்கள் கொஞ்சம் உதவி புரியவும். நன்றி!!

Wednesday, October 29, 2008

ஹிந்தி 'கஜினி' படத்தோட முன்னோட்டம்

ஹிந்தி கஜினி படத்தோட முன்னோட்டம் ஒரு வழியாக வெளிவந்துவிட்டது. அமீர்கானுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதமான இப்படம் தீபாவளிக்கு வராமல் போனது. இப்படம் மொத்தம் 93 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகமான விலைக்கு விற்ற இந்தியப்படம் இது தான்!! HTML clipboardவழக்கம் போல, இப்போதே படத்தைப் பற்றி ஹிந்தி சேனல்களில் ஓவரா பில்டப் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.



Wednesday, October 22, 2008

ஈழத்தொடரும் இறையாண்மை இம்சையும்

உடன்பிறப்பு தூயா ஈழம் பற்றிய தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பரிசில்காரன் தவிர யாரும் மற்றவரை அழைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, என்னுடைய சொந்தத்தைப் பற்றி எழுத எனக்கு எதற்கு அழைப்பு. ஆதலால் நானே தொடங்குகிறேன்.


1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
நான் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது என்னுடன் பள்ளியில் படித்த சில மாணவர்கள் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள். ஆனால் அப்போது அவர்கள் ஏன் தமிழகம் வந்தார்கள் என்பது பற்றிய அறிவு எனக்கு இல்லை. பிறகு நான் முதன்முதலாக தமிழருக்கெதிராக இலங்கையில் ஏற்படும் அவலத்தை என் அப்பா கூறி கேட்டு இருக்கிறேன். நூலகத்தில் தேடிப்பிடித்து ஈழம் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் படித்துள்ளேன். பிறகு ஈழம் பற்றி அதிகம் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டேன். நான் சந்தித்த ஈழத்தமிழர்கள் வெகுசிலர், என் காதலி உட்பட. இவ்வளவு தான் என்னுடைய ஈழப்பரிச்சயம்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
100%. 1980-க்கு முன்னால் அறவழியில் இருந்த போராட்டம் விடுதலை இயக்கங்களாக உருவெடுத்ததற்குக் காரணம், சிங்கள அரசின் மதவெறி, இனவெறி...! புள்ளப்பூச்சியைக் புலியாக மாற்றியது சிங்கள அரசு. அமைதியை விரும்பும் சிறுபான்மையினராக இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை இன்று சமராட வைத்தது சிங்கள அரசு. அத்தகைய அரசிடம் இணங்கி, அவர்களின் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வது சாத்தியம் இல்லாத ஒன்று. சிங்கள அரசு தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஈவிறக்கமின்றி தமிழரைக் கொன்றபோது, பிறந்த நாட்டில் உரிமையில்லாமல் உயிருக்கு பயந்து உடைமையிழந்து உலகமெங்கும் அகதிகளாக சிதறியோடிய ஈழத்தமிழர்களின் விடிவு தமிழீழம் மட்டுமே.

தமிழர் கூட்டத்தில் ஐக்கியம் மற்றும் இறையாண்மை பற்றிப் பேசுபவர்கள், தமிழீழம் என்றால் போதும், உடனே இந்தியாவைப் பாருங்கள். அது போன்றதொரு ஒருங்கிணைந்த இலங்கையில் அரசாட்சி உருவாக்கப் பாடுபடுங்கள் என்று போதிக்கத் தொடங்கிவிடுவார்கள் இந்த நவீன காந்தியடிகள். "உங்கள் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், குழந்தைகள் கொல்லப்பட்டாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு விரல் சூப்புங்கள். ஆயுத ஏந்த வேண்டாம், அறவழியில் போராடுங்கள்" என்பார்கள்.

உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் பிலஹரி மார்தாணம் டைப் கேஸுங்க இதெல்லாம். எவனாவது அடிவாங்கி செத்தால் கூட அறவழி, அகிம்சை, கர்மவினை என்று கடவுள் பெயர்கூறி மணியாட்டிக் கொண்டிருப்பார்கள். சொந்த நாட்டு மக்களை இந்தியா என்னமோ கவுரவமாக நடத்துவது போல இவர்கள் நினைப்பு. காஷ்மீரில் மக்களிடையே இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியம் பல. வடகிழக்கு மாகாணங்களில் ராணுவம் புரியும் அராஜகம் கணக்கிலடங்காது. வடகிழக்கில் நடக்கும் கற்பழிப்புக்கு அகிம்சையாளர்களின், ஐக்கியவாதிகளின் பதில் என்ன? எத்தனை பேர் செத்து மடிந்தாலும், இதே கையாலாகாத போதனை தான். ஈழத்தில் பேசித் தீர்க்க இனி என்ன இருக்கு, பேச்சு வார்த்தை இயலாமல் தானே ஆயுதப் போராட்டம் வந்தது.

