Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Saturday, June 16, 2007

காற்று மாசுபடுதல பயிர்சாகுபடியைக் குறைக்குமா?

ஆம்! குறைக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சிக்குழு.

மாசுபடுதல் தெற்காசியாவின் நெல்சாகுபடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஆராய்ச்சி குழுவொன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபடுதலில் பெட்ரோலிய எரிபொருள்களால் உண்டாகும் வாயுக்களே முக்கிய காரணியாக அமைகிறது. 1980 முதல் இந்தியாவில் முக்கிய உணவுப்பொருட்களின் சாகுபடி குறைந்து வருகிறது. உலகில் இதுபோன்ற பிரச்சனையால் தெற்காசியாவும் அதிகம் பாதிப்படையவுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வானத்தை ஆக்கிரமிக்கும் மாசுப்பொருள்களான பசுமையில்ல வாயுக்கள், சிறுதுகள்கள் மற்றும் புகை பெட்ரொலிய பொருட்கள் எரிவதால் பெரும்பாலும் உண்டாகின்றன. இவை சூரிய கதிர்கள் பூமியடைவதையும் வெகுவாக தடுக்கின்றன மழைபெய்தலையும் குறைக்கின்றன.


தற்போது, வரலாற்று நெல்சாகுபடி தகவல்கள் மற்றும் காலனிலை அமைப்பின் மூலம் நெல்சாகுபடி குறைவில் மாசுபடுதலின் பெரும்பங்கை தெளிவாக ஆராயப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. வானிலுள்ள
பழுப்பு மேகம்எனப்படும் மாசுமண்டலம் 1985 முதல் 1998 வரை இல்லாதிருந்தால், நெல்சாகுபடி 11%-ஆக உயர வாய்ப்பிருப்பதாக கலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆரய்ச்சியாளர் கூறியுள்ளார். மேலும் அவ்வறிக்கையில், இத்தகைய மாசுமண்டலம் குறைவதால் நெல்சாகுபடி அதிகரிக்கும் என மேலும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, க்ளோபல் வார்மிங் மற்றும் காற்று மாசுபடுதல் வெறும் ஒரு தனிநாட்டிற்கானதல்ல, உலகிற்கானது. அடுத்ததாக இவ்வாராய்ச்சிக்குழு சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆய்வை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மீது படர்ந்துள்ள பழுப்புமேகத்தின் நாசா செயற்கைக்கோள் படம

Tuesday, May 29, 2007

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-2

பொதுவாக அணுசக்தி சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களில் தினமும் ஒவ்வொருவர் வாங்கிய கதிர்வீச்சைக்கொண்டே விபத்து அல்லது கசிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என கண்கானிப்பார்கள். 2003ல் நான் கல்பாக்கத்தில் என்னுடைய முதுனிலை இறுதியாண்டு படிப்பிற்காக இருக்க நேர்ந்தது. அப்போது, மேற்கூறியது போன்றதொரு விபத்தைப் அறிந்தேன். தினமும் அணு உலையின் செயல்பாடுகளின் சில பகுதிகளை கண்கானிக்கச்செல்லும் விஞ்ஞானிகள் வழக்கம்போல தங்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். சில மணிநேரங்களில் அவர்கள் அளவுக்கு மீறிய கதிர்வீச்சுக்குட்பட்டு இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. இதுபோன்ற சில பாதுகாப்பின்மை காரணமாக விபத்துகளும் கசிவுகளும் நடந்தவண்ணம்தான் உள்ளது. ஆனால் சுற்றுப்புறசூழல் பாதுகாப்பையும் சீர்கேட்டையும் உயிரிழப்பையும் இந்திய அணுசக்தித்துறை கருத்தில் கொள்கிறார்களா என்பது கேள்விக்கிறியே! போதிய பாதுகாப்புகள் மற்றும் வசதிகள் இல்லாமல் அணு உலைகளை இந்திய நிறுவ முயல்கிறது. இந்திய வழக்கம் போல ஆணிவேர் பிரச்சனைகளை அணுகாமல் நுனிக்கிளைகளை மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்தி எமாற்றுவேலை தான் செய்கிறது. அரசியல் லாபம் தனிக்கட்சி விளம்பரத்திற்காக அணுபரிசோதனை நடத்தப்பட்டது எல்லாருக்கும் தெரியும். கல்பாக்கத்தில் 20 வருடங்களாக இயங்கி வருவது வெறும் சோதனை அணு உலையே. தற்பொழுது, இந்திய அரசு கூடங்குளத்தில் அதிக உற்பத்திதிறனுடைய உலையைக் நிர்மானிக்க உள்ளது. இதிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் நிச்சயமாக சரிவர கையாளப்படப்போவதில்லை. இதன் விளைவு தெந்தமிழகத்தையே ஒரு சுடுகாடாக மாற்றி அமைக்கும். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதரப்போவதாக அரசு ஏமாற்றுவேலையில் இறங்கியுள்ளது. மேத்தாபட்கரும் இது சார்ந்த போரட்டத்தில் குதித்துள்ளார். ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் பணப்பை நிறைந்தால் போதும் என இதுகுறித்து யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இத்தகையதொரு அணுவுலை தமிழகத்தில் அமைவது பயனைவிட பலமடங்கு விளைவுகள் மிக அதிகம்.

அணுவுலை இன்றியமையாமைக்கு காரணம் கூறுபவர்கள், முன்னிறுத்தும் கருத்துக்கள்:

1. வருங்காலத்தில் அணுமின் ஆற்றல் மூலமாகவே நடைமுறையில் அதிகபட்ச ஆற்றல் உற்பத்தி செய்ய இயலும்? சரி. அவ்வாறு செய்வதெனில் போதிய பாதுகாப்பு தேவை. அததச் செய்தோமா என்றால்? இல்லை. திரு.கோபாலகிருஷ்ணன் (இவர் 1993-1996 இந்திய அணுசக்தி கண்கானிப்பகத்தின் தலைவராக பணிபுரிந்தவர்) அவர்கள் சர்வதேச அணுசக்தி கண்கானிப்பகத்தின் தரத்திற்கு இந்தியாவின் பாதுகாப்பு தரம் இல்லை என்று ‘ப்ரண்ட் லைன்’ இதழில் கூறியுள்ளார்.

2. புளுட்டொனியம் இந்தியாவே தயாரிப்பதின் மூலம் அணுஆயுத உற்பத்தியில் சுயதேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்?

இந்தியாவில் பல்வேறு அடிப்படைப் பிரச்சனை இருக்கும்போது அதைவிடுத்து, ஏன் இப்படி பல கோடி பணத்தை புளுடொனியம் தயாரிப்பில் கொட்டுவது இப்போதைக்கு அவசியமற்றது. (தற்போதைய அமெரிக்காவுடனான ஒப்பந்தம் புளுடோனியம் தயாரிப்பிற்கும் ஆப்பு வைத்துவிட்டது).

பல்வேறு ஆதாரப்பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்க முடியாத இந்திய அரசு, புளுடொனியம் தயாரிப்பு என்றும் அணுமின் உற்பத்தி என்றும் ஜல்லியடிப்பது ஏன்? மக்களின் பாதுகாப்பு பற்றி கருதாமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மக்களுக்காக பயன்படுத்தப்படுமா? சில முதலாளிகளின் நன்மைக்காக மக்களை இந்திய அரசு சுரண்டுகிறதா? மாற்றானை அடக்க புளுடொனியம் தயாரிக்கிறேன் என்று சொந்த மக்களையே கொல்கிறதா? இவைதான் இந்திய அணுமின் உற்பத்தியின் முன் நிற்கும் கேள்விகள். நாட்டினுடைய கௌரவத்தை உயர்த்த, நாட்டின் ஆராய்ச்சியை, நாட்டின் அறிவியலைவிட நாட்டு மக்கள் வாழ்க்கைத்தரம் முதலில் உயர வேண்டும். இந்திய அரசு இதை உணருமா ??

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-1

ஷெர்னொபில், த்ரிமைல் தீவு, டொகிமோரா அணுகரு விபத்துகள் எல்லோரும் அறிந்ததே! குறிப்பாக ஷர்னோபில்விபத்து உக்ரைன்(முந்தய சோவியத் ரஷ்யாவில்)1986ம் ஆண்டு 2000க்கும் மேற்ப்பட்ட மக்களை செறித்தது. இந்திய அணுசக்திப்பயணம் இது போன்ற ஓர் இலக்கு நோக்கியே செல்கிறது. எந்தவித தொழிற்சாலையானாலும் பாதுகாப்பு அவசியமானது. குறிப்பாக, அணுமின் மற்றும் அணுமின் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மிக மிக அவசியம். ஏனென்றால், இத்தகைய அணுமின் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து, பாரதூரமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை. அடுத்த தலைமுறைகளையும் தாக்கக்கூடியவை. மரபணு சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை.

