Friday, November 23, 2007

உலகமயமாக்களுக்குப் பிறகு ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு


இந்தியாவில் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு சரிவை சந்தித்துள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையொன்று கூறுகிறது. அரசால் கூறப்பட்ட பெரிய பொருளாதார வளர்ச்சியின் நடுவிலும், 1990-ல் 43%-ஆக இருந்த வேலைவாய்ப்பு 2002-ல் 38%-ஆக குறைந்துள்ளது. படிப்பின்மை, வேலை வாய்ப்பின்மை, சமுதாய கவனமின்மை ஊனமுற்றோர்களை வெகுவாக பின்னுக்குத்தள்ளிவிட்டது.

பொதுவாக தனியார்துறையில் ஊனமுற்றோருக்கான எந்தவித சலுகைகளோ, ஊக்கமோ அளிக்கப்படுவதில்லை. 1990-களில் தனியார் துறைகளில் வெறும் 0.3% ஊனமுற்றோர்கள் வேலையில் இருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில், 0.05%க்கும் குறைவான அளவே ஊனமுற்றோர் வேலையில் உள்ளனர். இவ்வாறு இவர்கள் புறக்கனிக்கப்படுவதை சற்று அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு சில பெருமகனாரின் வளர்ச்சியை பூதகண்ணாடி கொண்டு பார்த்துவிட்டு, படிப்பறிவில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி என்றெல்லாம் தம்பட்டம் அடிப்பது வெறும் அபத்தம்.

(கடந்த செப்டம்பர் மாதம் முன் கண்பார்வையற்றோர் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய இரக்கமற்ற அடக்குமுறை).

கல்வித்துறையில் மேற்கூறியவற்றை விட மிக மோசமான சூழ்நிலை உள்ளது குறிப்பிடதக்கது. சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களில் 6-10% எண்ணிக்கையானவர்கள் படிப்பினை தொடர முடியாமல் நிறுத்திவிடுகின்றனர். இதைவிட அதிகமாக ஊனமுற்றோர் 38% உள்ளனர். மற்ற பிள்ளைகளை விட ஊனமுற்ற பிள்ளைகள் 5.5 மடங்கு அதிகமாக கல்வியைத் தொடர முடியாமல் விடுகின்றனர். இந்த புள்ளியல் விவரம் உலகவங்கியால் வெளியிடப்பட்ட People with Disabilities in India: From Commitments to Outcomes ஆய்வறிக்கையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஊனமுற்றவர்களில் 64% பெண்களும், 36% ஆண்களும் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். இந்தியாவின் படிப்பறிவில் முன்னணி மாநிலங்களான கேரளாவில் 27%-ம், தமிழகத்தில் 34%-ம் ஊனமுற்றோர் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கின்றனர். அதாவது, ஊனமுற்றோருக்குத் தேவையான இந்த கல்வி வாய்ப்பினை அளிக்காமல் "எல்லோருக்கும் கல்வித் திட்டம்" 100% முழுமை அடையாது. கல்வியில் துவக்கப்பள்ளியைக் கூட கடந்து செல்ல முடியாத அளவிற்கு அவர்களை மேலும் ஊனப்படுத்தாமல், அரசு அவர்களுக்கு வேண்டிய வசதிகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று உலகவங்கியின் ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இன்றும் கிராமப்புறங்களில் நடந்து சென்று படிக்கும் மாணவர்கள் உள்ளனர். ஊனமுற்ற மாணவர்கள் பள்ளிக்கு வரவே முடியாதவர்களாகி விடுகின்ற போது, எங்ஙனம் படிப்பில் அரசு அளித்துள்ள சலுகையைப் பெற இயலும்அல்லது வேலைவாய்ப்பைப் பெற முடியும். ஆகவே அரசு இது போன்ற அடிப்படைப் பிரச்சனையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் நடவடிக்கை எடுப்பதே சிறந்த செயலாகும். நம் தமிழ்மண வலைப்பதிவாளர் மற்றும் வாசகர்களின் வேண்டுகோளும் அதுவே!!!

7 comments:

  1. timely post. the higher authorities should eye on this issue.

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. மெய்யாலுமே,..நல்ல பதிவு இது,...எல்லோரும் யோசிக்க வேண்டிய விசயம்!!,.. நம்ம government இத கவனிக்கனும்னா,..நிறைய 'specially abled' (இந்த வார்த்தைக்கான தமிழ் வார்த்தை தெரியல) மக்கள் உருவாகனும்,..அப்போ தான் ஓட்டு வங்கிக்காகவாது உதவி செய்வார்கள்.!!

    ReplyDelete
  4. // கார்த்திக் said...

    மெய்யாலுமே,..நல்ல பதிவு இது,...எல்லோரும் யோசிக்க வேண்டிய விசயம்!!,.. நம்ம government இத கவனிக்கனும்னா,..நிறைய 'specially abled' (இந்த வார்த்தைக்கான தமிழ் வார்த்தை தெரியல) மக்கள் உருவாகனும்,..அப்போ தான் ஓட்டு வங்கிக்காகவாது உதவி செய்வார்கள்.!!//

    தோழரே,

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

    ReplyDelete
  5. புரிதலுக்கு நன்றி

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய