Monday, February 10, 2014

உள்ளதைச் சொல்வேன் (09/02/2014)

ஜி.ராமனாதன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், தேவா, ராஜ்குமார், ரகுமான் என பலரின் பாடல்களை ரசிப்பவன் நான். இளையராஜா பாடல் என்றால் எனக்கு விருப்பம். அதற்காக எனக்கு அவருடைய இசைமீது வெறியோ பக்தியோ இல்லை. பிடிக்கும் அவ்வளவே. இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிறந்தவன் என்பதால் அவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் அவருடைய பாடல்கள் என்னுடைய சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பவை. Nostalgia. தற்போது போன வருடம்  கிங் ஆப் கிங்ஸ் என்று மலேசியாவில் நிகழ்ந்து முடிந்த இசைநிகழ்ச்சியை காண முடிந்தது. அதைபற்றி எனது சில எண்ணங்கள்.


  • கிங் ஆப் கிங்ஸ் என்றால் ஏசுவை குறிக்கும் வாக்கியம். ஒருவேளை ராஜாதிராஜா என்பதை இப்படி மொழிபெயர்த்திருப்பார்களோ? எப்படியோ போகட்டும்.  பாலு எப்படி இந்த வயதிலும் இளமை பொங்க படுகிறார் என்று தெரியவில்லை. பாலு...பாலு தான். அவர் பாடியதை மிகவும் ரசித்தேன்.…
  • ஜனனி ஜனனி பாடல் உருவான விதம் பற்றி இளையராஜா உருகிஉருகி சொல்லிக்கொண்டிருந்தார். அப்பாடல் ஒன்றும் அப்படி உருக்கமான பாடல் அன்று. ஆதிசங்கரர் இளையராஜாவின் பாடலில் வந்ததைப் பற்றி  அவர் கூறும்போது, எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. "குருவே! இன்றைக்கு பாடலை கம்போஸ் செய்கிறேன். நீங்கள் அதில் வரவேண்டும்" என்று சொல்லிவிட்டு போனதாகவும், சங்கரரே பாடலில் வந்து அருள் புரிந்ததாக சொல்லி இருந்தார். இதைக்கேட்டு எனக்கு அப்படியே  புல் பூண்டு எல்லாம் அரித்துவிட்டது!
  • …ஒருவேளை நேத்துராத்திரி எம்மா பாடல் எப்படி உருவானது என்று கேட்டிருந்தால், இளையராஜா எப்படி பதில் சொல்லி இருப்பார்!!!!!!!!!!!…
    …நான் பாட்டு கம்போசிங்கிற்கு போயிட்டு இருந்தேன். போகிறவழியில் சில்க்கோட சினிமா போஸ்டரை தற்செயலாய் பார்த்தேன். "சில்க் நீ இன்னைக்கு என்னோட பாட்டுல வர" என்று சொல்லிவிட்டு போய்விட்டேன். பாட்டு கம்போஸிங்க் முடிச்சி பார்க்கிறேன். எல்லாருடைய கண்ணிலும்  (நோட் திஸ் பாய்ண்ட்) தண்ணி வந்துவிட்டது. கம்போசிங் முடித்துவிட்டு ஆர்மோனியத்தை வைக்கப்போனேன். சட்டென்று ஒரு பட்டுத்துணி என்மீது விழுந்தது. பட்டு என்றால் என்ன ? சில்க். சில்கினுடைய அருள். சில்க் என்னுடைய பாட்டில் வந்து, பாட்டை வேறொரு தளத்திற்கு கொண்டுபோய்விட்டதை எண்ணி எனக்கும் கண்ணில் தண்ணி வந்துவிட்டது. 
  • இளையராஜாவுடைய எவ்வளவோ நல்ல பாடல்கள் இருக்கும்போது, நிலா காயுது பாடலும் பாடப்பட்டது. இதுபோன்ற ஒரு கேவலம் எந்த மொழிக்கும் கிடைக்காது. இப்பாடலை பொதுவில் வயதுக்கு வராத பசங்களோட கேட்டு ரசிக்கும் நம்ம சமூகம் ஒரு புரட்சிகரமான சமூகம். வெட்கக்கேடு. இளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பெரியவர்களுக்கு மட்டும் விளங்கும்படி இலைமறைவு காய்மறைவாக பாடல்களை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படையாக விருந்து படைத்த பெருமை இளையராஜாவையே சேரும். அவருக்கு பின்னாடி வந்தவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிரித்து மேய்ந்துவிட்டார்கள். கருமம். எப்படியோ போய் ஒழிங்க.
  • …நிகழ்ச்சி முழுவதும் காண இயலவில்லை. இயலவில்லை என்றால் என்னால் சகிக்க இயலவில்லை. அதிலும் இளையராஜாவின் மானத்தை வாங்க யுவன் ஒருவர் போதும் என்று நினைக்கிறேன். காதல் கசக்குதய்யா பாடலை நாலுநாள் கக்கூஸ் போகாதவன் போல பல்லை கடித்தபடி பாடிக்கொண்டிருந்தார். இளையராஜா பாடிய பாடல்களை அவருடைய தவப்புதல்வர்கள் இப்படி குதறி எடுப்பதை பார்க்க முடியவில்லை.

இளையராஜா மீதும், அவருடைய பாடல்கள் மீதும் இருக்கும் ரசிகர்களின் ஈர்ப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க, இவனுங்களுக்கு எப்படிப்பட்ட வழி பாருங்க.

*******************************************************************
சமீபத்தில் 1989-ல் (அபூர்வ சகோதரர்கள் வந்த சமயம்) வெளியான பொம்மை மாதயிதழுக்காக சிவாஜி கணேசனிடம் கமல் எடுத்த பேட்டியைப் படித்தேன்.

…அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கேள்விகள்.

கமல்: உங்களுக்கு ஏன் டைரக்ட் பண்ணும் ஆசை வரல?
 
சிவாஜி: டைரக்ஷனைப் பற்றி நிஜமாகவே எனக்கு ஒன்றும் தெரியாது. இப்போ நீ டைரக்ஷன் செய்தால் ஒத்துழைப்பு தருவேன். எனக்கு டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னைக்குமே வந்ததில்லை. நான் நல்ல சொல்ஜராக இருந்தேனே தவிர கேப்டனாக விரும்பியதில்லை. எனக்கு கேப்டனாக இருந்தவங்க "இன்னும்...இன்னும்.." என்று சொல்லிட்டு இருந்தாங்களே தவிர "இது போதும்" என்று சொன்னதில்லை.

…கமல்: நீங்க நாடகத்துல இருந்ததாலே, கண்டிப்பாக மேடையிலே பாடி இருக்கணும். ஏன் சினிமாவில் பாடவில்லை.
சிவாஜி: இப்பவும் நல்லா பாடுவேனே. நானும் பாடிப்பார்த்தேன். ரெண்டு பேரோட வேலையை கெடுக்கர மாதிரி இருந்தது விட்டுட்டேன். அதுமட்டுமல்ல, அப்ப பாட்டுக்கு ரெண்டு நாள் மூணு நாள்  ரிகர்சல் பார்ப்பாங்க. நமக்கு இருந்த வேலையில் 2 நாள் 3 நாள் ஒதுக்க முடியாதுங்கிறது ஒண்ணு. தவிர, நம்மை விட நல்லா பாடுரவங்க இருந்தாங்க என்கிறது.

கமல்: இன்னைக்கு பல நடிகர்கள் புருவத்தை உயர்த்தி திரும்பி பார்க்கும்போது, என்ன என்று கேட்பதற்கு பதிலாக உறுமலே கேட்கிறது. அதெல்லாம் உங்கள் சாயல் தானே? 

…சிவாஜி: அந்த காலத்துல அது சரி கமல். இன்னைக்கு நீ குழந்தை மாதிரி வந்து நிக்குற, திரும்புற, அழற பாரு...அதுதான் சரி. நான் பண்ண காலம் வேற. இன்னைக்கு காலம் வேற. கலை தான் அப்பப்ப மாறிட்டே இருக்குமே. இப்ப கூட மறுபடியும் நான் நடிக்கவந்தேன்னா, ரெண்டு நாளைக்கு "ஜெர்க்" அடிப்பேன். இப்ப நீ நடிக்கிறது தான் நடிப்பு. அந்த காலத்துல நான் நடிச்சது நடிப்பா இருக்கலாம். கால ஓட்டதுல எல்லாத்துறையிலேயும் முன்னேற்றம், மாறுதல் வரும்.

இன்னும் பல விஷயங்கள் பற்றி அப்பேட்டியில் சிவாஜி அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.

*********************************************************************

சோ ராமசாமி பல காலமாக விடுதலைப்புலிகளை எதிர்த்தே பேசிவந்துள்ளார். அவர்களை ஆதரிப்பவர்களையும் சாடியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைப்படி அவர் ஈழத்தமிழர் விஷயத்தில் சொல்பவை கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் தங்களின் சக விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களை வேட்டையாடி கொன்றமை, அவற்றின் தலைமையை அழித்தமை என பல விடயங்களை கண்டித்துப்பேச அக்காலத்தில் மிகுந்த தைரியம் வேண்டும். ஈழத்தின் நிலைமை பற்றி மக்களுக்கு சரியாக தகவல்கள் கிடைக்காத காலம் அது. விடுதலைப்புலிகளால் டெலோ இயக்கத்தலைவர் சபாரத்தினம் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்  கொல்லப்பட்டபோது கூட விடுதலைப்புலி இயக்கத்திற்குள்ளே ஏதோ சிறிய  சச்சரவு என்ற அளவில் தமிழகத்தின் சில முக்கிய பத்திரிகைகள் எழுதின. ஆனால் அப்போதும் தன்னுடைய கருத்தை தெளிவாக பதிவு செய்தவர் சோ. "தமிழின துரோகி" என பட்டம் கிடைக்கும் என்று தெரிந்தும் அதை அவர் செய்தார். நவம்பர் 1986-ல் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை.



Tuesday, September 17, 2013

அம்மா ஊறுகாய் மற்றும் சிக்கன் 65 திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

"அம்மா குடிநீர்" திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

…புரட்டு தலைவியே! டாஸ்மாக் எண்ணிக்கையைக் கூட்டி சரக்குக்கு ஏற்பாடு செஞ்சிங்க. குடிநீர் திட்டம் கொண்டுவந்து மிக்ஸிங்க்கும் ஏற்பாடு செஞ்சிட்டிங்க. அப்படியே கொஞ்சம் சைட்டிஷுக்கு "ஊறுகாய் திட்டம்" "சிக்கன் 65 திட்டம்" கொண்டுவந்திங்கன்னா புண்ணியமா போகும்.


நடிகர் பிரசன்னா தற்போது விரும்பி பார்க்கும் படம்.

என் பொண்டாட்டி நல்லவ.

மூட நம்பிக்கை ஒழிப்புக்கு, உரிய சட்டம் ஒன்றை, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் - கலைஞர்  கருணாநிதி

ஆமா! என்னமா பீல் பண்ணுராரு. நீங்களே உங்க மஞ்சள் துண்டை ஆட்டி துவங்கி வையுங்க.

எங்கள் வீட்டில் எங்கள் அம்மா தான் பாஸ் என்று ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.

 "ஒரு பொம்பிளேன்னா ..." தலைவரோட டயலாக் எல்லாம் சினிமாவுலத்தான்.



******************************************************

இன்றைக்கு எம்.ஆர்.ராதா பற்றி எழுதுபவர்கள் எல்லாருக்கும் அட்சய பாத்திரம் போல இருப்பது. எம்.ஆர்.ராதா அவர்கள் கொடுத்த சில பேட்டிகள் . அவற்றுள் முக்கியமான ஒன்று விந்தனின் "சிறைச்சாலை சிந்தனைகள்". இதிலிருக்கும் சில விடயங்களை எடுத்து தான் கொஞ்சம் இப்படி அப்படி இட்டுக்கட்டி எம்.ஆர்.ராதாவைப் பக்கத்திலிருந்து பார்த்தது போல பலர் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சரி சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். திரைப்படத்துறையில் வெளிப்படையான மனிதர், திறந்த புத்தகம் எனப் பொதுவாக கண்ணதாசனைச் சொல்லுவார்கள். எம்.ஆர்.ராதாவும் அப்படித்தான். மேலே சொன்ன விந்தனின் புத்தகத்தில் ஒரு இடத்தில் சொல்லுவார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பாலமுருகனாக, பால கிருஷ்ணனாக, பெண்வேடங்களில் நடிக்கும் பையன்களுடன் உடலுறவு கொள்ள சில பணக்கார கூட்டம் அலைந்ததையும், தானும் அதுபோல ஆண் மோகம் கொண்டு அலைந்தவர்களில் ஒருவன் என வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். இதைப் பற்றி இவர் அதிகமாக சொல்லவில்லை. இப்படிப்பட்ட  செயல்களில் ஈடுபட்டதற்கு தான் பெரும் வேதனை அடைவதாக குறிப்பிட்டிருந்தார்.   இத்தகைய வலுக்கட்டாயமான ஓரினசேர்க்கை பழக்கங்களை (Homosexual என்பதா? Pedophile என்பதா? தெரியவில்லை) வெளியில் சொல்ல அதிக தைரியம் வேண்டும். எம்.ஆர்.ராதா செய்த தவறுகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் எத்தனைபேர் இப்படி தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து யாருமில்லை.

எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இளம்வயதில் பெண்வேடங்களை ஏற்று நடித்தவர்கள். இவர்கள் கூட இப்படி பல போன்ற எண்ணற்ற இன்னல்களை சந்தித்துதான் வந்திருப்பார்கள் போலும்.

******************************************************

நான் பார்த்த அரசியல் என்ற நூலில் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியை ஒப்பிட்டு கண்ணதாசன் கூறுகிறார்.
…".....அவரைப் (கருணாநிதி) பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.(http://chakkarakatti.blogspot.de)"

கண்ணதாசன் கருணாநிதியுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் பழகியிருக்கிறார். அதனையொட்டியே இவ்வளவு தெளிவாக கருணாநிதி பற்றி கூறுகிறார். பாருங்க எவ்வளவு உண்மை. இன்றுவரை கருணாநிதி மாறவில்லை.  அப்படியேதான் இருக்கிறார்.

… ****************************************************
படிக்காதமேதை படத்தில் கேவி மகாதேவன் இசையமைப்பில் ஜமுனாராணி, ஏஎல் ராகவன் பாடிய பாடல். எனக்குப் பிடித்த ஒரு பாடல். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

 

Friday, September 06, 2013

குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை

பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் மாணவர்விடுதியில் நானும் என் நண்பனும் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம். தாடிவைத்த ஒருவர். நடுத்தரவயது இருக்கும். தான் ஒரு மலையாளி எனவும் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் எங்களிடம் தமிழில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடன் பேசியதில் அவருக்கு திருமணமாகி இருப்பதும் தெரிந்தது. பல்கலைக்கழகத்தில் குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு தனிவிடுதியும் உண்டு. அவ்விடுதியில் இடம் கிடைத்ததும் மனைவியை அழைத்துக் கொண்டுவரப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேர விளையாட்டிற்குப் பிறகு செல்லும்போது என்னையும் என் நண்பனையும் பார்க்க சகோதரர்கள் போல இருப்பதாக சொல்லிவிட்டுச சென்றார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை. வெகுநாட்கள் கழித்து, என்னுடன் படித்த ஒரு கன்னடர் அன்று தாமதமாக வேலைக்கு வந்தார். அவரும் குடும்பஸ்தர்கள் விடுதியில் இருந்து வருபவர் தான். ஏன் தாமதம் என்று கேட்டேன். அவர் வசிக்கும் விடுதியில் இருக்கும் ஒருவன் குழந்தைகளிடம் சாக்லேட் கொடுத்து அறைக்குள் கூட்டிப் போய் சில்மிஷம் செய்து இருக்கிறான்.  குழந்தைகள் பெற்றோரிடம் விவரமாக சொன்னதன் பேரில் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குப் பகீர் என்றது, படிக்கவரும் இடத்தில் கூட இப்படி எல்லாம் நடக்கவேண்டுமா?  எனக்கு உணவுஇடைவேளைக்கு நேரமானதால் விடுதிக்கு வந்துவிட்டேன். விடுதியில் நுழையும்போது எனக்குத் தெரிந்த  ஒரு மலையாளி நண்பன் என்னிடம் விசாரித்தான். "இன்றைக்கு என்ன ஆச்சி விஷயம் தெரியுமா?"
"என்ன"
"இக்பாலை போலிஸ் கொண்டு போச்சு"
"எந்த இக்பால்"
"அன்றைக்கு உன்னுடன்  கிரிகெட் ஆடினாரே. தாடி கூட வச்சிட்டு இருந்தாரே. அவர்"
"ஏன் என்னவாம்"
"குழந்தைகளிடம் செக்ஷுவலாக தவறு செய்தாராம். என்னால் நம்ப முடியல. அவர் அப்படி இல்லை. வேண்டுமென்றே யாரோ இப்படி பழி சுமத்தி இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

நான் பதிலேதும் பேசாமல் சாப்பிடப் போய்விட்டேன். இது நடந்து பல ஆண்டுகள் இருக்கும். இந்த விஷயம் அப்போது செய்தித்தாளிலெல்லாம் வந்தது. என்னைப் பொருத்தவரை child abuse, phedophile விஷயங்களில் யார் வேண்டுமானாலும் குற்றவாளிகளாக இருக்கலாம். இவர்களை கண்டுகொள்வது கடினம். பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், வீட்டிற்கு வரும் நண்பர்களாக இருக்கலாம், ஏன் குழந்தையின் தந்தையோ சகோதரனாகக் கூட இருக்கலாம்.

இன்றைக்கு செய்தித்தாளைத் திறந்தால் சிறுமி கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு  என்றுதான் அதிகமாக வருகிறது. செய்தித்தாளில் வரும் சங்கதிகள் சில. ஆனால் உண்மையில் சமூகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி இருக்கும் பல குழந்தைகள்  சீறழிக்கப்படுகிறார்கள். மனரீதியான பாதிப்புடையர்கள் தான் இத்தகைய காரியங்களில் ஈடுபட முடியும். வேதனை தரக்கூடிய இந்த விஷயத்தைப் பற்றி நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. குழந்தைகளின் பெற்றோர்களே ஜாக்கிரதை. நான் ஒன்றும் குழந்தைகள் மனோ தத்துவநிபுணன் அல்ல. ஆனால் ஒரு சில விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு
1. உங்களுக்கு என்ன கவலை இருந்தாலும், குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். 
2. முடிந்தவரை அடிக்கடி உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் அன்று என்ன செய்தார்கள் என்று அன்புடன் விசாரியுங்கள். 
3. யாருடன் பழகுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
4. குழந்தைக்கு காயம் ஏதாவது ஏற்பட்டிருப்பின், எதனால் ஏற்பட்டது என்பதை அன்புடன் விசாரியுங்கள். "யாருடன் சண்டை போட்ட" என்று அதட்டினால், பிறகு அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருப்பின் உங்களிடம் சொல்லப் பயந்து தயங்குவார்கள். 
5. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
6. மிகவும் முக்கியமானதொரு விஷயம் சிறுவர்களை பேஸ்புக், இணையதளங்களை பாவிக்கவிடாதீர்கள். அப்படி பாவிக்கவிட்டாலும், கண்காணிப்புடன் நடந்துகொள்ளுங்கள். வளர்ந்த நாடுகளில் இணையத்தின் மூலம் குழந்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இனிமையாக பழகி தனியாக வரவழைத்து கற்பழித்த கொடூரங்கள் நடந்துள்ளன.