(சமீபத்தில் இந்துவில் வந்த ஐக்கிய மசுரு மண்ணாங்கட்டி கட்டுரை படித்த கோபத்தில் நான் எழுதித்தொலைத்தது "இந்துல சந்துல எழுதுரவங்களுக்கு".)

New Page 1

(தனிநாடு உருவாவது பற்றி கருத்து இருந்தால் சொல்லலாம், சொல்ல இயலாவிடில் விட்டுவிடலாம். "அய்யோ! அபிஷ்ட்டு, கண்ணதுல போட்டுக்கோ! நீ தனிநாடு பத்தி பேசலாமோ? எவ்வளவு பெரிய தப்பாக்கும். பகவான் கோபிச்சினுடுவார்" அப்படினு யாரும் சொல்லாதிங்க.)


3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

பள்ளியில் படிக்கும் போது தினமும் ஈழம் பற்றிய செய்திகளைத் தேடிப்படிப்பதுண்டு, ஓயாத அலைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. கல்லூரி வந்த பிறகு, தமிழ் செய்தித்தாள் வாசிக்க இயலாமல் போனது. பிறகு, தமிழ்மணத்தில் வரும் செய்திகளைப் படிப்பதுண்டு. இதைத் தவிர்த்து புதினம், சங்கதி, பதிவு, தமிழ்நாதம் போன்றவற்றை அடிக்கடி படிப்பதுண்டு.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
நல்ல விடயம். தமிழக அரசு தற்போதைய ஆதரவை முழுமையாக செயல்படுத்தினால், தமிழீழப் போராட்டம் மேலும் வலுவடையும். மேலும், தமிழகத்திலுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை சற்றேனும் மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

நம்பிக்கை இழக்காதீர். காலம் மாறும். உள்ளுணர்வு வெல்லும். தமிழீழம் மலரும்.

"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை

நிச்சயம் உலகம் பாராட்டும்"

Tuesday, October 21, 2008

இந்துல , சந்துல எழுதுரவங்களுக்கு....

"History must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது.வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள் (மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள்.


இந்தியன் படத்தில் கவுண்டமணி சொல்லுற மாதிரி நெற்றியில் ஈறுகுச்சியில் கோடு போட்டுகிட்டு இந்துவில் எழுதுரேன், சந்துவில் எழுதுரேனு கெளம்பிடுவானுங்க சிலர். இவனுங்களுக்கு தமிழரின் வரலாறும் தெரியாது. இந்தியாவின் பூர்வீகமும் தெரியாது. எப்பயெல்லாம் தமிழீழம் வேணும் என்கிற வாதம் வலுப்படுதோ? அப்பயெல்லாம் ஒருமைப்பாடு, ஐக்கிய இந்தியா, இந்திய இறையாண்மை அதுஇது என்று சொல்லிக்கொண்டு சாமியாட வந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய வரலாறு ஒரு மண்ணும் தெரிந்திருக்காது.

இவனுங்களுக்கு ஒரு கடிதம்,

வந்தேறிகளுக்கு எதற்கு தனிநாடு என்று பேசுபவர்கள், தனிநாடு கேட்பவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துபவர்கள் என்று பேசுபவர்கள் எல்லாரும் இந்த ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். ஹிலாரி க்ளிங்டன், ஒபாமா போன்றோர்கள் கூட விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக கூற, இப்போதே இலங்கைக்கு புளியைக் கரைக்கிறது. அதனாலத்தான் பத்து நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது அவசரமாக சண்டை போடுகிறார்கள். அமெரிக்காவோட ஜால்ரா தானே நீங்க, இன்னும் திருந்தாம இருக்கிங்க.

காஷ்மீர் பிரச்சனை இரண்டு நாடு தொடர்புடையது. அதையும் இலங்கைப் பிரச்சனையும் ஒன்றுனு சொல்லி வழக்கம் போல இந்திய பாசிஸ்ட் மாறி மிரட்டுரிங்க. இலங்கை பிரச்சனையோடு ஒப்பிடலாமென்றால் இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினையை ஒப்பிடலாம். அமைதியாக பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. பிறகு தான் பிரிவினை முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பிரிவினைக்குக் காரணம் மதம். அகிம்சாமூர்த்தி M.K. காந்தி கூட பிரிவினையை ஒத்துகிட்டாரே? அவரை பின்பற்றுவதாக சொல்லிகிட்டு திரிகிற அகிம்சாவதியான நீங்க ஏன் இந்த அளப்பரைய விடுரீங்க. ஒருவேளை இன்று உங்களைப்போல ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல், இந்தியா பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும். இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. கிழக்குப் பாகிஸ்தான் பங்கலாதேஷ் என்ற தனிநாடாக பிரிந்தது. பிரித்துக் கொடுத்தது இந்தியா. இதற்குக் காரணம் வங்காள மொழி பேசிய வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் தொடுத்த அடக்குமுறை.

இப்படி நீங்க மட்டும் அல்ல! பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). கேட்டால் தேசப்பற்று என்பார்கள்? நீங்க என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, அங்கு நடக்கும் உரிமை மீரலையோ காது கொடுத்து கேட்டதுண்டா? அங்கு சென்று இந்தியர்கள் என்றாலே உதைக்கிறார்களே, இந்திய நாடு என்ன, கொடிய கூட மதிக்காம வேற கொடி வச்சிட்டு இருக்காங்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? காஷ்மீர மக்களின் துயர்களையோ அங்கு நடக்கும் கொலைகளையோ கணக்கில் கொண்டதுண்டா? இந்தியமக்கள் இந்திய ராணுவத்திடம், காவல்துறையிடம் அவதியுறுவதையே எழுதத்துணியாத நீங்கள் இலங்கையில் நிகழும் அடக்குமுறை, அவலநிலையை ஏன் கண்டுகொள்ளப் போகிறீர்கள். ஈழதமிழர்கள் செத்துமடியரத நீங்க செய்தி பொடுரது இருக்கட்டும், இந்திய மீனவர்கள் செத்தபோனத நீங்க எப்பயாவது செய்தியில போட்டு இருக்கிங்களா? பிரபாகரனை 20-30 தடவை செத்ததா செய்தி போட்டு இருக்கிங்க. சுனாமி வந்து 10000 பேர் செத்தாலும், பிரபாகரன் என்ன ஆனார் என்ற கவலை தான் உங்களுக்கு. ஏ.சி. அறை உட்கார்ந்து கொண்டு, அமெரிக்க பொருளாதாரம் எப்ப சீர்படும், அணுமின் ஒப்பந்தம் போடப்பட்டால் என்ன நன்மைகள், இந்தியா எப்ப உலகக்கோப்பை வாங்கும் என்று வழக்கம் போல எழுதப்பாருங்க.

Saturday, October 18, 2008

எதோ சினிமா கேள்வி-பதில் தொடர் போட்டியாம்!!

என்னடா! கொஞ்சம் நாளாக யாரும் தொடர்விளையாட்டு என்று கூப்பிடலயே என நினைத்தேன். முரளி புண்ணியம் கட்டிக்கிட்டாரு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதலில் பார்த்ததாக நினைவில் உள்ள படம் எம்.ஜி.ஆர் நடித்து, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான "குலேபகாவலி". அப்படத்தில் வரும் புரட்சித்தலைவர் புலியுடன் மோதும் காட்சி இன்றும் நினைவில் உள்ளது. மற்றபடி வேறெந்த காட்சிகளும் நினைவில் இல்லை. பிறகு அப்படத்தை பலமுறை பார்த்துள்ளேன். என்னுடைய தந்தை ஒரு எம்.ஜிஆர் ரசிகர். என்னுடைய சிறிய வயதில் நான் பார்த்த் பெரும்பாலான படங்கள் புரட்சித்தலைவர் நடித்தது தான்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாக அரங்கில் பார்த்த படம் 'அன்னியன்'. என்னுடைய அண்ணன் மகன் கார்த்தியுடன் பார்த்தேன். படம் முடியும் வேளையில், அம்மா ஞாபகம் வந்து கார்த்தி அழ ஆரம்பிக்க, கடைசி காட்சிகள் பார்க்கமலேயே வந்துவிட்டேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஆண்பாவம். என்னைப் பொருத்தவரை, இப்படம் இன்று வந்திருந்தால் இன்று யதார்த்தம் என்று பலரால் பாராட்டப்படும் பருத்திவீரன், சுப்ரமணியபுரம், மொழி போன்ற படங்களை தின்று ஜீரணித்திருக்கும். அழகான திரைக்கதை, அற்புதமான இசையமைப்பு, மறக்கமுடியாத நகைச்சுவை காட்சிகள்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.
உன்னால் முடியும் தம்பி. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
கன்னத்தில் முத்தமிட்டால், ரோஜா படங்களில் வரும் மொக்கையான அரசியல் சம்பவங்கள். பிரகாஷ்ராஜும், மாதவனும் நடந்தே தமிழீழப் பகுதிக்குச் செல்லும் காட்சி. அப்போது அவர்கள் உதிர்க்கும் அரைவேக்காட்டுத்தனமான கருத்து எரிச்சலூட்டுபவை. நாட்டுப்பற்றைக் காட்ட எரியும் கொடியை அணைக்கனும் அல்லது சேற்றை அள்ளி முகத்தில் பூசிக்கனுமாம். என்னங்கடா உங்க தேசபக்தி.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
இன்றைய நாளில் இந்தியாவில் திரைப்பட தொழில்நுட்பமென்றாலே அது தமிழ்சினிமா தான். உதாரணத்திற்கு, இந்தியாவிலுள்ள தற்போதைய சிறந்த ஒளிப்பதிவாளர்களைப் பட்டியலிட்டால், முதல் 7-8 இடங்கள் நமக்குத்தான். அன்று முதல் இன்று வரை, எந்த காலத்திலும் தொழில்நுட்ப விடயங்களில் தமிழ் சினிமா முன்னோடிதான். அந்த காலத்தில் கடினமாக இருந்த இரட்டை வேட படங்களை, நம்மவர்கள் வெகு சர்வ சாதாரணமாக எடுத்துத் தள்ளி இருப்பார்கள். ஓரளவு தொழில்நுட்பம் முன்னேறிய காலத்திலும், காட்சிகளில் கோணம் அதிகம் மாறாமல் static-காகவே எடுக்கப்பட்டிருந்தது. திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த படங்களில் காமேரா இங்கும் அங்குமாக வெவ்வேறு கோணங்களில் அலைபாயும். உதாரணத்திற்கு, ஊமைவிழிகள், இணைந்த கைகள் படங்களைப் பாருங்கள். இந்திக்குக் கிடைக்கும் போதியளவு பணம் நம்மிடம் இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக அசத்துவார்கள் நமது ஆட்கள். நாம் பெரும்பாலும் கோட்டை விடுவதெல்லாம் கதையில் தான்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பெல்லாம் வாசிப்பது குறைவு தான். வாரமலரோடு சரி. இப்போது இணையத்தின் உதவியில் வாசிப்பது அதிகமாகிவிட்டது.

7.தமிழ்ச்சினிமா இசை?
ஜி.ராமநாதன் முதல் இன்றைய இசையமைப்பாளர்கள் வரை அனைத்துப் பாடல்களையும் கேட்பதுண்டு. குறிப்பாக சொல்வதென்றால், இளையராஜாவின் பாடல்களே என்னை அதிகமாக கவர்ந்தவை. தமிழ்த் திரையுலகம் இளையராஜாவை இன்னும் சரிவர பயன்படுத்தவில்லை. இதுவரை அவருக்கு தீனிபோடும்படியான படங்கள் சரிவர கிடைக்கவில்லை. "ஹேராம்" பின்னணி இசையைப் கேட்டால் அவரது பரிமாணம் புரியும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய!! கணக்கில் அடங்காத அளவிற்கு. அதிகம் விரும்பிப் பார்ப்பவை இரானியப்படங்கள். காரணம், படத்தின் களம் இந்தியாவைப் போன்று இருப்பதால். சமீபத்தில் பாதித்த படம் மஜித் மஜிதி இயக்கிய இரானியப்படங்கள். "Baran" படத்தில் ஆணாக நடித்துக் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆப்கானிய இளைஞிமீது காதல் வயப்படும் இரானிய இளைஞனது கதை. அடுத்து "children of heaven"-ல், குழந்தைகளின் உலகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார் இயக்குனர். தற்போது IMDB-ல் உள்ள முதல் 300 படங்களுக்கு மேல் என் சேமிப்பில் உள்ளது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை! (எவ்வளவு சுலபமான பதில் பார்த்திங்களா?)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வழக்கம் போல தான் இருக்கும். உலகத்தரம், யதார்த்தம் என்று சால்ஜாப்பு வேலைகள் வழக்கம் போல நடைபெறும்.
ஆனால் ஒரு விடயம். இப்ப யாரும் production, direction பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. Marketing பற்றிய சிந்தனை தான் படம் எடுக்கும் போதே தொற்றிக்கொள்கிறது. இனிமேல், 10 கோடி படத்திற்கு செலவு செய்யப்பட்டால், 5 கோடி விளம்பரத்திற்காக செலவு செய்யப்படும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழனுடைய எல்லாம் பிரச்சனைக்கும் தீர்வாக இருக்குற சர்வரோக நிவாரணி சினிமா தான். அது இல்லாட்டி, இந்த தலைமுறை பைத்தியகார ஆஸ்பத்திரியில் இருக்கும். ஆனால் அடுத்த தலைமுறை கண்டிப்பாக உருப்படும்.

எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு பேரை, நீங்களே அழைச்சிட்டீங்க!! நான் எங்க போவேன் யாரை கூப்பிடுவேன். எனக்கு யாரைத் தெரியும்.
இருந்தாலும் சில பெருந்தலைகளை கூப்பிட்டு வைக்கிறேன்.

கானாபிரபா
வெட்டிபயல்
தூயா
ஆயில்யன்