Friday, June 15, 2007

எங்க வாத்தியார் சொன்ன வரலாறு

என்னுடைய பள்ளிபருவத்தில், தன்னுடைய சொற்பொழிவைப் பற்றி தானே பெருமையாக சொல்லிக் கொள்ள(கொல்ல) கூடிய ஒருவர் எனக்கு தமிழாசிரியராக இருந்தார். அவர் ஒருநாள் எங்கள் வகுப்பில் தன்னுடைய மகாபாரத சொற்பொழிவை கேட்க பலர் வருவதாகவும், தான் வருணிப்பதைக் கண்டு அனைவரும் மெய்மறப்பதாகவும் நாங்களும் அதை கண்டு களிக்க வேண்டும் என்று கூறினார். அன்று மாலை என்னுடைய நண்பன் ஒருவன் என்னுடைய வீட்டிற்கு வந்து “டேய்! நம்ம தமிழ் வாத்தி கோவிலில் சொற்பொழிவு ஆத்துராரு! போலாம்டா... நமக்கும் டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும். அவருக்கும் சோப்பு போட்ட மாதிரியும் இருக்கும்” என்று சொன்னான். நானும் சரியென்று அவனுடன் கிள்ம்பினேன்.

அங்கு சொற்பொழிவில் கேட்க ஆளில்லாமல் ஈ அடித்துக்கொண்டு இருந்தது. ஐந்தாறு வயதானவர்களும் நாலைந்து வாண்டுகளையும் தவிர யாரும் இல்லை. அன்று எங்கள் தமிழ் ஆசான் வாலிவதைப் படலத்தை வருணித்து எல்லோரையும் வதைத்துக்கொண்டு இருந்தார். கோவிலில் சுண்டல் வாங்கிய களைப்பு தீர நாங்களும் சற்று அமர்ந்தோம். சற்றுநேரம் கழித்து வாலிவதைப் படலத்தோடு தொடர்பு படுத்தி தனக்குத் தெரிந்த அலெக்ஸாண்டர் கதையையும் அவிழ்த்துவிட்டார். வரலாறா? இல்லை தெலுங்கு மாசாலாபடமா? என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு கதை! ஆனால் இதே கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் பழைய திரைப்படம் ஒன்று உண்டு. அப்படத்தில் தாராசிங் அலெக்ஸாண்டராகவும் ப்ரித்விராஜ்கபூர் (ராஜ்கபூரின் தந்தை) போரஸாகவும் சாய்ராபானு அலெக்ஸாண்டரின் மனைவியாகவும் நடித்திருந்தார்கள். அக்கதை என்னவென்றால் அலெக்ஸாண்டருக்கும் போரஸுக்கும் போர் மூள்கிறது. போரில் போரஸின் கை ஓங்கி இருக்கும் சமயம், அலெக்ஸாண்டரின் மனைவி போரஸின் கூடாரத்திற்குச் சென்று, தன் கணவரைக் கொல்ல வேண்டாம் என்று வரம் (யோவ்! எத்தனை நாளைக்கு இப்படி ஏமாத்துவீங்க) கேட்கிறாள்.

வரம் கேட்டவளை தன்னுடைய உடன்பிறப்பாக பாவித்து, போரஸும் மறுநாள் அலெக்ஸாண்டரை கொல்லாமல் விடுகிறான். முடிவு, போரஸ் போரில் தோற்கிறான். பிறகு வருவன எல்லோருக்கும் தெரியும். போரஸ் தன்னை ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என முழங்க, அலெக்ஸாண்டரும் போரஸின் போர்வீரத்தையும் துணிச்சலையும் மெச்சி அவனுடைய தேசத்தை அவனுக்கே திருப்பி அளிக்கிறான். இவ்வாறாக அலெக்ஸாண்டர் கதையைக்கூறியபடி தமிழ் ஆசான் தன்னுடைய வதைப்படலத்தைத் தொடர்ந்தார். மறுநாள் காலை எங்களுடைய வரலாற்று ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும், தவறான வரலாற்றைக்கூறி ஒரு தமிழாசிரியர் சொற்பொழிவாற்றியதாக பொரிந்து கொண்டிருந்தார். நானும் என் நண்பனும் விஷயம் புரிந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அன்று எனக்கு எழுந்த கேள்வி இன்றும் எனக்கு உண்டு. அந்தக்கதை ஒரு வரலாற்றுப் பொய்யா? இதன் விடை ஆம்.
அலெக்ஸாண்டர் வெறும் போர்வீரன் மட்டும் அல்ல. கி.மு.333-ல் ஒரு பெரிய மேற்கு- கிழக்குலக கலாசார புரட்சிக்கு வித்திட்டவன். தன்னுடைய 33 வயதில் அறிந்த உலகில் பெரும்பாலான பகுதியை வென்றவன். அலெக்ஸாண்டரின் படை வெறும் 40000 வீரர்களைக் கொண்டிருந்தாலும், அவனுடைய போர் வியூகங்களும் கட்டுக் கோப்பான படையும் (நீளமான ஈட்டிகளையுடைய கட்டுக்கோப்பான காலாட்படை பலமான தடுப்புசக்தியை உடையது) பாரசீக மன்னன் மூன்றாம் டாரீயஸின் ஒன்றரை லட்சம் பேர் கொண்ட படையை சிதறியோடச் செய்து மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்தன.
இரண்டு வருடத்திற்கு முன் வெளிவந்த ‘அலெக்ஸாண்டர்’ எனும் ஆங்கில திரைப்படத்தில், இது குறித்த சில காட்சிகளும் உண்டு. அஃதாவது பொதுவாக மன்னன் இறந்தாலோ போரைவிட்டு ஓடினாலோ படை நெகிழ்வதையே பாரசீக படை பலவீனமாக கொண்டிருந்தது (இது போன்ற திருப்பங்களை இந்திய போர்வரலாற்றிலும் காணலாம்!). அலெக்ஸாண்டர் மற்றும் போரஸிடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326-ல் நடைபெற்ற போர் (Battle of hydaspes) அலெக்ஸாண்டருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. குறிப்பாக, அலெக்ஸாண்டர் தன் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டதற்கு முக்கிய காரணங்களாக வரலாற்றாசிரியர்கள் அடுக்குவது:
(1) நாட்டைவிட்டு வெகுகாலம் பிரிந்த படையினரது மனநிலை மற்றும் அழுத்தம், (2) சிற்றரசன் போரஸிடம் 500 யானைகள் இருந்ததைக் கண்டு மிரண்ட கிரேக்கப்படை; ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட யானைகளுள்ள படையைக்கொண்ட கங்கைச்சமவெளியில் அமைந்துள்ள நந்த பேரரசின் பாரிய படையை எதிர்கொள்ள வேண்டிய சூழல்.

ஆனால் எங்க தமிழ் வாத்தியார் சொன்ன ‘தாலி செண்டிமெண்ட்’ கதை சும்மா டுபாக்கூர்தான். இதற்கு ஒரு வரலாற்று தடயமுமோ அல்லது கணிப்போ இல்லை. வரலாறு தெரிந்தால் சொல்லுணும்! இல்லாட்டி சும்மா இருக்கணும்!

11 comments:

  1. அது நிச்சயம் டுபாக்கூர் கதையாத்தான் இருக்கணும். அலெக்ஸாண்டடோட மனைவி கேட்டுக்கிட்டதுனாலதான் போரஸ் விட்டுக்குடுத்தான் அப்படிங்கறது வீரர்களையே அவமானப்படுத்தர மாதிரி இல்ல இருக்கு

    ReplyDelete
  2. என்னங்க சின்ன அம்மணி பார்க்கவே முடியல! பிஸியா?

    ReplyDelete
  3. பிசாசு,
    நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இந்தப் போருக்குப் பின்னால போரஸ் தன்னோட மகளையோ தங்கையையோ அலெக்ஸாண்டிருக்குக் கட்டி வைப்பாருன்னு நினைவு.. இத வச்சி உங்க தமிழைய்யா ரீமிக்ஸ் பண்ண முயன்றிருப்பாரு..

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு திரு குட்டி பிசாசு அவகர்ளே
    வீ எம்

    ReplyDelete
  5. பொன்ஸ் அக்கா,

    உங்கள் சொன்னது மாற்றம் செய்யப்பட்டுவிட்டது!!
    நீங்க சொன்னது சரிதான்! போரஸ் தன்னுடைய மகளை ஒரு ஒப்பந்தம் காரணமாக அலெக்ஸாண்டருக்கு மணமுடித்துக் கொடுத்தான் என்றொரு குறிப்பு உண்டு. வேண்டும்னா ஒரு "பாசமலர்" படம் காட்டலாம்!

    ReplyDelete
  6. வீ.எம்.,

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  7. நல்ல தமிழ் வாத்தியாரு...நல்ல பிசாசு...

    ReplyDelete
  8. ungka thamiz vathiyaarukku cinema-la niraiya chance irukku

    ReplyDelete
  9. தமிழாசிரியரைச் சற்றே சாடுவதற்காக குறி வைத்துத் தாக்குவது போன்றதொரு தோற்றத்தை ஏறபடுத்துகிறது. அவரிடமே விளக்கம் கேட்டிருக்கலாமே. ஏதேனும் அடிப்படையில் சொல்லி இருக்கலாமே !

    ReplyDelete
  10. சீனா ஐயா,

    //தமிழாசிரியரைச் சற்றே சாடுவதற்காக குறி வைத்துத் தாக்குவது போன்றதொரு தோற்றத்தை ஏறபடுத்துகிறது. //

    தமிழாசிரியரை நான் சாடுவதற்காக சொல்லவில்லை! அப்படி தோன்றியிருப்பின் மன்னிக்கவும். (என்ன கொஞ்சம் அதிகமாக நக்கல் பண்ணிட்டேன் போல, கோபம் படாதிங்க!! :) )வரலாற்றைத் திரித்து ஏன் கூறவேண்டும் அதைத் தான் கேட்டேன்.

    //அவரிடமே விளக்கம் கேட்டிருக்கலாமே. ஏதேனும் அடிப்படையில் சொல்லி இருக்கலாமே//

    விளக்கம் கேட்கும் அளவிற்கு அவர் அணுகமுடியாதவர். (அதிகமாக கோபம் படுவார்).

    ReplyDelete
  11. tamil and history teachers are generally like this case

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய