Showing posts with label படத்துண்டு. Show all posts
Showing posts with label படத்துண்டு. Show all posts

Thursday, May 08, 2014

எனக்குப் பிடித்த பாடல்கள்

பட்டிக்காடா பட்டணமா படத்தில் நாயகியைப் பார்த்து நாயகன் சந்தோசமாக பாடிய ஒரு பாடல் "என்னடி ராக்கம்மா". படத்தின் பிற்பாதியில் சோகமான பாடலாக வருகிறது. எம்.எஸ்.வி திருமணத்தில் வாசிக்கும் நாதஸ்வரத்தையும் கொட்டுமேளத்தையும் சோகப்பாடலுக்காக பயன்படுத்தியிருப்பது ஒரு புதுமை. பாட்டில் கூட ஒரு வரி "கல்யாண மேளங்கள் மணியோசை என் கவலைக்கு தாளமடி" என்று வரும். ஒளிப்பதிவு கேமிராக் கோணங்களும் கொஞ்சம் வித்யாசமானதாக இருக்கும். வழக்கம்போல, டி.எம்.எஸ் அவர்களின் அற்புதக் குரலில்.



ஹரிதாஸ், ரத்தக்கண்ணீர் படங்களில் வருவது போல அருணகிரிநாதர் படத்திலும் ஒரு ட்விஸ்ட், சிற்றின்பமே பெரிதென்று வாழும் அருணகிரி தன் தவற்றை உணர்ந்து மனம் நொந்து பாடும் பாடல் "எத்தனையோ பிறவி பெற்று". டி.எம்.எஸ் அவர்களே நடித்ததாலோ என்னமோ கொஞ்சம் மிகை தெரியும். ஆனாலும், பாடல் மாசுமறுவற்றது.



Oliver Twist கதையின் தழுவலான அனாதை ஆனந்தன் என்ற படத்தின் துவக்கத்தில் ஒரு பாடல். "அழைத்தவர் குரலுக்கு வருவேன்" என்று துவங்கும் இப்பாடலை எழுதியது கண்ணதாசன். சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில் இப்பாடலை கேட்கும்போது, தெய்வபக்தியுடையோருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும். அது கவியரசின் தமிழாலா அல்லது கே.வி.எம்மின் இசையாலா தெரியவில்லை. (This song is dedicated to Bhagavathar Jeyadevdas).



அவன் தான் மனிதன் என்ற  படத்திலிருந்து இளமைத்துள்ளலுடன் ஒரு பாடல்.  "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில்" என்று துவங்கும் பாடல். இப்படத்தில் வேறு பல பாடல்கள் எனக்குப் பிடித்திருப்பினும், இப்பாடலின் வேகம், வரிகள் ரசிக்க வைக்கின்றன. இதனுடன் 70களில் சிங்கபூரின் அழகு. நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல்.



சங்கே முழங்கு படத்திலிருந்து "நாலுபேருக்கு நன்றி" என்று துவங்கும் பாடல். இப்படி எளிமையான வரிகளில் தத்துவங்களை அள்ளிவீச கவியரசரால் மட்டுமே இயலும். வலியை உணர்ந்தவர்களின் கண்களில் நீரை வரவழைக்கும்.


ராஜராஜன் படத்திலிருந்து "இதயம் தன்னையே" என்ற பாடல். கே.வி.மகாதேவன் இசையில். வழக்கம்போல சுசீலா, ஜானகி என்றில்லாமல் ஒரு புதிய குரல் எ.பி.கோமளா. மன அழுத்தம் குறைக்க நினைப்பவர்கள் இப்பாடலை முயற்சித்துப் பாருங்கள்.



ப்ரேமபாசம் படத்திலிருந்து "அவனல்லால் புவிமேலே" என்ற பாடல்.  பாரசீகபாணி இசையில் அமைந்த அருமையான பாடல். பி.பி.சீனிவாசன் குரலில்.



Wednesday, February 19, 2014

உள்ளதைச் சொல்வேன் (19/02/2014)

குழாயடிச்சண்டை

என் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்னாடி ஒரு பொதுக்குழாய் இருக்கும். குழாயில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு பெண்கள் சண்டை இடுவது மட்டும் தினந்தோறும் நடக்கும். பள்ளிக்கு செல்லும்முன் சற்றுநேரம் குழாயடிச்சண்டையைப் பார்த்துவிட்டு தான் போவேன். தமிழகராதியில் இல்லாத பல நல்ல "கெட்ட" வார்த்தைகளை அங்குதான் பயின்றேன். சாயுங்காலம் ஆறு ஏழு மணிக்கு பெண்கள் நான்கைந்து பேர் வாசர்படியில் அமர்ந்து கதை பேசுவார்கள். சினிமா, அக்கம்பக்கத்தின் காதல், கள்ளத்தொடர்பு, சமையல், ஆன்மீகம், அமானுஷ்யம் எனப் பல விஷயங்கள் பற்றி பேச்சுக்கள் வரும். நல்லா பொழுது போகும். எட்டு ஒன்பது மணிக்குமேல் சாப்பாட்டை முடித்து வெளியில் வந்து அமர்ந்தால், ஏ1 சாரயக்கடையில் குடித்துவிட்டு நடுரோட்டில் நின்று கண்ணதாசன் பாட்டை எவனாவது சத்தமாக பாடிக்கொண்டிருப்பான். கொஞ்சநேரத்தில் அவன் பொண்டாட்டியோ பசங்களோ இரண்டு போட்டு இழுத்துக்கொண்டு போவார்கள். இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், சமூக வலைத் தளங்களான முகநூல், ப்ளாக், கூகிள்ப்ளஸ், ட்விட்டர் என பலவற்றில் குழாயடிச்சண்டை, கிசுகிசு, சரக்கடித்தவன் உளறல் போன்றவைகளைத் தான் பார்க்க நேரிடுகிறது. விஞ்ஞானம் முன்னேறினாலும் நம்ம ஜனங்கள் மட்டும் அப்படியே தான் இருக்கிறார்கள்.  போனவாரம் யுவன் என்கிற உலகமகா இசையமைப்பாளர் இஸ்லாம் மாறிவிட்டார் என அதைப்பற்றி ஒரு அக்கபோரு. வார கடைசியில் பாலுமகேந்திரா ஷோபாவை ஏமாற்றிக் கொன்றுவிட்டார் என்று முப்பது வருடத்திற்கு முன்னாடி செத்துப்போன ஷோபாவைப் பற்றி ஒப்பாரி. இப்போது அடுத்துவரப்போவது, தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த மூன்று தியாகிகள் பற்றி இருக்கும் (இப்போதே துவங்கியாயிற்று என நினைக்கிறேன்). இவனுங்கதான் இப்படி என்று ஆங்கில செய்தி வாசிக்கப் போனால், அங்கு சிங்கம் பலமானதா? கழுதைகொறத்தி வலிமையானதா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள். சரி! எதாவது யூட்யுபிள் பார்க்கலாம் என்று போனால், சாதி பெருமை பேசிக்கொண்டு ரெண்டு குருப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அடச்சே!!!

*******************************************************************************

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு"

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு" பற்றி வரலாறு.காம் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் மிளகாய், தக்காளி போன்றவற்றை பண்டைய தமிழர்கள் அறிந்ததில்லை. நாமும் செய்து தான் பார்ப்போமே என்று முயற்சித்தேன். ஊன்சோறு அருமை.

பன்றி இறைச்சி - 500 கிராம்
கடுகு, பெருஞ்சீரகம், …மிளகு - தேவைக்கேற்ற அளவு
உப்பு - தேவைக்கேற்ற அளவு
மஞ்சள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு - நான்கைந்து
பட்டை - ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - மூன்று பல்
கறுவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
  • …அரிசியை கழுவி சிறிது சேரம் ஊற வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு இவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.
  • வானலியில் எண்ணெய் சூடானபின், பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கடுகைப் போடவும். கடுகு பொறிந்தவுடன், கறுவேப்பிலை, இடித்து வைத்திருக்கும் கலவையை இட்டு வதக்கவும். சிறிது வதங்கியபின் பன்றி இரைச்சி, மஞ்சள், உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • சிறிது நேரத்தில் பன்றி இறைச்சி நீர்விடத்துவங்கும். இன்னும் சற்று நேரத்தில் ஊறவைத்த அரிசியைப் போட்டு நன்கு கிளரவும். கேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தினால் 1:1 அளவில் நீர் சேர்ப்பேன்) மிதமான சூட்டில் 10 - 12 நிமிடங்கள் வேகவிடவேண்டும். 
  • நறுக்கிய கொத்துமல்லியை தூவி பரிமாறவும்.
  • பன்றி இறைச்சி பயன்படுத்தினால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். (மாடு போல அல்லாமல் பன்றி இறைச்சிக்காவே வளர்க்கப்படுவது. சங்க காலத்தில் பன்றியை இறைச்சிக்காக அதிகமாக பாவித்தனர் தமிழர்கள்).

பதிவுலகில் பலர் ஓட்டலில் சாப்பிடுவதை சிலாகித்து பதிவிடுகிறார்கள். தனியாகவோ குடும்பமாகவோ சென்று சாப்பிடுவதாக சொல்கிறார்கள். அதை மற்றவருக்கும் பரிந்துரை செய்கிறார்கள். வகையாக சாப்பிட்டுவிட்டு தொகைதொகையாக கதை எழுதுகிறார்கள். இதில் ஒருவர் இக்கொடுமையை புத்தகமே போடுகிறார்.

முடிந்தவரை வீட்டு உணவு சாப்பிட பாருங்கள். அப்படி முடியாதபட்சத்தில் வெளியில் நல்ல உணவாக சாப்பிடுங்கள். குறிப்பாக வீட்டில் உள்ள வாண்டுகளுக்கு ஓட்டல் உணவை அறிமுகப்படுத்தாதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும். இதை அறிவுரையாக எடுத்துக்கொளாதீர்கள்: ஒரு வேண்டுகோள் அவ்வளவே.


**********************************************************************************

காபி...நரசூஸ்...

சென்னை தூர்தர்ஷனில் வந்த பழைய விளம்பரங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அலாதி சுகம். அதிலும் அப்போது வந்த நரசுஸ் காபி விளம்பரம் மிகவும் பிரபல்யம். YOUTUBE-யிருந்து உங்களுக்காக.

தேங்காய் சீனிவாசன் மற்றும் மனோரமா



…உசிலைமணி



Friday, April 12, 2013

பதினாறு வயசு வந்த மயிலே

சில்க் ஸ்மிதாவை பிடிக்காத தமிழ் திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது. அப்படி ஒரு அழகியல் எளிமை. ஆடி ரசிகர்களை மகிழ்வித்தாலும், சினிமாவுலகில் அனாதையாக விடப்பட்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த ஜீவன். அவரைப் போற்றிப் புகழ்ந்து திருவாளர் கங்கையமரன் தன்னுடைய  "செண்பகமே!செண்பகமே! படத்தில் இசைஞானியின் இசையில் ஒரு பாட்டு வைத்திருக்கிறார். இப்பாடல் ராமராஜன், செந்தில், எஸ்.எஸ். சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி என சும்மா களைகட்டும். சரக்குடன் ப்ரேக் டான்ஸ் வேறு.
 #பதினாறு வயசு வந்த மயிலே மயிலே எங்களை பாடபடுத்தடி மயிலே மயிலே
……#அடக்கி வச்சா சொன்னபடிதான் கேக்க மறுக்குது; அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறுக்குது.
…எல்லாம் கங்கையமரனின் வரிகள்.

…சரி பின்னாடி யார் ஆடுவது என்று பார்த்தால், சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் (தாடி வைத்திருப்பவர்)  பக்கிரிசாமியும் (சிவப்பு சட்டை,இடுப்பில் துண்டு அணிந்திருப்பவர்). இவர்கள் இருவரும் பழைய தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள். கங்கையமரன் இயக்கிய சில படங்களிலும் நடித்துள்ளார்கள். 60களின் நகைச்சுவை நடிகர்கள். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் பலரும் நினைவுகூறக்கூடிய அளவிற்கு சிறந்த நடிகர்களாக வந்திருப்பார்கள். இவர்களில் சட்டான்பிள்ளை வெங்கட்ராமன் தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜிகணேசனுடன் நடித்திருக்கிறார். இப்படத்தில் தான் இவருடன் சட்டான்பிள்ளை என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. (குருகுலம், திண்ணைப்பள்ளி இருந்த காலங்களில் வகுப்பின் தலைமைமாணவனாக விளங்குபவரை சட்டான்பிள்ளை என்பார்கள். அதாவது Class leader.) "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" பாடலில் சிவாஜிகணேசனுடன் நடிப்பது இவர்தான். சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் பக்கிரிசாமியும் இணைந்து நடித்த இன்னொரு பிரபலமான படம் "அடுத்தவீட்டுப் பெண்". இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரனுடைய தோழர்களில் ஒருவராக வருவார். பக்கிரிசாமி அங்சலிதேவியின் பாடுவாத்தியார்."கண்களும் கவிபாடுதே" பாடலில் அருமோனியத்துடன் அட்டகாசம் செய்வார். இவருக்கு திருச்சி லோகநாதன் பின்னணி பாடியிருப்பார். டி.ஆர்.ராமசந்திரனுக்கு சீர்காழி கோவிந்தராஜன். இதுபோன்ற ஒரு நுட்பமான போட்டிப்பாடல் மிகவும் அரிது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sunday, October 14, 2012