பொதுவாக, அணுசக்தி மற்றும் அணுஆயுதங்கள் உற்பத்திக்கு முக்கியமான மூலப்பொருள் யுரேனியம், தோரியம் போன்றவற்றின் தாதுப்பொருட்களாகும். இத்தகைய தாதுக்களின் சுரங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் கதிர்வீச்சுடைய தாதுக்களின் துகள்களை சுவாசித்தபடி வேலைசெய்கிறார்கள். இதுவும் ஒரு வகை உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் போக்குதான். ஆனால் மேலைநாடுகளில் இத்தகைய சுரங்கங்களுக்கு அதிகமாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ‘ஜடிகுடாவில் புத்தர் அழுகிறார்’ என்றொரு ஒளிப்பதிவு வெளியானது. “தி வீக்” இதழும் அதைப்பற்றி விரிவாக எழுதி இருந்தார்கள். இது போன்ற சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் கதிரியக்கப்பொருட்கள் மிகையாக உள்ளன. இத்தகைய கழிவுகள் போதிய அளவு சுத்திகரிப்படாமல் வெளியேற்றப்படுகின்றன. ஜடிகுடாவின் சுரங்கத்தில் தாதுபொருட்கள் தவிர்த்தவை கட்டுமான பணிகளுக்கும் சாலையிடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் கதிரியக்கம் சுற்றுப்புற்ச்சூழலை வெகுவாக பாதிக்கிறது. கடந்த நூற்றாண்டில் இந்திய அணுமின் சார்ந்த நிலையங்கள் சில விபத்துக்களை சந்தித்தன.இவை மற்ற தொழிற்சாலைகளோடு ஒத்துநோக்கும் போது எண்ணிக்கை குறைவு எனினும் விளைவுகள் மிகக்கடுமையானவை. அகில உலக கதிரியக்க ஆணையத்தின் அறிக்கைப்படி 20mSv (milli Sievert) கதிர்வீச்சு ஆயிரத்தில் ஒருவருக்கு கதிரியக்க புற்றுநோயை உருவாக்கவல்லது. ஆனால் இந்தியாவின் அணுசக்தி கண்கானிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், 1986 முதல் 1990 வரை அணுசக்தித்துறையில் உள்ள 3-5 சதவிகித தொழிலாளர்கள் 20mSv கதிர்வீச்சைவிட அதிகமாக பெற்றுள்ளனர். அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் உபபொருட்கள் புளுடொனியம் (புளுடொனியம் அணுஆயுதங்கள் தயாரிப்பின் மூலப்பொருள்) தயாரிக்கப்பயன்படுகிறது. புளுடொனியம் யுரேனியத்தைவிட 30000 மடங்கு கதிர்வீச்சு கொண்டது. புளுடொனியத்தைப் பிரித்தெடுக்கும்முறை அதிக கதிர்வீச்சும் அதிக மில்லியன் பணச்செலவும் உடையது. கல்பாக்கத்தில் இப்பிரிவு kalpakkam reprocessing plant (KARP) என இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

திரு.எம்.வி.ரமணா அவர்கள் பாஸ்ட் ப்ரீட் உலைகள்(fast breed rector - FBR) குறித்து சில கட்டுரைகளை ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியிட்டுள்ளார். அவர் கூறுவது என்னவெனில் FBR மிகுந்த வெப்பத்தை வெளியிடக்கூடியவை, பெரிய விபத்து ஏற்படுத்தக்கூடியவை, ஆதலின் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது. FBTR (fast breed test reactor) மற்றும் PFBR (prototype fast breed reactor) அதிக விபத்துகளை உண்டாக்கக்கூடியவை. பிரான்சில் உள்ள ஸுப்பெர்னிக்ஸ் அணுவுலை FBR வகையைச் சார்ந்தது. இது கடந்த 10 வருடத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பயனில் இருந்து வந்துள்ளது.

பி.கு.: இந்த கட்டுரையை நான் முதலிலேயே எழுதிவிட்டேன். ஆனால் சில மொக்கை பதிவுகளால், இதனுடைய இடுகை தள்ளிப்போடப்பட்டு, இப்போது இதன் பாகம்-2-வுடன் வெளிவரும் நிலை.