Sunday, June 17, 2007

அடிப்படைக் கல்வி - சிறார் தொழிலாளர்கள்

அடிப்படைக்கல்வியும் சிறார்தொழிலாளர்களும் இணைந்த பிரச்சனைகள்!

சமீபத்தில் தமிழ்நாடு சென்றபோது, பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருந்தது. என்னுடைய அண்ணியின் உறவுக்கார சிறுவனொருவன் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் தான் படிக்கிறான். அடிக்கடி எங்கள் வீட்டிற்கும் வருவான். ஆனால் பள்ளி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் அச்சிறுவன் வரவேயில்லை. நான் என் அண்ணியை இதுபற்றி கேட்டபோது, பத்தாம் வகுப்பு படிக்க வைக்க முடியாமல் அச்சிறுவனுடைய தந்தை அவனுடைய படிப்பை நிறுத்தப்போவதாக உள்ளார் என்று கேள்விபட்டேன், நான் சிறுவனுடைய தந்தையிடம் இதுபற்றி பேசினேன்.

அவர் ஒரு நெசவுத்தொழிலாளி.ஒரு நெசவாளியின் மாதவருமானம் 2000 ரூபாய்தான் இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் உழைத்தால் 3000 வரை கிடைக்கும். இதுதான் இவர்கள் வாழ்க்கைத்தரம். ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் என் போன்றவனுக்கு இது செறிக்க முடியாத விஷயம் தான். சிறுவன் அரசு உதவிப் பள்ளியில் படிப்பதால் 350 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள் என்றும், அப்படியே கட்டணம் செலுத்தினாலும் பாடம் எழுத நோட்டுபுத்தகம், பள்ளிச்சீருடை என 500 ரூபாய் வரை ஆகுமென்றும் அவர் கூறினார். மேலும் சிறுவனை இயந்திர நெசவுத்தறியை இயக்கும் வேலைக்கு அனுப்பப்போவதாக கூறினார். அவர் வருத்தம் எனக்கு புரிந்தது.

சிறுவன் மேலும் படிக்க நான் செலவு செய்யத்தயார் என்று கூறிவிட்டு, நோட்டுப்புத்தகமும் பள்ளிச்சீருடையும் வாங்கிக்கொடுத்துவிட்டு வந்தேன்.இந்த உதவியை நம்மால் எல்லாருக்கும் செய்ய இயலாது தான். நான் கூறுவதைக்கேட்டால் இலவசகல்வி இன்னும் நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகம் நிச்சயம் எழும். அரசுப்பள்ளியில் உள்ளது என்று சொல்பவர்கள், தரமான கல்வி எல்லாருக்கும் வழங்க இயலுமா? படிக்க இடம் கிடைக்காமல் தான் அச்சிறுவன் அரசு உதவிப்பள்ளியில் சேரும் நிலை.

எங்கள் ஊர்ப்பகுதியில் தீப்பெட்டித்தொழில், பீடித்தொழில், நெசவுத்தொழில்,தோல் தொழிற்சாலை அதிகம் உண்டு. இவற்றில் பல சிறுவர்கள் வேலைக்குப் போவதைப் பார்த்து இருக்கிறேன். பெரும்பாலும் சுமார் 8-12 வயது சிறுவர்கள் தான். இந்த மனக்குமுறல் எங்கு சென்றாலும் அகலுவதில்லை. இந்தியாவின் ஒரு உயர்தர தொழிற்நுட்ப கல்விநிலையத்தில் அமைந்துள்ள உணவகத்தில் சிறார்கள் வேலை செய்வதைப்பார்த்தபோது நொந்து போய்விட்டேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு நாடு முன்னேற்றம் குதிரைப் பாய்ச்சலில் உள்ளதாக சொற்பொழிவாற்றும் கோயபல்ஸ்களை செருப்பால் அடிக்கத் தோன்றும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.உலகத்திலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் 5-14 வயதுடைய 44 மில்லியன் சிறார் தொழிலாளர்களாக உள்ளதாக உலக தொழிலாளர் அமைப்பு கணக்கிட்டுள்ளது.குறைந்த செலவில் பெரிய லாபம் பார்க்க விரும்பும் முதலாளிகள் சிறார்களை தொழிலுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசாங்கம் அடிப்படைக் கல்வியும் அளிக்காமல், சம்பிரதாயச் சட்டங்களைச் சுழற்றி மக்களையே பதம்பார்க்கிறது.

நாளைய தலைமுறைக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், வெறும் பேச்சளவில் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. இந்தியாவின் 20% GNP குழந்தை தொழிலாளர்களால் என்பது மறுக்க முடியாத வெட்கப்பட வேண்டிய உண்மை. பெரும் தொழிற்வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தான் சிறார் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.தொழிற்புரட்சி தான் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக்காரணம் என காரல் மார்க்ஸ் கூறியது ஞாபகம் வருகிறது. இதற்காக தொழிற்சாலை வேண்டாம் என்று கூறவில்லை. சிறார்தொழிலாளர்கள் தனிப்பட்ட பிரச்சனையல்ல! மக்கள்தொகை, அடிப்படை கல்வியின்மை, வெத்துவேட்டு தீர்வுகள், செத்தபாம்பு சட்டங்கள், முதலாளியத்துவத்திற்குச் சார்பான பொருளாதாரக் கொள்கைகள் என பல்வேறு கலவையான பின்னிப்பிணைந்த அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது. இதன் தீர்வு எளிதானது! முன்னிற்கும் செயல்பாடுகள் கடினமானது. ஆனால் செயல்படுத்தாமல் விட்டால் நாளை மலரும் முல்லைகளைக் கிள்ளியெறியும் என்பது திண்ணம்!

நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து!!

ஒருத்தன் படிச்சத மறக்கலாம், ஆனா குடிச்சத மறக்க முடியுமா?

அதுக்குதான் இந்த இடுகை!


தண்ணியடிக்கிறது கூட ஒரு கலை தான். இதை நல்ல ஒரு குடிமகன் கண்டிப்பாக ஒத்துக்குவான். என்ன சரக்கு, எந்த காலத்துல, என்ன மிக்சிங்கோட, என்ன சைட்டிஷோட, எந்த நண்பனோட, யாரோட காசுல, எங்க அடிக்கணும்னு இந்த பட்டியல் நீளும்.நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது தான் இந்த பழக்கமெல்லாம் இருந்தது. இப்ப இல்ல! (உண்மையா! திருப்பதி லட்டு சத்தியமா! திருனெல்வேலி அல்வா சத்தியமா! இப்ப அடிக்கிறது இல்ல அன்பு மிக்கவரின் வேண்டுகோளுக்கினங்க விட்டுட்டேன்). ஆனா அந்த அனுபவம் ஒரு கல்வெட்டு மாதிரி.நாங்கெல்லாம் அப்ப இந்த சொல்லொன்னாகலையில் கிங். நானும் என்னோட அறைதோழன் சின்னாவும் தான் அடிப்போம்.அப்ப பீர் 60 ரூபாய். விஸ்கி பிபி கோல்ட் (இது என்னோட உள்ளங்கவர்ந்த பிராண்ட்) 80 ரூபாய் இருந்தது. பெரும்பாலும் ரம் தான், ஏனென்றால் அது புல் 120 ரூபாய் தான். இரவு 7 மணிக்கு மேல தான் சரக்கு வாங்குவோம். எங்களுக்கு தெரிஞ்ச ஒரு மிலிட்டரி மாமா, அவரிடம் தான் வாங்குரது.அவர் தேசத்துக்கு சேவை செய்தாரோ இல்லயோ எங்களுக்கு செய்தார். எங்க வார்டன்க்கு நாங்க வச்ச பேரு ஸ்கெலிட்டன் (ஆள் சும்மா கம்பிகட்டு கணக்கா இருப்பாருஅதனாலதான்). பாட்டீல் எந்த படுபாவியாவது பார்த்தால், வார்டனிடம் போட்டுகொடுத்துவிடுவான். அதனால அதை உடனே பக்கெட் போட்டு மூடி வச்சிடுவோம். ஹாஸ்டல் மெஸ் சாப்பாடு கொண்டு வந்து ரூம்ல கரெக்டா வச்சிப்போம். 10 மணி ஆன பிறகு கொஞ்சம் ஆள்நடமாட்டம் குறையும், அப்பதான் அரங்கேற்றம் வச்சிப்போம்.

எங்க அரங்கேற்றம் பத்தி ஒரு விளக்கம்:

தேவையான பொருட்கள்:

1. பக்கெட்(Bucket)

2. 2 கிளாஸ் (குடிக்கும் நபர்களைப்பொருத்து)

3. சரியான அளவு சோடா (அ) தண்ணீர் (பெப்ஸி, கோக், ஸ்ப்ரைட் வசதியகேற்றபடி)

4. 5 (அ) 6 ஊதுபத்தி (இல்லாட்டி அக்கம்பக்கம் இருக்கிரவணுங்க மோப்பம் பிடிச்சி வந்து ஒரு கிளாஸ் ஊத்த சொல்லுவான். பிறகு முதலுக்கே மோசமாகிடும்)

5. சைட்டிஷ் (இதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது! நாங்க ஊறுகாய் விரும்பிகள்)

செய்முறை:

பாட்டீல் திறந்து பக்கெட்ல ஊத்தனும். பிறகு சரியான அளவு சோடா (அ) தன்ணீர் விட்டு கலக்கவும். குடிக்க சரக்கு தயார்.தயாரான சரக்கை பக்கெட்ல இருந்து கிளாஸ்ல மொண்டு குடிக்க வேண்டியதுதான். அப்ப அப்ப ஊறுகாய கொஞ்சம் சுவைக்கனும், இல்லாட்டி கிளப்பிக்கும் அப்புறம் மட்டம் ஆகுவிங்க (அ) ஆம்லேட் தான். எலுமிச்ச ஊறுகாய் இந்த விஷயங்களுக்கு உகந்தது. இப்படியே தொடர்ந்தால் நீங்க வெகுவிரைவில் சிறந்த குடிமகனாக வாய்ப்பிருக்கிறது.

இது எங்க ரம் அடிக்கிற ஸ்டைல்!!

எப்பவும் சனிக்கிழமை தான் அடிப்போம்,அப்பதான் மறுநாள் நல்லா தூங்கலாம். நாங்க குடிச்சி முடிச்ச பிறகு, உடனே தூங்க மாட்டோம். வாட்ச்மேன தாஜா பண்ணி வெளிய மேய போய்டுவோம். நல்லா சுத்திட்டு லேட்டா வந்து மெலந்துப்போம்.பிறந்தநாள் பார்ட்டில அலப்பர தாங்காது குடிச்சா பாட்டு தான், குத்தாட்டம் தான். பட்டய கிளப்புவோம்.

ஆனா இப்ப பாருங்க எல்லாம் மல ரும் நினைவுகள் ஆகிப்போச்சு!

Saturday, June 16, 2007

காற்று மாசுபடுதல பயிர்சாகுபடியைக் குறைக்குமா?

ஆம்! குறைக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சிக்குழு.

மாசுபடுதல் தெற்காசியாவின் நெல்சாகுபடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஆராய்ச்சி குழுவொன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபடுதலில் பெட்ரோலிய எரிபொருள்களால் உண்டாகும் வாயுக்களே முக்கிய காரணியாக அமைகிறது. 1980 முதல் இந்தியாவில் முக்கிய உணவுப்பொருட்களின் சாகுபடி குறைந்து வருகிறது. உலகில் இதுபோன்ற பிரச்சனையால் தெற்காசியாவும் அதிகம் பாதிப்படையவுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வானத்தை ஆக்கிரமிக்கும் மாசுப்பொருள்களான பசுமையில்ல வாயுக்கள், சிறுதுகள்கள் மற்றும் புகை பெட்ரொலிய பொருட்கள் எரிவதால் பெரும்பாலும் உண்டாகின்றன. இவை சூரிய கதிர்கள் பூமியடைவதையும் வெகுவாக தடுக்கின்றன மழைபெய்தலையும் குறைக்கின்றன.


தற்போது, வரலாற்று நெல்சாகுபடி தகவல்கள் மற்றும் காலனிலை அமைப்பின் மூலம் நெல்சாகுபடி குறைவில் மாசுபடுதலின் பெரும்பங்கை தெளிவாக ஆராயப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. வானிலுள்ள
பழுப்பு மேகம்எனப்படும் மாசுமண்டலம் 1985 முதல் 1998 வரை இல்லாதிருந்தால், நெல்சாகுபடி 11%-ஆக உயர வாய்ப்பிருப்பதாக கலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆரய்ச்சியாளர் கூறியுள்ளார். மேலும் அவ்வறிக்கையில், இத்தகைய மாசுமண்டலம் குறைவதால் நெல்சாகுபடி அதிகரிக்கும் என மேலும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, க்ளோபல் வார்மிங் மற்றும் காற்று மாசுபடுதல் வெறும் ஒரு தனிநாட்டிற்கானதல்ல, உலகிற்கானது. அடுத்ததாக இவ்வாராய்ச்சிக்குழு சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆய்வை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மீது படர்ந்துள்ள பழுப்புமேகத்தின் நாசா செயற்கைக்கோள் படம