ஹரிதாஸ், ரத்தக்கண்ணீர் படங்களில் வருவது போல அருணகிரிநாதர் படத்திலும் ஒரு ட்விஸ்ட், சிற்றின்பமே பெரிதென்று வாழும் அருணகிரி தன் தவற்றை உணர்ந்து மனம் நொந்து பாடும் பாடல் "எத்தனையோ பிறவி பெற்று". டி.எம்.எஸ் அவர்களே நடித்ததாலோ என்னமோ கொஞ்சம் மிகை தெரியும். ஆனாலும், பாடல் மாசுமறுவற்றது.
Oliver Twist கதையின் தழுவலான அனாதை ஆனந்தன் என்ற படத்தின் துவக்கத்தில் ஒரு பாடல். "அழைத்தவர் குரலுக்கு வருவேன்" என்று துவங்கும் இப்பாடலை எழுதியது கண்ணதாசன். சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில் இப்பாடலை கேட்கும்போது, தெய்வபக்தியுடையோருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும். அது கவியரசின் தமிழாலா அல்லது கே.வி.எம்மின் இசையாலா தெரியவில்லை. (This song is dedicated to Bhagavathar Jeyadevdas).
அவன் தான் மனிதன் என்ற படத்திலிருந்து இளமைத்துள்ளலுடன் ஒரு பாடல். "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில்" என்று துவங்கும் பாடல். இப்படத்தில் வேறு பல பாடல்கள் எனக்குப் பிடித்திருப்பினும், இப்பாடலின் வேகம், வரிகள் ரசிக்க வைக்கின்றன. இதனுடன் 70களில் சிங்கபூரின் அழகு. நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல்.
சங்கே முழங்கு படத்திலிருந்து "நாலுபேருக்கு நன்றி" என்று துவங்கும் பாடல். இப்படி எளிமையான வரிகளில் தத்துவங்களை அள்ளிவீச கவியரசரால் மட்டுமே இயலும். வலியை உணர்ந்தவர்களின் கண்களில் நீரை வரவழைக்கும்.
ராஜராஜன் படத்திலிருந்து "இதயம் தன்னையே" என்ற பாடல். கே.வி.மகாதேவன் இசையில். வழக்கம்போல சுசீலா, ஜானகி என்றில்லாமல் ஒரு புதிய குரல் எ.பி.கோமளா. மன அழுத்தம் குறைக்க நினைப்பவர்கள் இப்பாடலை முயற்சித்துப் பாருங்கள்.
ப்ரேமபாசம் படத்திலிருந்து "அவனல்லால் புவிமேலே" என்ற பாடல். பாரசீகபாணி இசையில் அமைந்த அருமையான பாடல். பி.பி.சீனிவாசன் குரலில்.