எனக்கு பிடித்த பாடல்கள்


பங்காளிகள் என்ற படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல். இந்தப் பாடலைக் கேட்டால் என் தந்தை ,என் குழந்தை இருவரும் ஒருசேர என் நினைவில் வந்துவிடுவார்கள். நானும் எங்கப்பாவுக்கு குழந்தை தானே.


சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவதாக அமைந்த பாடல். பாடுபவர் சி.எஸ். ஜெயராமன். நடிப்பவர் டி.கே. பகவதி. இவர்கள் இருவருக்காக நான் இப்பாடலை கேட்டதுண்டு. இப்பாடலின் இசை சோகத்தையும், கவலையையும் சொல்லும்.


'ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதி ஹை' என்ற படத்தில் முகேஷ் பாடிய பாடல். ராஜ்கபூர் நடித்துள்ளார். ஷைலேந்திராவின் பாடல் வரிகள் மிகவும் அருமை. தேசியகீதத்தின் தகுதி இப்பாடலுக்கு உள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது.

Monday, July 30, 2012

இளையராஜாவின் தலைப்புப் பாடல்கள்

இளையராஜாவின் பாடல்களுக்கு நான் என்றுமே ரசிகன். அவர் பாடும் பாடல்களில் இருக்கும் எளிமையே அதன் சிறப்பாக அமையும். எண்பது  தொண்ணூறுகளில் வெளிவந்த பல படங்களில் தலைப்புப் பாடலை இளையராஜா பாடுவது ஒரு ராசியாகவே கருதப்பட்டது. அப்படி பாடப்பட்ட பாடல்களில் எனக்கு பிடித்த சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளேன். கேட்டு ரசிக்கவும்.

பாட்டாலே புத்தி ...



சொந்தம் என்று வந்தவளே....

வெளக்கு வெச்ச..

வெளுத்துக் கட்டிக்கடா...

காட்டுவழி போற...(இது கங்கைஅமரன் பாடியது)

எல்லாருமே திருடங்க...

அப்பன் என்றும்...

சின்னவீடு ஜாக்கிரதை...

இந்திரன் வந்ததும்...

Tuesday, March 02, 2010

9 (2009) - திரைப்படம்

மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இறுதிப்போர் நிகழ்ந்து எல்லோரும் அழிந்துகிடக்கும் தருவாயில் தன்னுடைய உயிரை பொம்மைகளில் அளித்துவிட்டு இறக்கிறார் ஒரு விஞ்ஞானி. அப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட பொம்மை '9'. உயிர்தெழுந்து வரும் 9, அழிவுகளிடையே நடந்து செல்லுகையில் ஒரு இயந்திர மிருகத்தால் துரத்தப்படுகிறது.  ஆனால் துரத்தப்படும்போது 9-ஐ பொம்மை 2 காப்பாற்றுகிறது. பிறகு தன்னுடைய சில தோழர்களிடம் 9-ஐ அறிமுகம் செய்கிறது. அந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பது பொம்மை 1. ஆனால் அது ஒரு கோழை. 2 இயந்திரத்தால் பிடிக்கப்பட்ட்டப்பின், 2-ஐ காப்பாற்றி வருவதாக 9 செல்கிறது. ஆனால் சென்ற இடத்தில் செயலிழந்து கிடக்கும் இயந்திர உற்பத்தியை தொடக்கிவிட்டு விடுகிறது. ஊக்குவிக்கப்பட்ட இயந்திரங்களை 9ம், அதன் நண்பர்களும் எப்படி சமாளித்து அழித்தார்கள் என்பது மீதி கதை. முதலில் நான் '9' குறும்படத்தை பார்த்தேன். படத்தின் அனிமேஷன் காட்சிகளும், விடயமும் புதுமையாக இருந்தது. இந்தக் குறும்படம் 2005-ம் ஆண்டின்  ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மிகுந்த ஆவலுடன், பிறகுதான் '9' என்று முழுநீளப் படமாக வந்ததையறிந்து, அந்தப்படத்தையும் பார்த்தேன்.  இப்படம் ஷான் அக்கரால் இயக்கப்பட்டது. குறும்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் டிம் பர்டன் தானே இப்படத்தை தயாரித்தார். பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், வித்யாசமான படமாக அனைவராலும் புகழப்பட்டது. நீங்களும் பார்த்து மகிழ '9' குறும்படத்தின் படத்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டு தங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.


Sunday, February 28, 2010

ரம்பையின் காதல் - ரசித்த பாடல்கள்

தங்கவேல், பானுமதி நடித்த படம் ரம்பையின் காதல். இப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கனீர்குரலில் ஒலித்த தத்துவப்பாடல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பகவானே மௌனம் ஏனோ... , சமரசம் உலாவும் இடமே... என்று தொடங்கும் பாடல்கள். மனதை உருக்கக்கூடியடி ஆர்.பாப்பாவின் இசை,மருதகாசியின் பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள். பாடல்களை ரசித்தவர்கள் மறக்காமல் கருத்தைச் சொல்லவும்.



Saturday, November 08, 2008

எம்.ஜி.ஆர் ரசிகரா...


இந்திய திரையுலகில் சண்டைக் காட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் ரசிகர்கள் இதைப் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். எனக்கு எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சிகள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். என்னோட அப்பா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர், அதனால் நானும் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்த்து வளர்ந்தேன். சண்டைக் காட்சிகளைப் பொருத்தவரை, இந்தியாவில் எம்.ஜி.ஆர் போல எந்தக் கதாநாயகனும் சிறப்பாக திரையில் சண்டை செய்து பார்த்ததில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்ரும் வாலிபன் மிகவும் பிடித்த படம். இருந்தாலும், ரிக்ஷாகாரன் படத்தில் வரும் இறுதிக்காட்சி சண்டை எனக்குப் பிடித்தமானது. சண்டைக் காட்சியில் புரட்சிநடிகர் "சுருள்பட்டை" சுற்றும் ஒளித்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசிக்கவும்.



இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தான், நான் சிலம்பம் கற்றுக் கொள்ள போய் 'வீடு கட்ட' மட்டும் கற்றுக் கொண்டு வந்தேன். பத்தாம் வகுப்பில் படிப்பு, ஹிந்தி டியுசன் என பளு அதிகமானதால், தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்க ஊரு பக்கம் கம்பு சுற்றுவதில் 'சாரபட்டை' சொல்லித் தருவார்கள். நான் ஆசைஆசையாக செய்து வாங்கி வந்த 'பானா கோல்' (சிலம்பம்), இப்போது அரிசி, பருப்பு வெயிலில் காயவைத்தால் காக்கா விரட்டவும், குரங்கு விரட்டவும் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கொசுறு செய்தி:

எம்.ஜி.ஆர் திரைப்படம் பற்றிய அரிய தகவலுக்கு http://mgrroop.blogspot.com போய் பாருங்க!!

பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர், அதை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Friday, November 07, 2008

வில்லியம் வாலஸ்


Brave Heart படம் எல்லாரும் பார்த்திருப்பிங்க. இந்தப் படம் 1995-ல் மெல்கிப்சன் நடித்து வெளிவந்தது. இது William Wallace என்ற போராளியோட கதை. இவனுடைய காலம் 1272-1305 என்று கூறப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் சிதறுண்டு கிடந்த ஸ்காடிஷ் மக்களை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் உடனான போரை முன்நின்று நடத்தி, அதில் வெற்றியும் பெற்றவன். Brave heart படம் வெளிவந்த பிறகு, 1997-ல் வில்லியம் வாலஸுக்கு Stirling எனும் இடத்தில் National Wallace Monument சிலையொன்று அருகே வைக்கப்பட்டது. இந்த சிலை பார்ப்பதற்கு Brave heart மெல்கிப்சன் போலவே வடிவமைக்கப்பட்டது. அந்த சிலை நம்ம ஊரு பெரியார் சிலை போல சில விஷமிகளால் தாக்கப்பட்டதால், அதைச் சுற்றிலும் தடுப்பு வைக்கப்பட்டது. சிலையுடைய மூக்கு சேதப்படுத்தப்பட்ட பின், 2004-ல் அதை 350000 ஸ்டெர்லிங் பவுண்ட் விலைக்கு விற்க முடிவு செய்தனர், ஆனால் யாரும் வாங்க வரவில்லை. இந்த வருடம் அச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது.